மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில், ‘பாண்டியன், குணா, தேவர் மகன் போன்ற 109 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் அந்த படங்களின் இசை வெளியீட்டு உரிமையை இளையராஜாவின் மனைவி ஜீவா நடத்திய இசை நிறுவனத்திடம் இருந்து தாங்கள் பெற்றுள்ளோம்.
ஆனால் எங்களுடைய அனுமதியில்லாமல் அந்த பாடல்களை யூட்யூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் இளையராஜா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார். இதையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது இளையராஜா தரப்பில் 1997ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்த போது யூட்யூப் மற்றும் சமூக வலைதளங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் ஆடியோ ரிலீஸ் தொடர்பாக மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இன்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர் கூறியதாவது, ‘இளையராஜா பாடல்கள் அவருக்கே சொந்தம். அவர் என்றைக்குமே அவரது பாடல்களுக்கான காப்புரிமையை தயாரிப்பாளர்களிடம் வழங்கியதில்லை. படத் தயாரிப்பாளர்களுக்கு சம்பந்தப்பட்ட படத்தில் பயன்படுத்துவதற்காக உரிமையை மட்டுமே அளித்தார்’ என்றார். இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Follow Us