சமந்தா, தற்போது ‘ரக்த் பிரம்மாந்த்’(Rakt Brahmand) என்ற இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். மேலும் ‘பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இதனிடையே ‘டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். இதன் மூலம் ‘சுபம்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்திருந்தார். இப்படம் கடந்த மே மாதம் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் சமந்தா ஹைதராபாத்தில் ஒரு கடை திறப்பு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அங்கு அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து சமந்தா காருக்கு சென்றபோது அவரிடம் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் முண்டியடித்துள்ளனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு ரசிகர்கள் கூட்டத்தில் சமந்தா சிக்கினார்.
பின்பு பாதுகாவலர்கள் உதவியுடன் வேகமாக காரில் ஏறி சென்றார். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் நடிகை நிதி அகர்வாலும் ஒரு பட நிகழ்ச்சிக்காக ஒரு மாலுக்கு சென்றிருந்த நிலையில் அவரும் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பின்பு காரில் ஏறி சென்றார். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் ரசிகர்கள் கட்டுபாடற்று இருப்பதாகவும் சமூக பொறுப்புணர்வும் போதிய அளவில் இல்லை என்றும் பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.
Follow Us