Skip to main content

படமா இல்லை வீடியோ கேமா? சாஹோ - விமர்சனம் 

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

பாகுபலி என்ற மிகப்பெரும் முயற்சி, அதுவும் மிகப்பெரும் வெற்றி பெற்ற முயற்சிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் திரைப்படம், 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள படம், ஜாக்கி ஷெராஃபிலிருந்து அருண் விஜய் வரை பல மொழியிலும் பிரபலமான நடிகர்கள் நடித்துள்ள படம், பாடல்களுக்கு நான்கு, பின்னணி இசைக்கு ஒன்று என ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ள படம், 'வாஜி சிட்டி' என்ற பிரம்மாண்டமான கற்பனை நகரத்தில் எடுக்கப்பட்டுள்ள படம், கடைசியாக... பல முறை சொல்லப்பட்டது போல, ஹாலிவுட்டுக்கு சவால் விடும் இந்திய படம்... என பல வகையிலும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கி வெளிவந்திருக்கும் 'சாஹோ', எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா?

 

prabhas



வாஜி சிட்டி... மிக அதிக பணம் புழங்கும், மிகப் பெரும் கேங்ஸ்டர்களும் குற்றவாளிகளும் கோலோச்சும் உலகின் மிகபணக்கார நகரம், அல்லது நாடு. (துபாய் போல என்று எடுத்துக்கொள்ளலாம்). அங்கு, கேங்ஸ்டர்கள், தொழிலதிபர்களுக்கு எல்லாம் தலை, ராய் குரூப்ஸ். ராய் குரூப்ஸின் தலைவர் ராய், கொல்லப்பட, அந்த மிகப்பெரும் பீடத்திற்கு அடுத்து யார் வருவது என்ற அதிகாரப் போட்டி நடக்கிறது. இன்னொரு பக்கம் இந்தியாவில், மும்பையில் நூதன முறையில், தாங்கள் திருடினோம் என்பதே தெரியாமல் பலர் திருட்டில் பங்குகொள்ளும் திருட்டு, ஒரு நகைக்கடையில் நடக்கிறது. அந்தத் திருடனைப் பிடிக்க அண்டர் கவர் போலீஸ் அஷோக் சக்ரவர்த்தி தலைமையில் ஒரு டீம் அமைக்கப்படுகிறது. மும்பை சம்பவத்துக்கும் வாஜி சிட்டிக்கும் என்ன தொடர்பு? இரண்டு ட்விஸ்டுகள், இருநூறு சண்டைக்காட்சிகள், நான்கு பாடல்கள், நானூறு பில்ட்-அப்புகள், ஒரு ஐநூறு (இது திரையரங்கின் சீட் எண்ணிக்கை அல்ல) கொலைகளுடன் இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது 'சாஹோ'.

நிறைய வி.எஃப்.எக்ஸ், கொஞ்சம் செட், கொஞ்சம் உண்மை என வாஜி சிட்டி, நம் கண்களை பிரம்மிக்க வைக்கிறது. பாடல்கள் உட்பட, படம் நடக்கும் இடங்களின் தேர்வு மிகச் சிறப்பு. உண்மையில் படத்தின் பிரம்மாண்டத்தை உணர வைப்பவை லொகேஷன்கள்தான். அந்த உணர்வில் பெரும் பகுதி மதியின் மிக மிக சிறப்பான ஒளிப்பதிவில் ஏற்படுவதுதான். இத்தனை பிரம்மாண்டமும் படத்திற்கு உதவுவது, காட்சிகள் தோன்றிய சில நிமிடங்கள்தான். அதன் பிறகு, படத்தை நடத்திக் கொண்டு செல்லவேண்டிய திரைக்கதையில் பிரம்மாண்டம் இல்லை என்பது பிரம்மாண்டமான குறையாக இருக்கிறது. பிரபாஸின் அறிமுகக் காட்சியே, ஒரு பக்காவான தெலுங்குப் பட உணர்வை ஏற்படுத்தி, ஏமாற்றத்தை உண்டாக்குகிறது. அங்கு தொடங்கும் ஏமாற்றம் படம் நெடுக பல இடங்களிலும் நேர்கிறது. என்னதான் பொழுதுபோக்குப் படங்களென்றாலும், பிரம்மாண்ட படங்களென்றாலும், அது அனிமேஷன் படங்களாகவே இருந்தாலும் படத்தின் சம்பவங்களில் நம்மை தொடர்புபடுத்த எமோஷன்களும் பெயரளவிலாவது காரணங்களும் தேவை. சாஹோவில் அந்த இரண்டும் பெரும்பாலும் இல்லையென்பதே குறை. உதாரணத்திற்கு மும்பையின் பரபரப்பான ஒரு பகுதியில் ஒரு பழைய மேன்சன் போன்ற ஒரு குடியிருப்பில் சண்டையொன்று நடக்கிறது. அங்கு திடீரென ஒரு அறையில் மலைப் பாம்பு இருக்கிறது. இன்னொரு அறையில் கருஞ்சிறுத்தை உறுமுகிறது. வழியில் நெருப்புக்கோழி நடந்து செல்கிறது. இதற்கு பெயரிளவிலாவது தர்க்கமோ காரணமோ சொல்லியிருக்கலாம். சந்திரமுகியில் வரும் மலைப்பாம்பின் புதிரே இன்னும் விடுபடாமல் இருக்கும் நமக்கு இதெல்லாம் ரொம்ப அதிகம்தான். இந்தக் காட்சி ஒரு சோறு பதம்.

 

 

vaaji city



கதைக்கு ஏற்ற பிரம்மாண்டம்... அல்லது பிரம்மாண்டமாகத்தான் எடுப்போம் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கேற்ற வலிமையான கதை... இந்த இரண்டு அணுகுமுறையிலும் இல்லாமல், பிரம்மாண்டமான காட்சிகளின் கோர்வையாக சாஹோ இருக்கிறது. கதையும் ஒரு நேர்கோட்டில் பயணிக்காமல் பல இடங்களில் 'டேக் டைவர்ஷன்' எடுப்பது படத்திலிருந்து இன்னும் நம்மை தள்ளிவைக்கிறது. திலீப் சுப்பராயன் உள்பட பலர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர். சண்டைக் காட்சிகள் சில இடங்களில் அசர வைக்கின்றன, பல இடங்களில் நம்மையே அசதியாக்குகின்றன. அந்த அளவுக்கு அதிகம், அந்த அளவுக்கு நீளமும் கூட. பல இடங்களில் 'இது படமா இல்ல, வீடியோ கேமா?' என்று எண்ண வைக்கின்றன.

படத்தின் இறுதியில் வரும் திருப்பம் உண்மையிலேயே சிறப்பாகத்தான் இருக்கிறது. அந்த சுவாரசியத்தை படத்தின் தொடக்கத்திலிருந்தே ஆங்காங்கே காட்டியிருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும். 'சாஹோ' பின்னணி இசையிலும் தமிழ் வடிவத்தின் வசனங்களிலும் கே.ஜி.எஃப் படத்தின் பாதிப்பு அதிகம். சில காட்சிகளிலுமே கூட தாக்கம் தெரிகிறது. ஆனால், அந்தத் தாக்கம் நமக்கு ஏற்படவில்லை. நான்கு இசையமைப்பாளர்களும் பாடல்களில் கைவிட்டுவிட (காதல் சைக்கோ மட்டும் கொஞ்சம் பரவாயில்லை, ஆனால் அது வரும் இடம்???) ஜிப்ரான் மட்டும் பின்னணி இசையில் தன்னந்தனியாகப் போராடியிருக்கிறார். அவருடன் சேர்ந்து படத்தைத் தங்கியிருப்பவர் ஒளிப்பதிவாளர் மதி. 'ஆம்பளைங்க இவ்வளவு சுயநலமா இருந்தா, உங்களை பெத்த நாங்க எப்படி இருப்போம்?', 'போர்ல சில தருணங்கள்ல ராஜாவே இறங்கி சண்டை போட வேண்டியிருக்கும்' போன்று சில இடங்களில் கவனிக்கவைக்கும் தமிழ்  வசனங்களை எழுதியிருப்பவர் 'கே.ஜி.எஃப்' புகழ் அஷோக்.

 

 

shradha kapoor



பிரபாஸ், இத்தனை பெரிய பட்ஜெட்டைத் தாங்கக் கூடிய நாயகனாக உண்மையிலேயே வளர்ந்துவிட்டார். உழைப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை, ஸ்டைலில் நல்ல முயற்சி செய்கிறார், ஆனால் பாகுபலி இரண்டு பாகங்கள் நடித்த களைப்போ என்னவோ, முகத்தில் தெரிகிறது. பாகுபலி, பாகுபலி என்று மீண்டும் மீண்டும் ஒப்பிடுவது தவறு, என்றாலும், அவர் செட் பண்ணிய பெஞ்ச் மார்க்காக பாகுபலி இருக்கிறது. நடிப்பில் 'சாஹோ' பிரபாஸ் 'பாகுபலி'யை தொடவில்லை என்றே தோன்றுகிறது. பிரபாஸுக்குப் பிறகு, படத்தில் ஒரு பெரிய நடிகர்கள் கூட்டமே இருந்தாலும் மனதில் நிற்பவர்கள் ஜாக்கி ஷெராஃப், அருண் விஜய் இருவர் மட்டுமே. அருண் விஜய்க்கு செம்ம ஸ்டைலிஷ் பாத்திரம், சிறப்பாக செய்திருக்கிறார். 'ஆஷிகி 2' மூலம் ஏற்கனவே சிலருக்குத் தெரிந்திருக்கும்  நாயகி ஷ்ரத்தா கபூர், படத்தின் இன்னொரு ஆறுதல்.

பிரம்மாண்டமான ஒரு படத்தை உருவாக்க நினைப்பது தவறல்ல, அது பாராட்டப்பட வேண்டிய முயற்சிதான். ஆனால், அத்தனை பிரம்மாண்டத்தையும் பார்க்கும் ரசிகனை படத்துடன் ஒன்ற வைக்கும் புள்ளி வலிமையான திரைக்கதை என்பது எப்போதும் மாறாத உண்மை.        

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!