Skip to main content

'கார்கி' வென்றாளா, இல்லையா? - விமர்சனம் 

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

sai pallavi gargi movie review

 

சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகிவரும் சூழலில் அதை வைத்து பல படங்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அதில் சில படங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி தூக்கத்தை தொலைக்க வைக்கிறது. சில படங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அப்படியே கடந்து சென்று விடுகிறது. அந்த வகையில் தற்போது அதே பாலியல் வன்கொடுமையை எதிர்த்து உருவாக்கப்பட்டு ரிலீசாகி உள்ள கார்கி திரைப்படம் பார்ப்பவர் தூக்கத்தை கெடுத்ததா? இல்லையா?

 

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு சிறுமியை நான்கு வடமாநில நபர்கள் கூட்டு பலாத்காரம் செய்து விடுகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமைகள் செய்த அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். விசாரணை முடிவில் இதில் ஐந்தாவதாக அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் ஒரு நபரும் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடிக்கின்றனர். அந்த அப்பார்ட்மெண்டில் செக்யூரிட்டியாக வேலை செய்யும் சாய் பல்லவியின் தந்தை ஐந்தாவது நபராக கைது செய்யப்படுகிறார். தன் தந்தை நிரபராதி என்று உறுதியாக நம்பும் சாய்பல்லவி அவரை எப்படியாவது காப்பாற்ற சட்டரீதியாக போராடுகிறார். இந்தப் போராட்டத்தில் சாய்பல்லவி வெற்றி பெற்றாரா, இல்லையா? ஐந்தாவது குற்றவாளி யார்? என்ற கேள்விகளுக்கு விடையாக உருவாகியுள்ளது கார்கி திரைப்படம்.

 

இப்படி ஒரு அழுத்தமான கதையை அதன் அழுத்தம் குறையாத நேர்த்தியான திரைக்கதை மூலம் பார்ப்பவர்களுக்கு பதைபதைப்பையும், சுவாரஸ்யத்தையும் கொடுத்து சமூகத்துக்கு அவசியமான ஒரு வெற்றி படமாக வெளியாகியுள்ளது கார்கி திரைப்படம். குறிப்பாக யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய திருப்பம் நிறைந்த கிளைமாக்ஸ் காட்சி மூலம் இந்த சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்தை விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அழகாக பார்ப்பவர்கள் மனதுக்குள் ஊடுருவ செய்துள்ளார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன்.

 

அதேபோல் ஊடகங்கள் டிஆர்பி காக ஒரு செய்தியை பிரேக்கிங் நியூஸ் ஆக வெளியிடுவதால் சாமானிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் எதார்த்தமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் இருப்பார்கள் என்ற மிகப் பெரிய விழிப்புணர்வை இப்படம் மூலம் கொடுத்து தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்து உள்ளார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன்.

 

படம் ஆரம்பித்து சிறிது நேரம் மெதுவாக செல்லும் திரைக்கதை போகப்போக அழுத்தமும், திருப்பமும் நிறைந்த நேர்த்தியான திரைக்கதையால் வேகமெடுத்து இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு மிகப் பெரிய டிவிஸ்ட்டை கொடுத்து பார்ப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி படமும் பத்திரமாக கரை சேர்ந்துள்ளது. குறிப்பாக கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளும், போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக அமைந்து படத்துக்கு பிளஸ் ஆக மாறியுள்ளது.

 

sai pallavi gargi movie review

 

ஒரு நடுத்தரக் குடும்பத்து பெண்ணாகவே தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளார் சாய் பல்லவி. தன் தந்தைக்காக காதலருடன் வக்காலத்து வாங்கும் இடத்திலும் சரி, போலீசிடம் பிடிபட்ட தந்தையிடம் காட்டும் பரிவிலும் சரி, கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் எடுக்கும் அதிரடி முடிவிலும் சரி, தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார். தந்தையை காப்பாற்ற துடிக்கும் பெண்ணாக நடித்திருக்கும் இவரது நடிப்பு மிகவும் எதார்த்தமாக அமைந்து நடுத்தர குடும்பத்து பெண்னை அப்படியே நம் கண்முன் பிரதிபலித்துள்ளது.

 

sai pallavi gargi movie review

 

திக்குவாய் வக்கீலாக வரும் காளி வெங்கட் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து உள்ளார். இவரின் எதார்த்த நடிப்பும், அலட்டிக்கொள்ளாத உடல்மொழியும் காட்சிகளை எலிவேட் செய்து பார்ப்பவர்களுக்கு அயர்ச்சி ஏற்படாத வகையில் அமைந்துள்ளது. இவரின் இந்த யதார்த்த நடிப்பால் படத்தின் நாயகன் ஆகவே மாறி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

திருநங்கை நீதிபதியாக நடித்திருக்கும் கதாபாத்திரம் தனக்கு எதிராக வரும் விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள விதமும், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமும் தியேட்டர்களை கைத்தட்டல் மூலம் அதிர செய்துள்ளது. இந்த மாதிரியான ஒரு முக்கியமான வழக்கில் திருநங்கையை நீதிபதியாக நியமித்து, அந்த கதாபாத்திரத்தை ஏற்று கொள்ளும்படியும் அமைத்து கைதட்டல் பெற்றுள்ளார் இயக்குநர். அதேபோல் அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நியாயம் செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்துள்ளார் திருநங்கை நடிகை. சாய்பல்லவியின் தந்தையாக வரும் ஆர்.எஸ் சிவாஜி தனது பரிதாபமான உடல் மொழியால் கவனம் பெற்றுள்ளார். அலட்டிக்கொள்ளாத இவரது நடிப்பும், கிளைமாக்ஸ் காட்சியில் உருகும் இடத்திலும் அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் லிவிங்ஸ்டன், ஜெயபிரகாஷ், சரவணன், கவிதாலயா கிருஷ்ணன் ஆகியோர் அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளனர். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், நடிகையுமான ஐஸ்வர்யா லட்சுமி கௌரவ தோற்றத்தில் வந்து செல்கிறார்.

 

sai pallavi gargi movie review

 

ஸ்ரையன்டி பிரேம் கிருஷ்ணா அக்கடுவின் ஒளிப்பதிவில் இன்டீரியர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் கோர்ட்டு சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக அமைந்து காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. அதேபோல் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்திற்கு இன்னொரு நாயகனாகவே மாரி எந்தெந்த காட்சிகளுக்கு எந்தெந்த உணர்வுகளை கடத்த முடியுமோ, அந்தந்த உணர்வுகளை அழகாக கடத்தி பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.

 

சமூகத்துக்கு மிக அவசியமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் படியான கதை இப்படத்தில் அமைந்ததற்காகவும், முக்கியமாக பெண் பிள்ளைகளை பெற்ற குடும்பத்திற்கு அவசியமானதாக இருப்பதற்காகவும், அதை நல்ல திருப்பங்களுடன் சுவாரசியமாக சொன்னதற்காகவும் இது தவிர்க்க முடியாத படமாக மாறியுள்ளது.

 

கார்கி - மிகவும் முக்கியமானவள்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் படம் - இணையும் இரண்டு ஆஸ்கர் இசையமைப்பாளர்கள்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோயினாக வலம் வரும் சாய் பல்லவி, இப்போது தமிழில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் கதாநாயகியாகவும், நாக சைதன்யாவின் 23-வது படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இதையடுத்து பாலிவுட்டில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. இதனிடையே சீதை கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிப்பதாகக் கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படும் சூழலில் மூன்று பாகங்களாக இப்படம் உருவாகுவதாக பேசப்படுகிறது. இத்தகவல் அனைத்தும் உறுதியாகிவிட்டதெனவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

ஹாலிவிட்டில் தி லையன் கிங், தி டார்க் நைட், இன்டெர்ஸ்டெல்லர் உள்ளிட்ட உலகலளவில் கவனம் பெற்ற ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்த ஹன்ஸ் ஜிம்மரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக திரை வட்டாரங்களில் தெரிவிக்கின்றன. மேலும் ஏ.ஆர் ரஹ்மானிடமும் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஹன்ஸ் ஜிம்மர், தி லையன் கிங் மற்றும் டியூன் உள்ளிட்ட படங்களுக்காக இரண்டு முறையும் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.