Skip to main content

இதுவரை சொல்லப்படாத ஒரு போலீஸ் கதை... ‘ரைட்டர்’ விமர்சனம்

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

writer movie review

 

அதிரடி சண்டை, புழுதி பறக்கும் சேஸிங் காட்சிகள், மூச்சு பிடித்து மூன்று நிமிஷம் பேசும் பரபரப்பான பஞ்ச் வசனங்கள், காதைக் கிழிக்கும் புல்லட் சத்தம் என நாம் இதுவரை பார்த்துப் பழகிய பல்வேறு போலீஸ் படங்களின் மத்தியில், இது எதுவுமே இல்லாமல் மென்மையான போலீஸ் படமாக வெளிவந்துள்ளது ‘ரைட்டர்’ படம். நாம் பார்த்துப் பழகிய போலீஸ் படங்கள் நமக்குக் கொடுத்த அதே கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்ஸ்களை இப்படம் கொடுத்ததா...?

 

போலீசில் சீனியர் ரைட்டராக இருக்கும் சமுத்திரக்கனி, போலீசுக்கு என ஒரு சங்கம் அமைக்க முயற்சி செய்கிறார். இது பிடிக்காத சில போலீஸ் அதிகாரிகள், அவரை வேறு ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்ஃபர் செய்கின்றனர். வந்த இடத்தில் சமுத்திரக்கனி, அப்பாவி கைதியான ‘மெட்ராஸ்’ பட ஜானி புகழ் ஹரிக்கு பாரா டூட்டி பார்க்கிறார். அப்போது சமுத்திரக்கனி உதவியுடன் தேசத் துரோக வழக்கில் ஹரி சிக்க வைக்கப்படுகிறார். இதை அறிந்த சமுத்திரக்கனி குற்ற உணர்ச்சியால் ஹரியை காப்பாற்ற முயற்சி செய்கிறார். அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததா, இல்லையா? என்பதே ‘ரைட்டர்’ படத்தின் மீதி கதை.

 

writer movie review

 

எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாத அழுத்தமான போலீஸ் கதையை சிறப்பாக கையாண்டு, அதை ரசிக்கும்படியும் கொடுத்துள்ளார் இயக்குநர் ஃபிராங்கிளின் ஜேக்கப். கதையாடல் உண்மைக்கு நெருக்கமாகவும், அதே சமயம் சொல்லப்படாத ஒரு கதையை அழுத்தமான திரைக்கதை மூலமும் கொடுத்துள்ளது. இது பல இடங்களில் பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது. உண்மை சம்பவங்களுடன் சற்று சினிமாத்தனத்தையும் கலந்து அயர்ச்சி ஏற்படாதவாறு சிறப்பாக பேலன்ஸ் செய்துள்ளார் இயக்குநர். குறிப்பாக கமர்சியல் அம்சங்களைத் தவிர்த்துவிட்டு போலீசில் நடக்கும் யதார்த்தமான சம்பவங்களை சரிவர படம்பிடித்து, கரப்ட் ஆபீசர்களின் முகத்திரையைக் கிழித்துள்ளார்.

 

சமுத்திரக்கனி ரைட்டர் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நடை, உடை, பாவனை என அனைத்தும் அப்படியே கதாபாத்திரத்துடன் ஒன்றி உயிர் கொடுத்துள்ளது. மேல் அதிகாரிகளிடம் திட்டு வாங்கும் காட்சிகளிலும் சரி, கைதிகளிடம் பரிவு காட்டும் காட்சிகளிலும் சரி, சக காவலர்களுடன் பழகும் காட்சிகளிலும் சரி முதிர்ச்சியான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். சமுத்திரக்கனியுடன் நடித்துள்ள ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படம் புகழ் ஆன்டணி கலகலப்பான வசனங்கள் பேசி, தியேட்டரில் கைதட்டல் பெற்றுள்ளார். இவரது எதார்த்தமான நடிப்பு படத்திற்குப் பக்கபலமாய் அமைந்துள்ளது. அதுவே படத்திற்கு வேகத்தையும் கூட்டியுள்ளது. 

 

நடிகர் ஹரியின் அண்ணனாக வரும் இயக்குநர் சுப்பிரமணிய சிவா தனது நடிப்பால் கண்கலங்க வைத்துள்ளார். இவரது அப்பாவியான நடிப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதியும் படியான அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இனியா. தைரியமான பெண்மணியாக வரும் இவரது நடிப்பு கைதட்டல் பெறுகிறது. சமுத்திரக்கனியின் மனைவியாக எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி நடிகை மகேஸ்வரி அவரது வேலையை சிறப்பாக செய்துள்ளார். 

 

writer movie review

 

போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாபாரதி, டிசியாக வரும் கவின் ஜெய் பாபு ஆகியோர் அக்கதாபாத்திரங்கள் மீது எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் காவல் நிலையத்தில் நடக்கும் அட்டூழியங்களை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. அது பார்ப்பவர் மனதிலும் பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. 

 

பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவில் போலீஸ் நிலைய காட்சிகள் எதார்த்தமாக அமைந்துள்ளது. கோவிந்த் வசந்தா பின்னணி இசை படத்துக்குத் தூணாக அமைந்து, படத்தைத் தாங்கிப் பிடித்துள்ளது.

 

கமர்சியல் அம்சங்களுடன் கூடிய பரபரப்பான போலீஸ் படங்களையே பார்த்துப் பழகிய நமக்கு இந்தப் படம் ஒரு புது அனுபவத்தைக் கொடுத்து 'அடடே' போடவைத்துள்ளது. இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் அமைய பிரகாசமான வாய்ப்பு உண்டு.

 

‘ரைட்டர்’ - அழுத்தமான சாட்டையடி!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“சுழற்சியை நோக்கி நகரும் விஜய்யின் பின்னால் நான் நிற்பேன்” - சமுத்திரக்கனி திட்டவட்டம்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
samuthirakani about vijay political entry

நடிகர் சமுத்திரக்கனி ஹீரோ, வில்லன், முக்கிய கதாபாத்திரம் எனப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபு திலக் தயாரிப்பில் என்.ஏ. ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (15.03.2024) திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நக்கீரன் ஸ்டூடியோவிற்கு சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி, இசையமைப்பாளர் ரகுநந்தன் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர்.  

அப்போது விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் எப்போதும் விஜய்க்கு ஆதரவு தருவேன். ஒரு படத்துக்கு 200 கோடி சம்பாதிக்கக் கூடிய மனிதன், நடிக்கிறதை நிறுத்துறேன் என சொல்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும். தெலுங்கில் பவன் கல்யாணுடன் வேலை பார்த்திருக்கிறேன். அவரும் அரசியல் தளத்தில் தான் இருக்கிறார். அவர் கூட அப்படி சொல்லவில்லை. கையில் மூனு படம் வச்சிருக்கார். தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களும் அரசியலுக்கு வந்திருக்காங்க. வரேன்னு சொல்லியிருக்காங்க. யாருமே நடிப்பை நிறுத்தவில்லை. விஜய் முழுக்க முழுக்க மக்களுக்காக சேவை செய்கிறேன் என சொல்கிறார். இப்படி சொல்கிற தைரியம் யாருக்குமே வரவில்லை. அந்த தைரியத்திற்கே முதலில் ஒரு சல்யூட். அதன் பிறகு என்ன வேணும்னாலும் குறை சொல்லலாம்.  

படம் இல்லாமல் தோத்து போய் அவர் வரவில்லை. அவர் நிறைய சம்பாதிச்சு வச்சிருக்கார். ஏதோ ஒன்னு செய்வோம் என்றுதானே வருகிறார். அவருக்காக 100 தயாரிப்பாளர்கள் கூட காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சூழலில் அவர் வந்திருப்பது மிகப் பெரிய விஷயம். அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகள், நல்ல விதமாக அமைய வேண்டும். அதற்கு இந்த பிரபஞ்சம் ஆதரவு தர வேண்டும். எல்லாம் கூடி வந்து அவர் நினைக்கிறது இந்த மக்களுக்கு போய் சேரணும். நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான், குறிப்பிட்ட காலம் வரை இந்த சமூகத்திலிருந்து வாங்குங்க. ஒரு காலத்திற்கு பிறகு வாங்கினதை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுங்க. அதுதான் நீ சமூகத்திற்கு வந்ததற்கான ஒரு சுழற்சி. அதை நோக்கி ஒரு மனிதர் நகர்கிறார் என்பது சந்தோஷம். நல்ல தளத்தில் அவர் இயங்கினால் பின்னால் போவதில் தப்பில்லை. நான் கூட போவேன். அதற்கு தானே நாம் ஆசைப்படுகிறோம். 

எல்லா வகையிலும் தமிழக இளைஞர்கள், மக்கள் அனைவரும் பதட்டமாகத்தானே இருக்காங்க. குழப்பமா, சர்ச்சையோடே ஒரு பீதியில் தானே இருக்காங்க. அந்த பீதியை சரி செய்து மக்களை இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய நிலைக்கு யார் வந்தாலும், அவங்க பின்னாடி நிற்பேன்” என்றார். முன்னதாக விஜய் தனது கட்சி பெயர் அறிவித்தபோது, சமுத்திரக்கனி அவரது எக்ஸ் பக்கத்தில், “திரை உலகின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா ” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.