Skip to main content

நெஞ்சுக்கு நீதி - தாத்தாவின் தலைப்பில் பேரன் விதைத்த நம்பிக்கை!

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

views on caste system through nenjuku neethi movie

 

"எங்க தாத்தா ஒன்னு சொல்லுவார் சார். எல்லோரும் சமம்னா யாரு ராஜா?.... அவுங்கவங்க அவுங்கவங்க இடத்துல இருக்கணும்னு. அவர் மட்டும் இன்னைக்கு இருந்திருந்தா 'போயா... ம**"னு சொல்லிருப்பேன் சார்" என்று சாதி ஏற்றத்தாழ்வை வாழ்க்கை நெறிமுறை போல சொல்லி வலியுறுத்தும் தனது தாத்தாவைப் பற்றி மயில்சாமி நடித்துள்ள 'வில்லாளன்' பாத்திரம் பேசும்போது திரையரங்கம் கைதட்டல்களால் அதிர்கிறது. அத்தகைய தாத்தாக்களை, அப்போதே அதை விட மோசமாகத் திட்டிய (தனது செயல்பாட்டால்) ஒரு தாத்தாவை பெற்ற மாநிலம் தமிழகம். இருந்தாலும் ஆண்டாண்டு காலமாய் ஆழம் பெற்றுப்போன நோய்க்கு ஒரு மருத்துவர் போதவில்லை என்பது உண்மை. இன்றும் அவ்வப்போது, ஆங்காங்கே நடக்கும் சம்பவங்கள் அதை நிரூபிக்கின்றன. அந்த மிச்ச சொச்ச மிருகங்களின் மனசாட்சியை உலுக்கிக் கேட்கிறது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'நெஞ்சுக்கு நீதி'.         

 

'மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் உள்ளிட்ட எதன் அடிப்படையிலும் எந்த ஒரு இந்திய குடிமகனுக்கும் பாகுபாடு காட்டக்கூடாது' என்று சொல்லும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவான 'ஆர்டிகள் 15'ஐ அடிப்படையாகக் கொண்டு அதே தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்று, விவாதங்களை உண்டாக்கிய படம் 'ஆர்டிகள் 15'. அந்தத் திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகி வெளிவந்துள்ளது 'நெஞ்சுக்கு நீதி'. மிக முக்கியமாக சொல்லப்பட வேண்டிய ஒரு சமூக பிரச்சனை, ஒரு கதை, அதை தமிழ்நாட்டுக்குப் பொருந்தும் வகையில் சொல்வது எப்படி? இன்றும் பொழுதுபோக்கு அம்சமாகவே பெரும்பாலானோரால் பார்க்கப்படும் சினிமாவில் அந்தக் கதையை சுவாரசியமாகக் கொண்டு வருவது எப்படி? இந்த இரண்டு சவால்களிலும் வென்றிருக்கிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். இந்தி படத்தில் சில சிறு மாற்றங்களை செய்து தமிழகத்தின் அரசியல் - சமூக சூழல், வரலாற்றுக்கு ஏற்ப செம்மையாக உருவாக்கியிருக்கிறார்.        

 

views on caste system through nenjuku neethi movie

 

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் கூலியை 30 ரூபாய் உயர்த்திக் கேட்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு நேரும் கொடுமை... அதை விசாரிக்கும் பொறுப்பை ஏற்பது தமிழக கிராமங்களின் சமூக சூழல் முழுமையாக தெரியாத, வெளிநாட்டில் படித்து வந்த IPS அதிகாரி விஜயராகவன் (உதயநிதி)... அதற்கான விசாரணை நடந்து நீதி கிடைப்பதில் உள்ள தடங்கல்கள்... இப்படி பயணிக்கும் கதையில் சாதி என்ற அமைப்பின் 360 டிகிரியையும் கையாண்டிருக்கிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். 'இந்த கடையில எல்லாம் நம்ம டீ குடிக்கக் கூடாது, இது பன்னிக அதிகம் இருக்கும் இடம்' என்று பேசும் மனநிலை தொடங்கி, ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த பெண் சமைத்தார் என்பதற்காக பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு கீழே கொட்டப்படுவது, சட்டம் பற்றிய கவலையும் மனிதர்கள் என்ற எண்ணமும் இல்லாமல் இன்றும் நிகழும் மனிதக் கழிவுகளை மனிதர் சுத்தம் செய்யும் கொடுமை, 30 ரூபாய் கூலி கேட்டதற்காக வதைத்துக் கொலை செய்யப்படும் கொடுமை என ஒவ்வொன்றையும் சொல்லி சாதி என்ற நோய் மனநிலை எவ்வளவு ஆழமாக இறங்கியிருக்கிறது என்பதையும் எவ்வளவு நுட்பமாகவும் நுணுக்கமாகவும் அந்தப் படிநிலைகள் பராமரிக்கப்படுகின்றன என்பதையும் உண்மை பொங்க சொல்லி இருக்கிறார்.    

 

உதயநிதியின் தேர்வுகளில் இந்தப் படம் உச்சம் என்று சொல்லலாம். சமூக நீதி மண்ணில் 'நெஞ்சுக்கு நீதி'க்கான தேவையும் இருக்கிறது என்பதை உணர்ந்து அவர் நடித்திருக்கும் இந்தப் படம் அவரது அரசியல் பொறுப்புணர்வையும் காட்டுகிறது. நடிப்பில் பக்குவம் கூடியிருக்கிறது. இது தொடர வேண்டும். பெரியார் புத்தகத்தை பார்த்தாலே எரியும் பாத்திரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி, தவறென்று தெரியாமல் வழி வழியாக சொல்லப்பட்ட பொய்களை நம்பி ஏற்றத்தாழ்வு பார்க்கும் பாத்திரத்தில் மயில்சாமி, தனக்கான உரிமையை பயன்படுத்தி காவல்துறை பணிக்கு வந்துவிட்டாலும் கூட ஆதிக்க திமிரில் திரிபவர்களின் கைகளில் பொம்மையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த 'மலைச்சாமி' பாத்திரத்தில் இளவரசு, அடக்கப்பட்ட வலி தாங்காமல் அத்துமீறி போராடும் தனது நண்பனை கெட்ட வழியில் போன குற்றவாளியாகப் பார்க்கும் 'வாசன்' பாத்திரத்தில் அப்தூல் லீ, அடி வாங்கியே பழக்கப்பட்ட மக்களில் இருந்து திமிறி எழுந்து திருப்பி அடிக்கும் போராளி 'குமரன்' பாத்திரத்தில் ஆரி என படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் சமூகத்தின் பல அடுக்குகளின் பிரதிநிதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. உதயநிதி மட்டுமே நாயகனாக அல்லாமல் ஒவ்வொரு பாத்திரமும் நாயகனாகும் தருணங்கள் படத்தில் உள்ளன. 

 

views on caste system through nenjuku neethi movie

 

அனைவரும் சமம் என சொல்லும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் இடத்தில் இருக்கும் காவல்துறைக்குள்ளேயே சாதியை அடிப்படையாகக் கொண்டு நிலவும் ஏற்ற தாழ்வுகள், பிற அரசு அலுவலகங்கள், அமைப்புகளில் இது பரவி இருக்கும் விதம், அந்த துறைகளின் இயக்கத்தையே இந்த சாதி உணர்வும் வெறியும் பாதிக்கும் சூழல் என ஒவ்வொன்றையும் தயங்காமல் விரிவாக விவரித்துள்ளது படம். 'தீட்டுன்னா என்ன' என்று ஆரம்பித்து, நம் சமூகத்தில் எத்தனை அடுக்குகள், பிரிவுகள், உட்பிரிவுகள் என பேசும் அந்தக் காவல் நிலைய காட்சி இந்த உண்மைகளின் உச்சம். அந்தக் காட்சியில் நமக்கு சிரிப்பு வருகிறது, ஆனால் அது நம் சமூகம் குறித்த அவமானமும் வெட்கமும் கலந்த சிரிப்பு. "அந்த தண்ணில அவுங்க குளிச்சா வராத அழுக்கு, நாங்க குடிச்சா வந்திருமா சார்?" என்ற ஆதங்கம்... "பல நூறு வருஷமா நாங்க பட்டினி கிடந்தோம், அந்த பசியே உங்களுக்கு தெரியாதப்போ, நாங்க உண்ணாவிரதம் இருந்தா நீங்க மதிப்பீங்களா?" என்ற கொதிப்பு... "சாமில இருந்து சாப்பாடு வரைக்கும் நாங்க தீட்டு, எங்க பொண்ணுகளை நாசம் பண்ண மட்டும் தீட்டு இல்லையாடா?" என்ற கோபம்... இப்படி படத்தின் ஒவ்வொரு வசனமும் ஆயிரம் உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளன. வசனங்கள் மூலம் மிகச் சிறப்பான பங்களித்துள்ளார் தமிழரசன் பச்சமுத்து. 

 

பெரும்பாலான விசயங்கள் சரியாக இருக்கின்றன. அதையும் தாண்டி, தமிழகத்தில் சமூக நீதி இயக்கங்கள், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள் தீவிரமாக செயல்படும் நிலையில், படத்தில் இப்படி ஒரு கொடுமை நடந்திருக்கும் இடத்தில் எந்த இயக்கமும் களமிறங்கவில்லையா என்ற கேள்வி வருகிறது. (அதற்கு பதிலாக ஒரு வசனம் இருந்தாலும்) அதுபோல, இத்தனை ஆய்வுகள் செய்து உண்மைகள் நிறைந்து எடுக்கப்பட்ட படத்தில் சிறு நெருடலும் இருக்கிறது. இப்படிப்பட்ட கொடூரங்கள் நடக்கும்போது அதிகாரத்துக்கு அஞ்சாமல் தைரியமாக களத்தில் இறங்கிய ஊடகங்கள் இருக்க, சற்றும் பொருத்தமற்ற ஊடக அடையாளங்கள் களத்தில் இருப்பது போன்று முக்கியமான காட்சிகளில் படமாக்கப்பட்டுள்ளன. இதிலும் உண்மைதன்மை முக்கியம்தானே?     

 

நாய்க்குப் பெயர் வைத்தும், மனிதர்களை 'அதுங்க' என்றும், அழைக்கும் கூட்டத்திடம் சட்டையை கழற்றி சண்டை போடும் ஹீரோவாக இல்லாமல் சட்டப்படியே போராடி நீதியை நிலைநாட்டுகிறார் நாயகன் 'விஜயராகவன்' பாத்திரத்தில் உதயநிதி. படத்தின் க்ளைமாக்சில் நடப்பது போல முழு மனமாற்றம் நிகழும், அதுவும் தமிழ்நாட்டில் விரைவாக நிகழும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது படம். கலைஞரின் தலைப்பான 'நெஞ்சுக்கு நீதி'க்கு மரியாதை சேர்த்துள்ளது திரைப்படம். இதற்கு நெஞ்சை நிமிர்த்தி ஒரு சல்யூட் அடிக்கலாம். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Case registered against Minister Udayanidhi Stalin

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த 6 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதற்காக அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், “நமது சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு, கடந்த நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. அப்படியிருக்க, சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமம் தான் காரணம் என பழி கூற முடியுமா? வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை; செய்யும் தொழிலின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. சனாதனம் என்பது அழிவற்ற நிலையான, ஒழுக்க நெறிகளை குறிக்கிறது. ஆனால் சனாதனம் பற்றி நீங்கள் பேசிய கருத்து முற்றிலும் தவறு” என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் சனாதன தர்மம் குறித்துப் பேசியது தொடர்பாக மத உணர்வுகளை உதயநிதி ஸ்டாலின் புண்படுத்திவிட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பீகாரின் ஹர்ரா நகரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

“விளைவுகள் என்ன என்பது உங்களுக்கு தெரியாதா?” - அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Supreme Court question to Minister Udayanidhi for sanathanam

கடந்த 2023ஆம் ஆண்டு சென்னையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து உதயநிதி ஸ்டாலிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இதனையடுத்து, இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு ஒரே வழக்காக மாற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (04-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘சனாதனம் தொடர்பாக நீங்கள் சொன்ன கருத்துக்களின் விளைவுகள் என்ன என்பது உங்களுக்கு தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர். ஒரு அமைச்சராக இருந்து தனது சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். சொல்லும் கருத்துக்களின் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்துள்ளீர்கள்’ என்று கருத்து தெரிவித்தனர். 

இதனையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘நான் பேசியதன் விளைவை நன்கு அறிவேன். சனாதன தர்மம் தொடர்பாக நான் கூறிய கருத்து தொடர்பான வழக்கை எதிர்க்கொள்ள மாட்டேன் என்று நான் சொல்லவில்லை. 6 மாநிலங்களில் வெவ்வேறு உயர்நீதிமன்றங்களில், வழக்குகள் உள்ளன. என்னால் எல்லா மாநிலங்களுக்கும் செல்ல முடியாது. அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று தான் கேட்கிறேன். அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் ஒரே இடத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, விசாரணையை எதிர்கொள்ள நான் தயார்’ என்று தெரிவித்தார். இதனையடுத்து, இது தொடர்பான விசாரணை அடுத்த வாரத்தில் நடைபெறும் எனக் கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.