Skip to main content

பெண் கல்வியைச் சுமந்து வரும் 'அருமைக் கன்னுக்குட்டி'!

Published on 11/08/2021 | Edited on 16/08/2021

 

en arumai kannukutti my beloved child

 

தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் வெளியீடாக, ‘என் அருமைக் கன்னுக்குட்டி’ எனும் விழிப்புணர்வுக் குறும்படம் வெளியாகியுள்ளது. இப்படம், 'தாகூர் சர்வதேச திரைப்பட விழா', 'டோக்கியோ திரைப்பட விழா', 'விரிஜின் ஸ்ப்ரிங் சினிமா விழா' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல விருதுகளை வென்றுள்ளது. திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ள இக்குறும்படம், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை கிராமத்துப் பின்னணியோடு மிக நேர்த்தியாகச் சொல்லியுள்ளது. பிள்ளைகளின் கல்விக்கு குறிப்பாக பெண் பிள்ளைகளின் கல்விக்கு துணை நிற்பதே பெற்றோரின் கடமை என்பதை உணர்த்துகிறது இத்திரைக்கதை. 


கூகுள் மேப் கூட காட்டாத குக்கிராமம் ஆறாமணி. கல்லூரிப் பேராசிரியையான ரித்விகா, அந்த கிராமத்தில்  குடும்பத்துடன் வசித்து வருகிறார். காலைநேர பரபரப்பில், தனது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஸ்கூட்டியை வீட்டுக்கு வெளியே எடுக்கிறார். அப்போது அவரின் பெண்குழந்தை, "அம்மா.. ஸ்கூல்ல என்ன எல்லாரும் 'ஸ்கூட்டி குட்டி', 'ஸ்கூட்டி குட்டி'ன்னு கிண்டல் பண்றாங்கம்மா" எனப் புகார் சொல்ல, அதுக்கு நீ என்ன சொன்ன எனக் கேட்கிறார். "நான் போடி எருமைன்னு" சொன்னேன் என்கிறது குழந்தை. பால் குடுக்குற எருமையை அப்படிச் சொல்லலாமா எனக் கேட்டுவிட்டு அதை எப்படி எதிர்கொள்வது எனக் குழந்தைக்கு அறிவுரை சொல்கிறார். செல்லும் வழியில், தன் பசுமையான பால்ய நினைவுகளை அசைபோடுகிறார் ரித்விகா.

 

 

en arumai kannukutti my beloved child

 


ரித்விகாவின் அப்பாவாகவும் எருமைப் பால் வியாபாரியாகவும் வருகிறார் 'ஜோக்கர்' பட நடிகர் குரு சோமசுந்தரம். படிக்காத பாமரரான அவர், தனது மகள் நன்றாகப் படித்துப் பெரிய ஆளாக வரவேண்டும் என ஆசைப்படுகிறார். பள்ளிக்குச் செல்ல ஒன்றரை கிலோமீட்டர் நடக்க வேண்டும். அவ்வளவு தூரம் நடந்தால், மகளின் பிஞ்சுப் பாதம் நோகும் என்பதால், எருமை மாட்டின் மீது மகளை அமர்த்தி 'அருமை கன்னுக்குட்டி.. என்னருமை கன்னுக்குட்டி' எனப் பாடியவாறு ஊர்வலம்போல பள்ளிக்கு அழைத்து வருகிறார். இதனால், ரித்விகாவை சக மாணவர்கள் 'என் எருமை கன்னுக்குட்டி' எனக் கேலி செய்தனர். இது மகள் படிப்புக்கு இடையூறாக இருந்துவிடுமோ என அஞ்சிய குரு சோமசுந்தரம், அடுத்த நாளே கேலி செய்த மாணவர்களின் தெருவுக்குச் சென்று அவர்களின் பெற்றோரிடம் சத்தம் போடுகிறார்.


"என்ன பொழுதுக்கும் படிச்சிட்டே இருக்க, வந்து சாமான கழுவு" என அடிக்கடி வீட்டு வேலை செய்யச் சொல்கிறார் ரித்விகாவின் அம்மா. அதெல்லாம் வேணாம், படிப்புதான் உனக்கு முக்கியம். நீ படி என மனைவியின் பிற்போக்குத்தனங்களை விமர்சிக்கிறார் குரு. பருவம் அடைந்ததும் ரித்விகாவின் தோழிகள் படிப்பை நிறுத்திவிட்டார்கள். சிலர் திருமணமாகி வேறு ஊருக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், ரித்விகாவின் அப்பா அப்படி எந்த தொந்தரவும் மகளை நெருங்கிவிடாமல் பார்த்துக் கொண்டார். இப்படி மகளின் படிப்புக்கு இடையூறாக நிற்கும் எல்லா களைகளையும் வெட்டித் தள்ளுகிறார் பாசக்கார அப்பா. தான் படித்ததுபோல் மகளையும் படிக்க வைக்க வேண்டும் என உறுதியுடன் இருக்கிறார் ரித்விகா. 

 

 

en arumai kannukutti my beloved child

 


"பெண் குழந்தைகளின் படிப்பை எக்காரணத்தைக் கொண்டும் பாதியில் நிறுத்தாதீங்க" எனும் சமூகக் கருத்தைச் சுமந்து வருகிறது 'என் அருமைக் கன்னுக்குட்டி'. தனது மகள் படித்துப் பெரிய ஆளாக உயரவேண்டும் எனும் ஒரே சிந்தனையோடு வெள்ளந்தியாக வலம்வரும் குரு சோமசுந்தரம் அப்ளாஸ் அள்ளுகிறார். மிக இயல்பான உடல்மொழியில் ரித்விகா ஸ்கோர் செய்கிறார். கிராமத்து பசுமை, பின்னணி, நிகழ்காலம் மற்றும் ஃபிளாஷ்பேக் உள்ளிட்ட காட்சியமைப்பில் உதவி ஒளிப்பதிவாளரான வீர குமார் கவனம் ஈர்க்கிறார். ஜி.ஜி.எம் இசையில் உருவான, 'அரும கன்னுக்குட்டி... என் அரும கன்னுக்குட்டி..' பாடல் நிச்சயம் கேட்போரை வசீகரிக்கும் ரகம். இந்த விழிப்புணர்வு குறும்படத்தை இயக்குநர் வளர்மதி எழுதி இயக்கியுள்ளார். 

 

ஓபனிங் சீனில், "என்னங்க பால கொதிக்கவச்சி அணைச்சிடுங்க.. மறந்துடாதிங்க" எனக் கணவரிடம் சொல்லிவிட்டு, ரித்விகா வேலைக்குச் செல்லும் காட்சியில் உள்ளது, பெண் கல்வியின் முக்கியத்துவம். சிறந்த முயற்சி. பாராட்டுகள்!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய அளவில் விருது பெற்ற குறும்படம்; படக்குழுவினருக்கு முன்னாள் நீதிபதி வாழ்த்து

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

atcham thavir short film won national level former judge wishes

 

டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான குறும்பட போட்டியில் தமிழகத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட அச்சம் தவிர் குறும்படம் தேசிய அளவில் 3 ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்து படத்திற்கான பல்வேறு உதவிகள் செய்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உதவிய அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், அமைப்பின் கெளரவ தலைவருமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

 

மேலும் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவருமான ஆர். கே. குமார், பொதுச் செயலாளர் முனைவர் வி. எச்.சுப்ரமணியம் உள்ளிட்டோரும் அச்சம் தவிர் பட குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் இப்படம் உருவாக காரணமாக இருந்த அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர்.கே. குமார் மற்றும் பொதுச் செயலாளர் முனைவர் வி. எச். சுப்பிரமணியத்தையும் பட குழுவினர் கோவை மாவட்டம் கணபதியில் உள்ள  தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆதரவுக்கு பட குழுவின் சார்பில் நன்றியும் , வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து அச்சம் தவிர் குறும் படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் அமைப்பின் சார்பில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த 10ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர் அனுராஜ்க்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் அச்சம் தவிர் படத்தின் இயக்குநர் குமார் தங்கவேல், இணை இயக்குநரும் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், மாற்றம் அமைப்பின் நிர்வாகியும், நடிகருமான ஆர்.ஏ.தாமஸ், படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர் அங்கமுத்து, நடிகர் அசோக், குமார், ஹரிஹரசுதன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் துணைத்தலைவர் நாராயண செல்வராஜ் உறுப்பினர் அப்பு ஜெயபிரகாஷ் உதவி தொகை பெற்ற மாணவர் அனுராஜ் அவரது பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

 

Next Story

இது புதுசா இருக்கே...-ஆர்வத்தை தூண்டும் 'லாக்டௌன்' பைலட் பட டீஸர்

Published on 11/10/2020 | Edited on 11/10/2020