Skip to main content

போதும் சந்தானம்... போதும்! டகால்டி விமர்சனம்

Published on 02/02/2020 | Edited on 02/02/2020

இந்தியாவில் உள்ள அனைத்து டான்கள் தொடங்கி இன்டு, இடுக்கு, சந்து, பொந்து என பல்வேறு பகுதிகளில் இருக்கும் ரவுடிகள் வரை ரித்திகா சென்னை வலை வீசித் தேடுகிறார்கள். இவர்களோடு ஹீரோ சந்தானமும் அவரை தேடுகிறார். கண்டுபிடிப்பவர்களுக்கு 10 கோடி பரிசு அறிவிக்கப்படுகிறது. அவரை கண்டுபிடிப்பதற்கு ஏன் 10 கோடி பரிசு அறிவிக்கப்படுகிறது? எதற்காக, யாருக்காக இந்த தேடுதல் படலம், இதில் சந்தானமும் ஏன் இணைகிறார் என்பதே விஜய் ஆனந்த் இயக்கியுள்ள 'டகால்டி' படத்தின் கதை.

 

santhanam



அடிப்படையில் சற்று வித்தியாசமான கதை கருவோடு வந்திருக்கும் 'டகால்டி' படம் சந்தானத்தை மாஸ் ஹீரோவாக்கும் இன்னொரு முயற்சியாக வந்துள்ளது. பாடலுடன் பாரில் இன்ட்ரோ, முழு வீச்சில் சண்டைக்காட்சி, வில்லனுக்கெதிரான பன்ச் என நாயகத்தன்மைக்கு தேவையென கருதப்படும் அத்தனை அம்சங்களும் திரைக்கதையில் சேர்க்கப்பட்டுள்ளது. சந்தானமும் இவை அத்தனையையும் ஒரு முழு ஹீரோவாகவே முயற்சி செய்து செய்கிறார். ஆனால் ரசிகர்களை கவர்வது எது? அவரது நல்ல கவுண்ட்டர்கள் நிறைந்த காமெடிதான். 'டகால்டி'யில் ஒர்க்-அவுட் ஆகியிருப்பது ஹீரோயிஸமா காமெடியா? படத்தின் கதையில் வில்லன் குறித்த ஐடியா புதிதாக இருக்கிறது. நன்றாக இருக்கிறதா? திரைக்கதை வடிவம் நாம் பார்த்துப் பழகிய பழைய ஸ்டைல்தான். சந்தானம் - யோகிபாபு காம்போ எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. அவர்கள் கூட்டணியில் ஓரிரு சிரிக்கவைக்கும் நகைச்சுவை வசனங்களும் இருக்கின்றன. ஆனால் இவர்கள் இருவருக்கும் போதிய அளவில் காட்சிகள் இல்லை. படத்தில் மற்றொரு ஆறுதல் தரும் விஷயமாக தெலுங்கு நடிகர் பிரம்மானந்தத்தின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. படத்தின் கடைசியில் 20 நிமிடங்கள் இவர் வரும் காட்சிகள் கலகலப்பு.

 

 

rithika sen



இயக்குனர் விஜய் ஆனந்த் சந்தானத்தை ஹீரோவாக்கவே காட்சிகளை அமைத்துள்ளதால் திரைக்கதையில் மிஸ் பண்ணிவிட்டார். கொஞ்சம் சுவாரசியமான கதைக்கரு கிடைத்தும் அதை பெரிதாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது. தான் ஒரு காமெடி படமா இல்லை மாஸ் படமா என்ற குழப்பம் கடைசி வரை படத்திற்கு இருக்கிறது போல. சந்தானம், கண்டிப்பாக மாஸ் நாயகனாக நடிக்கலாம். ஆனால், அதற்குரிய ஸ்ட்ராங்கான தேவையுள்ள ஒரு கதையை உருவாக்க வேண்டுமல்லவா? நாயகியின் பாத்திரம், நாம் சமீப காலங்களில் பார்த்த 'லூசுப்பெண்' பாத்திரங்களிலேயே மோசமானதாக இருக்கிறது. ஆனால், அதில் நடித்துள்ள ரித்திகா சென் ரசிகர்களை கவர்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ராதாரவி, தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே ஆகியோர் அவரவருக்கு கொடுத்த வேலையை செய்துள்ளனர். விஜய் நரேனின் பாடல்கள் பெரிதாக மனதை கவராமல் கடந்து செல்கின்றன. பின்னணி இசை கொஞ்சம் கூடுதல் பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கிறது. தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு படத்தின் மேக்கிங்கை தரமாக்கியிருக்கிறது.
 

yogi babu



பிறரை கிண்டல் செய்து சிரிக்கவைக்கும் வகை நகைச்சுவையின் வெற்றி என்பது, கிண்டல் செய்யப்படுபவரே ரசிக்கும் போதுதான் நிகழும். சந்தானம், முன்பு அந்த வகையில் எக்ஸ்பெர்ட்டாக இருந்தார். இந்தப் படத்தில் அவர் யோகிபாபுவை வர்ணிக்க பயன்படுத்தும் வார்த்தைகள் நம்மை 'போதும் சந்தானம் போதும்' என்று சொல்ல வைக்கின்றன. அதேதான் அவரது பில்ட்-அப் ஆக்ஷன் காட்சிகளிலும் தோன்றுகின்றன. படத்திலேயே அரிதாக சில காமெடிகள் நம்மை சிரிக்கவைக்கும்போது 'இதுதான் வேணும் சந்தானம் வேணும்' என்று சொல்ல வைக்கின்றன. சந்தானம்தான் முடிவு செய்ய வேண்டும்.          
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

'இங்க நான் தான் கிங்கு' - கமல்ஹாசன் வெளியிட்ட கலர்ஃபுல் போஸ்டர்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
kamalhaassan released the poster of santhanam movie Inga Naan Thaan Kingu

நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில் நடித்துள்ளார். சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  'இங்க நான் தான் கிங்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலர்ஃபுல்லாக இந்த போஸ்டர் அமைந்துள்ள நிலையில் வருகிற கோடைக்கு இப்படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தானத்தின் முந்தைய படங்கள் போல காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.