Skip to main content

’யாரடி நீ மோகினி’, ’வேலையில்லா பட்டதாரி’  உங்களுக்கு பிடிக்குமா? - 'திருச்சிற்றம்பலம்' விமர்சனம்

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

thiruchitrambalam

 

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் படம் எப்படி இருக்கிறது?

 

சாதாரண நடுத்தர குடும்பத்து பையனான தனுஷ் உணவு டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். இவர் தந்தை பிரகாஷ்ராஜ், தாத்தா பாரதிராஜா ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது தோழியான நித்யாமேனன் கீழ் வீட்டில் வசிக்கிறார். தனுஷூம் நித்யா மேனனும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். பிரகாஷ் ராஜ் மேல் இருக்கும் வெறுப்பு காரணமாக தனுஷ் அவரிடம் பேசிக் கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசிக்கிறார். தனுஷுக்கு உறுதுணையாக தாத்தா பாரதிராஜாவும் தோழி நித்யா மேனனும் இருக்கின்றனர். மிகுந்த பயந்த சுபாவம் கொண்ட தனுஷ் முதல் பாதியில் அவருடைய பள்ளித் தோழியான நகரத்து பெண் ராஷி கண்ணாவை  காதலிக்கிறார். இரண்டாம்பாதியில் கிராமத்து பிரியா பவானி சங்கர் காதலிக்கிறார். இந்த இரு காதல்களும் புட்டு கொள்கிறது. இதையடுத்து அவர் வாழ்க்கை என்னவானது? அவரது காதல் ஆசை நிறைவேறியதா, இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

 

ஒரு கதையாக பார்க்கும்பொழுது என்னடா ஒன்றுமே இல்லையே என்று தோன்றினாலும் இந்தக் கதையை படமாக்கிய விதத்திலும், திரைக்கதையை அமைத்து காட்சிப்படுத்திய விதத்தை ரசிக்கும்படி புதிய வடிவத்தில் அமைத்து இப்படத்தை வெற்றிப் படமாக மாற்றி உள்ளார் இயக்குநர் மித்ரன் ஜவஹர். படம் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து யாரடி நீ மோகினி, வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களை ஞாபகப் படுத்தினாலும் காட்சிகளும், அதில் நடித்த நடிகர்களின் நடிப்பும் ஃப்ரஷ்ஷாக அதேசமயம் உணர்வுபூர்வமாக அமைந்து படத்தை கரை சேர்த்துள்ளது. அதேபோல் படத்தை எடுத்த விதத்தில் பிரம்மாண்டத்தை காட்டாமல், காட்சிகளுக்குள் இருக்கும் உணர்வுகளை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி பார்ப்பவர்களை நெகிழச் செய்து ஒரு ஃபீல் குட் படமாக இப்படத்தை கொடுத்துள்ளனர். குறிப்பாக பாரதிராஜா, நித்யாமேனன், தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் கலகலப்பாகவும் அதேசமயம் மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் அமைந்து பார்ப்பவர்களுக்கு பல்வேறு உணர்ச்சிகளை சரி சமமாக கடத்தி ஒரு நல்ல பொழுதுபோக்கு குடும்ப காதல் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுத்துள்ளது. இருந்தும் படத்தில் சின்ன சின்ன மைனஸ் விஷயங்களாக பார்க்கப்படுவது, தனுஷின் முந்தைய குடும்ப காதல் படங்களின் திரைக்கதை சாயல்கள் ஆங்காங்கே தென்படுவது. ஆனாலும் படத்தை பெரிதாக பாதிக்கவில்லை.

 

இப்படத்தின் முதல் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுவது கதாபாத்திர தேர்வு. இப்படத்தில் நடித்த எந்த ஒரு கதாபாத்திரமும் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக்கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அவரவருக்கான ஸ்பேசில் புகுந்து விளையாடி இருக்கின்றனர். குறிப்பாக தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோரின் நடிப்பு மிக மிக யதார்த்தமாக அமைந்து திரைக்கதைக்கு வேகமும், காட்சிகளுக்கு உயிரும் ஊட்டி உள்ளது. நடிகர் தனுஷ் எப்பவும் போல் எந்த இடத்தில் நடிக்கிறார், எந்த இடத்தில் நடிக்கவில்லை என்பதே தெரியாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வழக்கம்போல் அழகாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார். தாத்தாவிடம் அடாவடியாக பேசும் காட்சிகளிலும் சரி, அப்பாவிடம் முறைத்துக்கொண்டு மல்லுக்கட்டும் காட்சிகளிலும் சரி, நித்யா மேனனிடம் மாட்டிக்கொண்டு அடிவாங்கும் காட்சிகளிலும் சரி, எங்கெங்கு எந்தெந்த அளவு நடிப்பு தேவையோ அந்தந்த இடத்தில் அளவான நடிப்பை நேர்த்தியாகவும் அழகாகவும் வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றுள்ளார்.

 

படத்தின் இன்னொரு நாயகனாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். தனுஷுக்கு சரிசம போட்டியாக சரியான டப் கொடுத்து உலகத்தரம் வாய்ந்த நடிப்பை மிக அசால்டாக செய்து ரசிகர்களிடம் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று கைதட்டல்களை அள்ளி உள்ளார். குறிப்பாக இவருக்கும் தனுஷுக்கும் ஆன கெமிஸ்ட்ரி வேற லெவலில் அமைந்து பார்ப்பவர்களுக்கு ஒரு சேர கலகலப்பும், நெகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. கூடுதல் முத்தாய்ப்பாக நித்யா மேனனின் அழகான தமிழ் உச்சரிப்பும், அவருடைய சொந்த குரலும் கதாபாத்திரத்திற்கு இன்னமும் அழகு சேர்த்துள்ளது. நித்யா மேனனுக்கு விருதுகள் நிச்சயம்.

 

எப்போதும் உர்ர்ர் என நடித்துக் கொண்டிருக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா இப்படத்தில் தனது இன்னொரு முகத்தை காட்டியுள்ளார். இப்படத்தின் பல காமெடி காட்சிகளை தன் மேல் சுமந்து கொண்ட பாரதிராஜா அதை சிறப்பாகவும் கலகலப்பாகவும் செய்து அசத்தியுள்ளார். குறிப்பாக இவருக்கும் தனுஷுக்கும், நித்யா மேனனுக்குமான கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்து எங்கெங்கு கலகலப்பு தேவையோ அங்கெல்லாம் கலகலப்பு கொடுத்து, எங்கெங்கு நெகிழ்ச்சி தேவையோ அங்கெல்லாம் நெகிழ்ச்சி கொடுத்து பார்ப்பவர்களை ஒரு சேர சிரிக்கவும், கலங்கவும் வைத்து மாஸ் காட்டியுள்ளார். இவரும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்து பிளஸ் ஆக மாறி உள்ளார். தனுஷ் தந்தையாக வரும் பிரகாஷ்ராஜ் ஆரம்பத்தில் சற்று வில்லத்தனம் காட்டி போகப்போக பாசமான அப்பாவாக மாறி நெகிழ்ச்சி கொடுத்துள்ளார். இவரும் தனது அனுபவ நடிப்பால் காட்சிகளுக்கு உயிரூட்டி திரைக்கதைக்கு பக்கபலமாக அமைந்துள்ளார். சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ள நாயகி ராஷி கண்ணா, நாயகி பிரியா பவானி சங்கர் ஆகியோர் அவரவருக்கான வேலையை அழகாகவும், க்யூட்டாகவும் செய்து விட்டு சென்றுள்ளனர். முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள  ஸ்ரீரஞ்சனி, பப்பு, முனீஸ்காந்த், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்துவிட்டு சென்றுள்ளனர்.

 

படத்தின் மற்றொரு நாயகன் ராக்ஸ்டார் அனிருத். பொதுவாக அனிருத் படங்கள் என்றாலே படத்தை காட்டிலும் அவரது இசை ஓவர்டேக் செய்யும். ஆனால் இந்தப்படத்தில் சற்றே அடக்கி வாசித்திருக்கிறார். ஆனாலும் இவரது இசையில் உருவான மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே, தாய் கெழவி ஆகிய பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட். அதேபோல் எந்தெந்த காட்சிகளுக்கு என்னென்ன இசை வேண்டுமோ, எந்த இடத்தில் சைலண்ட் வேண்டுமோ அந்த இடங்களில் அந்தந்த விஷயங்களை மிக சரியாக  வெளிப்படுத்தி அளவான பின்னணி இசை மூலம் அழகான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்படி காட்சிகளுக்கு உயிரூட்டி படத்தை கரை சேர்க்க உதவியுள்ளார். ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகளும், இன்டீரியர் காட்சிகளும், இரவு நேரத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட பாடல் காட்சியும் சிறப்பாக அமைந்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டரில் வெளியாகும் தனுஷ் படம், தனுஷின் லவ் படம், தனுஷின் குடும்பப் படம் போன்ற பல காரணங்களுக்காக இப்படத்தை பார்க்க தோன்றினாலும் அதையெல்லாம் தாண்டி ஒரு தரமான கலகலப்பு நிறைந்த குடும்ப காதல் படமாக இப்படம் அமைந்துள்ளதற்காகவே திருச்சிற்றம்பலத்தை காண கூட்டமாக செல்லலாம்.


திருச்சிற்றம்பலம் - பேமிலி பிளாக் பஸ்டர் 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!