Skip to main content

இதுவும் போலீஸ் படம்தான்... ஆனால் கொஞ்சம் வேறமாதிரி..! டாணாக்காரன் - விமர்சனம்

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

vikram prabu lal starring taanakkaran review

 

கரோனாவிற்கு பிறகு ஓடிடிகளின் ஆதிக்கம் பெருமளவு அதிகரித்திருந்தாலும், துரதிருஷ்டவசமாக அவற்றில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையிலேயே அமைந்துவிடுகின்றன. இவற்றில் விதிவிலக்காக அவ்வப்போது அத்தி பூத்தார் போல் 'சே... இந்த படம் தியேட்டரில் வந்து இருக்கலாமே' என்ற எண்ணத்தைக் கொடுக்கும் சில படங்கள் வெளியாகி நமக்கு பரவசத்தைக் கொடுப்பதுண்டு. அந்த வரிசையில் தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள டாணாக்காரன் விதிவிலக்காக அமைந்ததா?

 

போலீஸ் ஆக வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் விக்ரம் பிரபு அதற்கான தேர்வில் வெற்றிபெற்று காவலர் பயிற்சிப் பள்ளியில் சேருகிறார். அங்கு பயிற்சியாளராக இருக்கும் நடிகர் லால் பயிற்சிக்கு வரும் காவலர்களை அடிமைகளைப் போல நடத்தி மிரட்டுகிறார், அரசியல் செய்கிறார். இதனால் பயிற்சிக்கு வந்த விக்ரம் பிரபுவுக்கும் லாலுக்கும் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

 

ஒரு நல்ல படைப்பானது பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்க, அழ வைக்க, கோபப்படுத்த, உணர்ச்சிவசப்பட, ஆசுவாசப்படுத்த, மெய்சிலிர்க்க வைக்க, பரவசப்படுத்த, சிந்திக்க வைக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒரு படம் கொடுக்கும்பட்சத்தில் அந்தப் படம் வெற்றிப் படமாக அமையும். 'ஜெய்பீம்' புகழ் போலீஸ்காரர் தமிழ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் டாணாக்காரன் திரைப்படம் மேற்குறிப்பிட்டுள்ள காரணிகளின் அடிப்படையில் நல்ல படங்களின் வரிசையில் இணைந்துள்ளது. 

 

இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் கதைகள் வந்திருந்தாலும், அவை பெரும்பாலும் ரவுடிகளை கொல்லும் போலீஸ் படங்களாகவும், அண்டர் கவர் ஆபரேஷன் செய்யும் ஹீரோவின் கதைகளாகவுமே இருந்திருக்கின்றன. ஆனால், அவற்றிலிருந்து பெருமளவு வேறுபட்டு, போலீஸ் ஆவதற்கு முன்பு பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது டாணாக்காரன். 

 

தமிழ் சினிமாவில் பெரிதாகப் பேசப்படாத ஒரு கதையை மிக அருமையாகக் காட்சிப்படுத்தி புதுமையான விஷயங்களைக் கதைக்குள் புகுத்தி, திறம்படப் படத்தைக் கையாண்டு ஒரு நல்ல படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் தமிழ். போலீஸ் பயிற்சி பள்ளியில் நடக்கும் அவலங்களையும், மிரட்டல்களையும், அரசியலையும் நேரடியாகத் தோலுரித்துக் காட்டி, பார்ப்பவர்கள் மனதுக்குள் பல கேள்விகளை எழச் செய்துள்ளது இப்படம். முதல் பாதி வேகமாகக் கடந்து செல்கிறது. இரண்டாம் பாதியில் சில இடங்களில் சற்றே தொய்வுகள் தென்பட்டு அயற்சியைக் கொடுத்தாலும் இந்த கதைக் களமும் கதை சொல்லப்பட்ட விதமும் ரசிக்கும்படி அமைந்து படத்தை விறுவிறுப்பாக முடித்துள்ளது. 

 

விக்ரம் பிரபு, லால், எம்.எஸ்.பாஸ்கர் எனப் படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவருமே நடிப்பில் ஜொலித்துள்ளனர். அந்தளவு படத்தில் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. நாயகன் விக்ரம் பிரபு இப்படத்திற்குப் போட்ட உடல் உழைப்பாலும் நடிப்பாலும் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார். பல நடிகர்கள் நடிக்கத் தயங்கும் இந்த கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்து அசத்தி உள்ளார். இது போன்ற கதைகளை அவர் வரும் காலங்களில் தேர்வு செய்யும்பட்சத்தில் அவருக்கும் நல்லது, படம் பார்க்கப்போகும் நமக்கும் நல்லது.

 

பயிற்சியாளர் ஈஸ்வரமூர்த்தி ஆக நடிப்பில் மிரட்டியுள்ளார் நடிகர் லால். இவரது கம்பீரத் தோற்றமும், கணீர் குரலும், நிமிர்ந்த நடையும், வெறுப்பு உண்டாகும்படியான நடிப்பும் படத்திற்கு பக்கபலமாக அமைந்து மிரட்டியுள்ளன. இவரது கதாபாத்திரமும், விக்ரம் பிரபு கதாபாத்திரமும் படத்தில் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்பதைப்போலத் தோன்றி, பார்ப்பவர்களைக் கதையோடு பயணிக்க வைத்துள்ளது. படத்தில் நாயகி இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார் நடிகை அஞ்சலி நாயர்.

 

ஒரு சிறந்த குணச்சித்திர நடிப்பை இப்படத்திலும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் எம்.எஸ். பாஸ்கர். இதேபோல மற்ற முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ள மதுசூதன ராவ், பாவல் நவகீதன், போஸ் வெங்கட், பிரகதீஸ்வரன், கார்த்திக் ஆகியோரும் அவரவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்து கவனம் பெற்றுள்ளனர். 

 

பயிற்சிப் பள்ளியில் போலீசாக நடித்திருக்கும் நடிகர்கள் எந்த அளவு சிரமப்பட்டு நடித்தார்களோ, அதே அளவு சிரமப்பட்டுச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். குறிப்பாக அடிக்கின்ற வெயிலில் மைதானம் சம்பந்தப்பட்ட காட்சிகளைச் சிறப்பாகக் கையாண்டு கைதட்டல் பெற்றுள்ளார். ஜிப்ரான் இசையில் பாடல் ஓகே. பின்னணி இசையானது காட்சிகளை மெருகேற்றி ரசிக்க வைத்துள்ளது. அதேபோல் சில காட்சிகளில் இவரது பின்னணி இசை பார்ப்பவர்களைக் கண்கலங்கச் செய்து நெகிழச் செய்கிறது.

 

மொத்தத்தில், தமிழ் சினிமாவில் இதுவரை பெரிதாகப் பேசப்படாத ஒரு கதையைத் தேர்வு செய்து, அதனை சலிப்பு ஏற்படாத வகையில் கொடுத்ததற்காகவே இந்த படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம்.

 

டாணாக்காரன் - வலிமையானவன்!
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!