இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்தை தொடர்ந்து தற்போது ‘டெக்ஸ்லா’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியிருந்தது. இதில் பழைய காலத்தில் சிறுவர்கள் திரை கொட்டகத்தில் படம் பார்க்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து ஜெய் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பதாக போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினரை தாண்டி பாலா, சீமான், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் சமுத்திரக்கனி பேசுகையில், “இந்த அற்புதமான தொடக்கம் ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கிறது. ரொம்ப நாளுக்கு பிறகு இந்த பூஜைக்கு திரையுலகமே திரண்டிருக்கிறது. ஏனென்றால் சமீப காலங்களாக எல்லாமே சுருங்கி விட்டது. அந்த விழாக்களில் படம் சம்மந்தப்பட்ட நபர்கள் தான் வருவார்கள். புதிதாக யாரும் வரமாட்டேங்குகிறார்கள். ஆனால் இதில் நிறைய பேர் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
தயாரிப்பாளர் கண்ணன் ரவியுடன் பயணித்தது மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது. அப்போது சம்பாதிப்பதில் ஒரு பகுதியை மற்றவர்களுக்காக கொடுக்க எடுத்து வைத்துவிடுவதாக சொன்னார். அந்த மனசுக்காகவே அவர் ஆயிரம் படங்கள் பண்ணுவார்” என்றார்.
Follow Us