Skip to main content

சமுத்திரக்கனியின் சமூக அக்கறை எந்த எல்லைக்கு செல்கிறது? நாடோடிகள் 2 - விமர்சனம்

Published on 02/02/2020 | Edited on 04/02/2020

'நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்' என்ற நட்பு... நேர்மறை எண்ணங்கள், வசனங்கள்... விறுவிறுப்பான சேசிங்... இயல்பான, வாழ்க்கையுடன் கலந்துள்ள நகைச்சுவை... சிலிர்க்க வைக்கும் 'சம்போ சிவ சம்போ'... ஆங்காங்கே அழுத்தமான அட்வைஸ்... காதலர்களை, அவர்களுக்கு உதவும் நண்பர்களை புதிய கோணத்தில் பார்த்தது... என பல விதங்களில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி கவர்ந்தது 'நாடோடிகள்'. 2009இல் வெளிவந்த அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ளது 'நாடோடிகள் 2'. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அல்லாமல் 'காதலை சேர்த்து வைத்து காதலர்களை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லும் நண்பர்கள்' என்ற அடிப்படை கருவை மட்டும் கொண்டு 'நாடோடிகள் 2'வை  உருவாக்கியுள்ளார் சமுத்திரக்கனி. ஆச்சரியங்கள் தருகிறதா, ஆடியன்ஸை கவர்கிறதா?

 

sasikumar



பொதுக்கழிவறை கட்ட தன் சம்பளத்தை கொடுக்கும், எந்தப் பிரச்னை என்றாலும் போராட்டத்தில் இறங்கும், சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்க்கை முக்கியமென்று நினைக்கும் போராளி இளைஞன் ஜீவா (சசிகுமார்). சமூக சேவைக்காக உயிர் துறந்த கம்யூனிஸ்ட் தந்தையின் மகனான ஜீவாவின் சமூக செயல்பாடுகளில் துணை நிற்கும் நண்பர்களாக அஞ்சலி, பரணி, மூத்தவர் என்று அழைக்கப்படும் பெரியவர் மற்றும் சிலர். சாதியற்ற ஒரு இளம் தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் 'நாமாவோம்' என்ற இயக்கத்தை தொடங்கி செயல்படும் சசிகுமாருக்கு தான் சார்ந்த சாதியிலிருந்து கடும் எதிர்ப்பு வருகிறது. தான் ஈடுபடும் சமூக செயல்பாடுகளாலேயே அவருக்குப் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். இப்படி செல்கையில் தன்னை தேடி வந்து பெண் கொடுப்பவர்களை நம்பி திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்துதான் தெரிகிறது, அந்தப் பெண் (அதுல்யா) ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரை (இசக்கி பரத்) காதலிக்கிறார் என்பது. சசிகுமார் என்ன முடிவெடுக்கிறார், அதன் விளைவுகள் என்ன என்பதே நாடோடிகள் 2.

தமிழகத்திற்கு நல்லதை சொல்வது, இளைஞர்களை நல்வழியில் பயணிக்கத் தூண்டுவது, கெட்டதை சாடுவது தனது கடமை என்று ஏற்றுக்கொண்டு படம் எடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வகையில் நேர்மறை தாக்கத்தை உண்டாக்கவேண்டும் என்ற அவரது தவிப்பு பாராட்டப்பட வேண்டியது. சசிகுமார், 'நாடோடிகள்' படத்தில் இருந்தது போன்ற தோற்றத்திலிருந்து பெரிய மாற்றமில்லாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. சமுத்திரக்கனியின் கருத்துகளை பேச சரியான நாயகனாக இருக்கிறார் சசிகுமார். அவரிடமும் அந்த தவிப்பு, துடிப்பு தெரிகிறது. 'செங்கொடி'யாக வரும் அஞ்சலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் புகழ்பெற்ற ஜூலி ஸ்டைலில் அறிமுகமாகிறார். வெளிப்படையான பேச்சு, தெளிவான சிந்தனை கொண்ட இளம் பெண்ணாக அஞ்சலி கவர்கிறார். பரணி, மூத்தவர் உள்ளிட்ட நண்பர்களின் இயல்பான சில உரையாடல்கள் கவர்கின்றன. சசிகுமார் - அஞ்சலி இடையே காதல் உருவாகும் தருணம், 'அதுவா அதுவா' பாடல் ஆகியவை ரசிக்கவைக்கின்றன. சசிகுமார் - அஞ்சலி இருவரும் ஒரு அழகான சோசியல் ஆக்டிவிஸ்ட் ஜோடியாகக் கவர்கிறார்கள். 'பேனர் சின்னமணி' இந்த முறை செல்பியுடன் வந்து நம்மை சிரிக்க வைக்கிறார். ஆனால் இத்தனை விஷயங்களையும் பின்னால் தள்ளி முன் வந்து நிற்கிறது சமுத்திரக்கனியின் சமூக அக்கறை பிரச்சாரம்.
 

 

anjali



சாதி ஒழிப்பு என்பதையே படத்தின் மைய நோக்கமாகக் கொண்டு கதை, திரைக்கதையை அமைத்தது நல்ல விஷயம்தான். ஆனால், அதைத் தாண்டி இருபதுக்கும் மேற்பட்ட விஷயங்கள் பேசப்பட்டிருப்பதுதான் படத்திற்கு பிரச்னையாக அமைகிறது. உடுமலைப்பேட்டை சங்கர் - கவுசல்யாவுக்கு நடந்த கொடூரம், ஜல்லிக்கட்டு போராட்டம், அதில் போலீஸ் அராஜகம், காவல்துறை பணியில் சேர்ந்த திருநங்கை, நீட் தேர்வு, செங்கொடி என்ற போராளி, கந்தசாமி என்ற நல்ல அதிகாரி, கர்ப்பிணியை தாக்கிய டிராபிக் போலீஸ், சாதியற்றவராக அறிவுத்துக்கொண்ட பெண்... இன்னும், இன்னும் சமீப காலங்களில் தமிழகத்தில் நடந்த நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் அனைத்தையும் லிஸ்ட் போட்டு காட்சிகள் அமைத்திருக்கிறார்கள். இந்தக் காட்சிகள், இயல்பாகப் பொருந்தாமலும் கதைக்குத் தேவையான, முக்கிய கதையுடன் தொடர்புடைய காட்சிகளை விட அதிகமாகவும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதுதான் படத்திலிருந்து நம்மை மிகவும் தள்ளி வைக்கிறது. உண்மையில் படத்தின் மையக்  கதை சார்ந்து நடக்கும் காட்சிகள் நன்றாகவே இருக்கின்றன, ஆனால் அவை குறைவாக இருக்கின்றன.


சசிகுமார், படத்தின் தொடக்கத்தில் இருந்தே ஒரு தகிப்புடனே இருக்கிறார். அடிநெஞ்சில் இருந்து அறிவுரைகளை ஆவேசமாக சொல்கிறார். பிற முக்கிய நடிகர்களின் நடிப்பு படத்திற்குத் தேவையான அளவில் இருக்கிறது. தலைவர்கள் படம் ஒட்டப்பட்ட தட்டியை ஏந்திக்கொண்டு, ஒரு கூம்பை ஒலிபெருக்கியாக்கி நம் ஒவ்வொருவரின் மனக்குமுறலாக ஒலிக்கும் 'பிச்சைக்காரன்' மூர்த்தி மனதில் நிற்கிறார். இவர் போல் நம் பிரச்னைகளை பேசுவதையே வாழ்க்கையாக வைத்திருக்கும் எத்தனையோ பேரை சற்றும் கண்டுகொள்ளாமல் நகரும் நம்மை உறுத்துகிறது இவரது பாத்திரப்படைப்பு. சமுத்திரக்கனியின் ஸ்பெஷல் அம்சமாக புதுப்புது நடிகர்களின் தேர்வு இருக்கும். அப்படி வரும் சாதி சங்கத் தலைவர் பாத்திரம் உள்ளிட்ட சிலரது நடிப்பில் செயற்கை தன்மை இருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் மெலடிகள் மிக அழகாக மலர்ந்து வருகின்றன. அதிரடி இசை பாடல்கள் கைகூடவில்லையென்றே தோன்றுகிறது. பின்னணி இசை பதற்றத்தைக் கூட்டுகிறது. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது. துரத்தல் காட்சிகளில் மேலும் கீழும் புகுந்து வருகிறது. உடுமலைப்பேட்டை சங்கர் - கவுசல்யாவுக்கு நடந்த அந்த கொடூர சம்பவத்தை நினைவுபடுத்தும் அந்தக் காட்சியின் படமாக்கல் ஒரு நிமிடம் பதற வைக்கிறது.        

 

sasikumar and team



க்ளைமாக்ஸை நெருங்கும் வேளையில் முதல் பாகத்தின் 'சம்போ சிவ சம்போ' பாடல் ஒலிக்கும்போது நமக்கு உண்மையில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஏற்படும் அந்த சிலிர்ப்புக்கு இசை மட்டும் காரணமல்ல மிக மிக இயல்பாகப் பொருந்தி, நம்மை நெருங்கி, விறுவிறுவென நகர்ந்த அந்த திரைக்கதையும்தான். இத்தனை ஆண்டுகளில் சமுத்திரக்கனியிடம் சமூக அக்கறை பெருகி அந்த இயல்புத்தன்மை குறைந்திருக்கிறது. அது படத்தின் முக்கிய கதையை கொஞ்சம் சமரசம் செய்யும் எல்லைக்கு செல்கிறது. 'நாடோடிகள்' ஏற்படுத்திய சிலிர்ப்பை 'நாடோடிகள் 2' ஏற்படுத்தவில்லை. ஆனாலும், பார்க்கத்தக்க படம்தான்.            

                          

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“நமது காலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்” - சசிகுமார்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
sasikumar about aadujeevitham movie and director blessy

மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடு ஜீவிதம்’ நாவல் அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஒருவரால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலி மற்றும் அதிலிருந்து அவர் எப்படி தப்பித்து இந்தியா வந்தார் என்பதை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது.

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் 10 வருடங்கள் கதை உருவாக்கத்திலிருந்து 6 வருடங்கள் படப்பிடிப்பிலிருந்து மொத்தம் 16 வருடங்கள் கழித்து இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக பிரித்விராஜ் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது.

சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பிரித்விராஜின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். முன்னதாகவே இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது, கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். அந்த வகையில் தற்போது, இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் இப்படத்தின் இயக்குநர் குறித்தும் ஆடு ஜீவிதம் படம் குறித்தும் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “பிளெஸ்சி சாரும் பின்னே நானும். சுப்ரமணியபுரம் மலையாளத் திரைக்கதை வெளியீட்டு விழாவில் அவருடைய நட்பு கிடைத்தது. திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் எனது ஈசன் திரைப்படத்தில் நட்புக்காக நடித்துக் கொடுத்தார். அப்பொழுதிருந்தே ஆடு ஜீவிதத்தின் கதையை மனதில் சுமந்து கொண்டிருந்தார். 

sasikumar about aadujeevitham movie and director blessy

பெரும் பாரமென அக்கதை அவரது இதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதை அவர் பேச்சில் உணர முடிந்தது. இத்தனை வருடம் கழித்து தனது பாரத்தை நமது இதயத்தில் ஏற்றி வைத்திருக்கிறார். திரைப்படத்தின் ஒற்றை வரியாக பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற குரல் எனக்குள் ஒலிப்பதைப் போல இருந்தது. பிருத்விராஜ் அக்குரலைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். மனதையும் உடலையும் ஒப்புக் கொடுத்திருக்கிறார். பின்னணியில் முன்னணியாக ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்த்தியிருப்பது மாபெரும் பேரிசை. எவரும் மறக்க முடியாத மறுக்க முடியாத பெருவெள்ளம். பிளெஸ்சி சாருக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். கோட் லைப் நமது காலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்” எனப் பதிவிட்டுள்ளார்.