Skip to main content

இதெல்லாம் படமா என்றும் கேட்கலாம், இதுதான் படம் என்றும் சொல்லலாம்! டுலெட் - விமர்சனம் 

Published on 22/02/2019 | Edited on 23/02/2019

வீடு... மனிதனின் அடிப்படை அத்தியாவசிய தேவையாகவும் ஆகப்பெரும் லட்சியமாகவும் இருப்பது. பிழைப்புக்காக நகரத்துக்கு இடம்பெயர்பவர்களின் மிகப்பெரிய சவாலாகவும் இருக்கிறது. ஆரம்பத்திலேயே இந்த நிலை இருந்தாலும் உலகமயமாக்கலின் விளைவாக தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ந்து அதில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கத்தொடங்கிய அந்த காலகட்டத்தில் வேறு வேலைகளில் இருந்தவர்களுக்கு வீட்டு வாடகை என்பது மிகப்பெரும் சுமையானது. இதைத் தாங்க முடியாமல் நகரத்தை விட்டு வெளியேறி புறநகர் பகுதிகளுக்கு சென்றவர்கள் அதிகம். அந்த 2007 காலகட்டத்தில் வாடகை உயர்வால் பல ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டை காலி செய்ய வேண்டிய நிலைக்கு வரும் இளங்கோ - அமுதா தம்பதி தங்கள் குழந்தை சித்தார்த்துடன் வீடு தேடும் படலமும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் விதவிதமான கேள்விகள், சவால்கள், அவமதிப்புகள், அனுபவங்களும்தான் இயக்குனர் செழியனின் 'டுலெட்'.

 

tolet movie family



உலகமெங்கும் நூறுக்கும் மேற்பட்ட திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு 80 விழாக்களில் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு 34 விருதுகளைப் பெற்றுள்ள படம்... தேசிய விருதையும் வென்று பின்னர் திரைக்கு வந்திருக்கிறது. பின்னணி இசை கிடையாது, பாடல்கள் கிடையாது, விறுவிறுப்பு, பொழுதுபோக்குக்கான எந்த அம்சங்களும் கிடையாது, அழகழகான கோணங்கள், ஃப்ரேம்கள், லொகேஷன்கள் கிடையாது. ஒரு ஒளிப்பதிவாளர், தான் இயக்கும் முதல் படத்துக்கு எந்த ஒரு மேக்-அப்பும் சேர்க்காமல், சொல்ல வந்த கதைக்கு முழுமையாக உண்மையாக இருக்கும்படி இயக்கியதற்காகவே அவரை ஆரத்தழுவி வரவேற்கலாம். அப்படியென்றால் படத்தில் எதுவும் இல்லையா, வறட்சியாக இருக்குமா? இல்லை. படமெங்கும் நாம் புன்னகைக்க, நெகிழ, அதிர்ச்சியடைய பல தருணங்கள் இருக்கின்றன. கதை நடக்கும் இடத்தின் சத்தங்களே இசையாகி காட்சிகளுடன் சேர்ந்து கதை சொல்கின்றன. படம் முடிந்து நெடு நேரத்திற்கு பெரிய தாக்கத்தையும் சிந்தனையையும் நமக்குள் உண்டாக்குகிறது டுலெட். ஈரானிய சினிமாக்களையே எத்தனை நாட்களுக்கு உதாரணம் சொல்வது, நாம் அந்த அளவுக்கு ஒரு படமெடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் செழியன்.

IT துறையின் வளர்ச்சி பிற சாதாரண எளிய பணிகளில் இருந்த மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை விவரித்துத் தொடங்கும் படம், IT ஊழியர்களின் மீதான காழ்ப்பாகவோ குற்றச்சாட்டுகளாகவோ செல்லாமல் இருப்பது மிகப்பெரும் ஆறுதல். வீடு தேடும் பயணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் ஒவ்வொரு வகை. ஜன்னலே இல்லாத ஒரு வீடு, கறுப்பு சட்டையெல்லாம் போடாதீங்க என கண்டிக்கும் ஒரு வீட்டுக்காரர், ஒரு வீட்டை காலி செய்யும் முன்பே அந்த வீட்டை வாடகைக்குக் கேட்டுப் பார்க்க வருபவர்கள் முன்பு கூனிக்குறுகி நிற்கும் தருணம், வீட்டை வாடகைக்குக் கொடுக்க முடிவு செய்யும் முன் உரிமையாளர் செய்யும் பின்புல விசாரணை என 'டுலெட்' நம்மில் பலர் கடந்த வந்துள்ள உண்மை அனுபவங்களின் தொகுப்பு. வறட்சியான உண்மைகள் மட்டுமில்லை, கவிதையான பல காட்சிகளும் உண்டு. அப்பா சட்டையை அயர்ன் செய்யும்போது சுவற்றிலிருந்து பிய்த்து கசக்கி எறியப்பட்ட தன் ஓவிய காகிதத்தையும் அயர்ன் பண்ண சிறுவன் சித்தார்த் கொடுப்பது, வீடு தேடும்போது ஒரு வீட்டில் வயதான ஒரு தம்பதியும் மூன்று பூனைகளும் வாழ்வதைப் பார்த்து 'நம்மால் அவர்கள் வேறு இடம் தேடும் நிலை ஏற்படக்கூடாது' என அந்த வீட்டை வேண்டாம் என்று சொல்வது... இப்படி கவித்துவமான தருணங்கள் பல உண்டு.

 

tolet santhosh sreeram



சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார், சிறுவன் தருண்... மூவரும் ஒரு எளிய குடும்பத்தை மிக இயல்பாகப் பிரதிபலிக்கிறார்கள். இளங்கோ என்ற உதவி இயக்குனராக, சினிமாவில் வெற்றி பெற முயலும் இளைஞராக, அதுவரை சினிமாவுக்குள்ளேயே கிடைத்த வேலையெல்லாம் செய்து செலவுக்கு பணம் ஈட்டும் குடும்பஸ்தனாக துளி விலகலுமில்லாமல் நம் முன் வாழ்கிறார் சந்தோஷ். இயலாமை, வறுமையிலும் அவ்வப்போது நடக்கும் சிறிய நகைச்சுவை என அந்தப் பாத்திரத்தின் அத்தனை உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். சந்தோஷ், தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்வரவு. ஷீலா, கணவனின் இயலாமை மீது கோபம், அதே நேரம் அவனை விட்டுக்கொடுக்காத காதல் என மிக இயல்பாக நடித்திருக்கிறார். 'எத்தனை வருஷம் ஆனாலும் பரவாயில்லப்பா, எனக்கு ஒரு வீடு மட்டும் வாங்கித்தா' என்று கூறி வீட்டில் என்னவெல்லாம் வேண்டுமென்று விளக்கும் இடம் கவிதை. சிறுவன் தருண், நம் புன்னகைகளுக்கு முழு பொறுப்பு. க்யூட்டாக இருக்கிறான் என்று கூறி முடித்துவிட முடியாது, நன்றாக நடித்திருக்கிறான். வீட்டு உரிமையாளராக ஆதிரா, வீடு காட்டும் நண்பராக அருள் எழிலன் ஆகியோரும் சிறப்பு.

ஒளி உட்பட எந்த வித எக்ஸ்ட்ரா விஷயங்களும் இல்லாமல் படத்தை தூய்மையாகக் கொடுத்திருக்கிறார் செழியன். அந்த சிறிய வீட்டுக்குள்தான் கிட்டத்தட்ட பாதி படம் நடக்கிறது. ஆனாலும் விதவிதமான கோணங்களால் சலிப்பு ஏற்படாமல் கொண்டுசென்றது ஒளிப்பதிவாளர் செழியனின் வெற்றி. வசனங்கள், மிக இயல்பான உரையாடல்களாக அமைந்துள்ளன. வீடு கிடைத்துவிடவேண்டும் என்று நமக்குள் உண்டாகும் பதற்றம், படம் நம்முள் உறவாடுவதை உணர்த்துகிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு தொழில்நுட்ப ரீதியில் எளிமையாக, இந்தப் படத்தின் ஜீவனுக்கேற்ப இருக்கிறது. அதே நேரம் வீடு கிடைக்குமா என்ற பதற்றத்தை உருவாக்குவதிலும் பங்குவகித்துள்ளது.

சிறு வட்டத்துக்குள் சுற்றும் கதை, காட்சிகள், வீடு கிடைப்பது என்பதைத்தாண்டி முக்கிய பாத்திரங்களின் வேறு எந்த விஷயங்களும்  பெரிதாகப் பேசப்படவில்லை என்ற குறைபாடெல்லாம் வழக்கமான சினிமா படங்களை ரசிக்கும் நமக்கு ஏற்படலாம். ஆனால், 'டுலெட்' இந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்ட படம். இசை, ஆக்ஷன், திருப்பங்கள், விறுவிறுப்பு என எல்லாம் எதிர்பார்ப்பவர்கள் இதெல்லாம் படமா என்று கேட்கலாம். பொறுமையான, உண்மையான திரைப்பட அனுபவத்துக்கு திறந்த மனதோடு செல்பவர்கள் இதுதான் படம் என்று சொல்லலாம்.                                                 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!