Skip to main content

இது திரைப்படமா, இல்ல திருவிழாவா? நம்ம வீட்டுப் பிள்ளை - விமர்சனம்

Published on 28/09/2019 | Edited on 02/10/2019

"நம்மள மாதிரி பசங்க ஒரு தடவ ஜெயிச்சா ஒத்துக்கமாட்டாய்ங்க, ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும், ஜெயிப்போம்" என்று பன்ச் பேசும் மனநிலைக்கு சிவகார்த்திகேயனை சில தோல்விகள் தள்ளியிருக்கும் வேளையில், அவரை சினிமாவுக்குக் கொண்டு வந்த இயக்குனர் பாண்டிராஜுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார். இந்த முறை ஜெயித்துவிட்டாரா?

 

sivakarthikeyan



திரைப்படமா இல்லை திருவிழாவா என்று எண்ண வைக்கும் வகையில் இத்தனை நட்சத்திரங்களை சேர்த்து அவர்கள் அத்தனை பேருக்கும் கதாபாத்திரங்கள், அவர்களுக்கான சுவாரசியமான சுபாவங்கள் எழுதி நம் மனதில் நிற்க வைப்பதில் தேர்ந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். அவரது கடந்த படமான 'கடைக்குட்டி சிங்கம்' பெரும் வெற்றி பெற இதுவும் ஒரு மிகப்பெரிய காரணம். 'கடைக்குட்டி சிங்கம்' வெற்றி தந்த உற்சாகத்தில் மீண்டும் அதே ஃபார்முலாவில் எடுக்கப்பட்டுள்ள படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. இந்த ஃபார்முலாவில் என்னவெல்லாம் இருக்கின்றன? நிறைய உறவுகள் கொண்ட பெரிய குடும்பம், வித விதமான பாத்திரங்கள், அதில் அனைவரையும் இணைக்கக்கூடிய மையமாக நாயகன், உறவுகளுக்குள் உள்ள மகிழ்ச்சி, கசப்பு, ஒரு பிரச்சனை, விரிசல், பின் நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ்... இதுதான் அந்த ஃபார்முலாவின் முக்கிய அங்கங்கள். இவை அனைத்தும் மிஸ் ஆகாமல் சேர்த்திருக்கிறார் பாண்டிராஜ். ஆனால், ரிசல்ட் மிஸ் ஆகாமல் இருக்கிறதா?


நாயகன் அரும்பொன் (சிவகார்த்திகேயன்), தங்கை துளசி (ஐஸ்வர்யா ராஜேஷ்) இருவரும் 'பாசமலர் வெர்ஷன் 2' உடன்பிறப்புகள். சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயுடன் வாழும் இவர்கள், தாத்தா அருள்மொழிவர்மனின் (பாரதிராஜா) ஆதரவுடன் சுற்றியுள்ள பெரியப்பா, சித்தப்பா, மாமா ஆகியோரது பாசத்தை எதிர்பார்த்து வாழ்பவர்கள். இவர்களின் நேசத்துக்கு இணையாக இவர்களை நேசிப்பது தாத்தாவும் பெரியப்பா மகன் பரமுவும் (சூரி) மட்டுமே. மற்றவர்களுக்கு என்ன வெறுப்பு, அதன் விளைவு என்ன, மீண்டும் எப்படி இணைகிறார்கள் என்ற கதையை காமெடிக்கும் சென்டிமெண்டுக்கும் அதிக இடத்தைக் கொடுத்து படமாக உருவாக்கியுள்ளார் பாண்டிராஜ். காமெடி, செண்டிமெண்ட் இரண்டுமே பெரும்பாலும் ஒர்க்-அவுட் ஆகியிருப்பது படத்தின் பலம். அதிலும் சூரியின் நகைச்சுவை திறமை பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணையும்போது மிக சிறப்பாக வெளிப்படுகிறது. (சூரியின் டைமிங்கை கிண்டல் செய்யும் காட்சி படத்திலேயே உண்டு) சூரியின் மகன் பாத்திரத்தில் நடித்துள்ள இயக்குனர் பாண்டிராஜின் மகன், ஒவ்வொரு வசனத்திலும் அரங்கை சிரிப்பால் அதிர வைக்கிறார். கிராமங்களில் இருக்கும் சேட்டைக்கார சின்னபையன்களை மிக அழகாக, துடுக்காகப் பிரதிபலிக்கிறார்.

 

 

barathiraja

 

100 love



கஞ்சத்தனம் மிகுந்த சித்தப்பா, இருமி இருமி மகளை கண்ட்ரோல் பண்ணும் மாமா, வித்தியாசமாக சிரிக்கும் மச்சான், ஸ்கைப்பில் மட்டுமே மனைவியுடன் பேசும் கணவன் என உறவுக் கூட்டத்தின் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் சுவாரசியம் சேர்க்க முயன்றுள்ளார் பாண்டிராஜ். ஆனாலும் பார்ப்பவர்கள் மனதில் இடம்பிடிக்கும் பாத்திரங்கள் வெகு சில மட்டுமே. செல்ஃபோன்களுக்கும் பாண்டிராஜ் திரைப்படங்களுக்கும் நல்ல உறவு உண்டு. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது. அதிலும் ஒரு கான்ஃபரன்ஸ் கால் காட்சி பெரும்பாலானோரை சிரிக்க வைக்கிறது. 'பெரிய சந்தோசத்தை தருவதும் சொந்தம்தான், துயரத்தை தருவதும் சொந்தம்தான்', 'சொந்தங்கள்ட்ட தோத்துப் பழகுனவனை யாராலும் தோற்கடிக்க முடியாது' மற்றும் சிவகார்த்திகேயன் பாத்திரம் அப்பா குறித்துப் பேசும் வசனம் போன்ற உறவுகள் குறித்த வசனங்கள் அதிக செண்டிமெண்ட் போலத் தோன்றினாலும் அனைவரும் உணரக்கூடியவையாக இருக்கின்றன. இவையெல்லாம் படத்தின் பலமாக இருக்க, படத்தின் முக்கிய பாத்திரமாக இருக்கும் தங்கை துளசியின் வாழ்க்கை லட்சியம், அதி அவசர தேவை ஒரு திருமணம் மட்டுமே என்பது போல, ஒவ்வொரு காட்சியிலும் அவரது திருமணம் குறித்து அவரே பேசுவதும் அதற்காக அவரே பிறரை அணுகுவதும் போல அமைத்தது அந்தப் பாத்திரத்துக்கும் படத்துக்கும் பலவீனம். நாயகி வரும் காட்சிகள் படத்திற்கு நேரடியான அவசியமற்றதாக அமைந்துள்ளதும் பலவீனம். படத்தின் மைய பிரச்சனை அவ்வப்போது மாறுவதும் படத்தோடு ஒன்றுவதை தடுக்கிறது. 'கடைக்குட்டி சிங்கம்' போலவே இதிலும் வில்லன் பாத்திரங்கள் நகைப்புக்கு உரியதாக இருக்கின்றன.

 

aiswarya rajesh



சிவகார்த்திகேயன், தனது கலகல நடிப்பால், ஆட்டத்தால், துறுதுறுப்பால் ஈர்க்கிறார். சூரி மற்றும் அந்த சிறுவனுடன் இணைந்து அடிக்கும் டைமிங் காமெடி, ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சிறப்பான சிவகார்த்திகேயனை நம் முன் கொண்டு வந்திருக்கிறது. காமெடி மட்டுமல்லாமல் செண்டிமெண்ட் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். ஆனால், உங்கள் முன்னோர்களைப் போலவே துரோக பன்ச், வெற்றி தோல்வி பன்ச்கள் உங்களுக்கும் தேவையா சிவா? ஐஸ்வர்யா ராஜேஷ், மிக இயல்பாக நடித்து நம்ம வீட்டுப் பொண்ணாக மனதில் இடம் பிடிக்கிறார். பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், யோகி பாபு, சண்முகராஜன், சுப்பு பஞ்சு, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட சிறப்பான நடிகர்களும் அளவாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நட்டி (எ) நடராஜன், எதிர்மறை பாத்திரத்தில் தனக்குக் கிடைத்த இடத்தை சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். அவரது தோற்றமும் குரலும் நேட்டிவிட்டி நிரம்பியிருக்கின்றன. நாயகி அனு இம்மானுவேல் அழகாக இருக்கிறார். ஆனால் அந்த அழகை மட்டும் எவ்வளவு நேரம் பார்ப்பது?


இமானின் பாடல்கள் படத்தின் கொண்டாட்டத்தை கூட்டியிருக்கின்றன, பின்னணி இசை சோகத்தை சுரந்திருக்கிறது. இப்படி ஒரு படத்தில் நிரவ் ஷா என்ன செய்கிறார் என்ற எண்ணத்தை 'ஒளிப்பதிவு நிரவ் ஷா' என்ற டைட்டில் க்ரெடிட் உண்டாக்கியது. ஆனால், தனது பணியை நிறைவாகச் செய்து காட்சிகளை தரமாகத் தந்துள்ளார் அவர். ரூபன், சில காட்சிகளை இன்னும் இறுக்கமாகத் தொகுத்திருக்கலாம்.

உறவுகளுடன் ஊர் திருவிழாவுக்குச் சென்றதைப் போன்ற உணர்வை படம் தருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் கூட்டணி ஜெயித்துவிட்டது, ஃபார்முலாவுக்கான ரிசல்ட் ஓரளவு வெற்றிகரமாக வந்துள்ளது. ஆனால், கையோடு எடுத்த வர நல்ல நினைவுகள் எதையும் பெரிதாகத் தரவில்லை.

 

                

                      

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு சிவகார்த்தியேன் உதவி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sivakarthikeyan donates nadigar sangam building

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இதையடுத்து நேற்று (22.04.2024) சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க புதிய கட்டட பணிகளைத் தொடர்வதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார்” எனக் குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!