Skip to main content

மக்கள் முதல்வர் தெரியும், திடீர் முதல்வர் தெரியும், ரௌடி முதல்வர் தெரியுமா? - நோட்டா விமர்சனம் 

Published on 06/10/2018 | Edited on 06/10/2018

அமைதிப்படை, மக்களாட்சி, முதல்வன், கோ... ஒரு புறம், ஜி, ஆயுத எழுத்து, சகுனி மறுபுறம் என தமிழ் சினிமாவில் அரசியல் படங்கள் மிகப்பெரிய வெற்றிகளையும் தோல்விகளையும் பதிவு செய்திருக்கின்றன. இதில் எந்த வரிசையில் நோட்டா இணைகிறது என்று பார்ப்போம். தெலுங்கு தேசத்தில் 'பெல்லி சூப்புலு' படம் மூலம் மிகவும் பிரபலமடைந்து பின் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் ஆகிய படங்கள் மூலம் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்த விஜய் தேவரகொண்டா நடிப்பில் நேரடி தமிழ் படமாக வந்துள்ளது நோட்டா.
 

nota vijay



முதல்வராக இருக்கும் நாசர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி கைது செய்யப்பட இருப்பதால், லண்டனில் ஜாலியாக ஊர் சுற்றி கும்மாளம் அடித்துக்கொண்டு, கேம் டெவலப்பராக வேலை பார்க்கும் தன் மகன் விஜய் தேவரகொண்டாவை ஒரே இரவில் சி.எம் ஆக்குகிறார். ஆரம்பத்தில் தனக்கு பிடிக்காமல் வேண்ட வெறுப்புமாக பதவி ஏற்கும் விஜய் தேவரகொண்டா பின்னர் ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியின் உன்னதத்தை உணர்ந்து, பத்திரிகையாளர் சத்யராஜின் ஆலோசனைப்படி பொறுப்பாக ஆட்சி நடத்தும் வேளையில் ஏற்படும் எதிர்ப்புகளையும், சவால்களையும் சமாளித்தாரா இல்லையா என்பதே 'நோட்டா'.

நிகழ்கால அரசியல் சூழலை கதையின் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையில் படத்தைத் தாங்கி நிற்கும் இரு தளபதிகளாக சத்யராஜும், நாசரும் நடித்துள்ளனர். அரசியல் படம் என்பதால் சத்யராஜும், நாசரும் கரும்பு தின்னக்  கூலியா என்பதுபோல் காட்சிக்கு காட்சி சுலபமாகப் புகுந்து விளையாடி விடுகின்றனர். இப்படி அரசியல் என்றால் என்ன என்பதை இவர்கள் வசனம் மட்டுமல்லாமல், உடல் மொழியிலும் காட்டி அசத்திக்கொண்டிருக்கும் வேலையில் இவர்களுக்கு சரியான டஃப் கொடுத்து நடித்துள்ளார் எம்.எஸ் பாஸ்கர். இவர்கள் இருவரும் மாறி மாறி வசனம் பேசி கவரும் வேலையில் சின்னச்  சின்ன அசைவுகள் மூலமே அப்லாஸ்களை தட்டிச் சென்றுவிடுகிறார் நடிகர் எம்.எஸ் பாஸ்கர். குறிப்பாக சொகுசு விடுதியில் நாசர் எம்.எல்.ஏக்களிடம் உணர்ச்சிபொங்க பேசும் இடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் காட்டும் உடல் மொழி வேற லெவல்.

 

nota sathyaraj



தெலுங்கு தேசத்திலிருந்து வந்தாலும் தமிழை ஒழுங்காக உச்சரித்ததற்கே விஜய் தேவரகொண்டாவிற்கு மிகப் பெரிய பாராட்டுக்கள். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட பயிற்சியும், உழைப்பும் தெரிகிறது. பத்திரிகையாளர்களிடம் உணர்ச்சிகரமான மிரட்டல் தொனியில் பேசுவது, மக்களுக்கு ஒரு பிரச்னை என்றவுடன் துரித நடவடிக்கையில் இறங்குவது, உருக்கமான காட்சியில் காட்டும் முகபாவம் என நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி தமிழுக்கு சரியான விதத்தில் அறிமுகமாகியுள்ளார். வெல்கம் டு தமிழ் சினிமா ப்ரோ.

படத்தின் நாயகி மெஹ்ரின் பிர்சாடாவிற்கு அதிக வேலை இல்லை. சொல்லப்போனால் இவரைக்காட்டிலும் பெண் அரசியல்வாதியாக வரும் சஞ்சனா நடராஜன் அந்த வேலையை சிறப்பாக செய்து மிரட்டியுள்ளார். தன் அறிமுகப்படத்திலேயே மனதில் பதியும்படியான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
 

nota nasser



எம்.எல்.ஏ க்கள் சொகுசு விடுதியில் குடித்து கும்மாளம் அடிப்பது, ஐ.சி.யு வார்டு அட்ராசிட்டி, ஸ்டிக்கர் பிரச்சனை, முதல்வரை பார்க்கும் எம்.எல்.ஏ க்கள் தலைகுனிந்தபடியே இருப்பது, இரவு நேர அறிக்கை, இடைத்தேர்தல் என நிகழ்கால அரசியல் நையாண்டியை கலந்துகட்டி கொடுத்துள்ளார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர். செம்பரம்பாக்கம் ஏரி திறந்து ஏற்பட்ட வெள்ளம் போன்ற சம்பவங்களை இக்கால நிகழ்வுகளோடு காட்சிப்படுத்தி அதிரடியாகக் கதை சொல்ல முயற்சி செய்துள்ளார். என்னதான் படத்தில் உள்ள பலமான காட்சிகள் ஆங்காங்கே ரசிக்கும் படி இருந்தாலும் முதல்பாதி முடிவில் ஏற்பட்ட எதிர்பார்ப்பை பிற்பாதியில் நிறைவாக பூர்த்தி செய்யாதது சற்று ஏமாற்றமே.

ரௌடி சி.எம் எனும் பில்ட்-அப்போடு வரும் இடைவேளைக்குப் பின் ரௌடி சி.எம் பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஷான் கருப்பசாமி எழுதிய வெட்டாட்டம் நாவலின் அடிப்படையில்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். திரைக்கதையை அவரும் இணைந்து எழுதியிருக்கிறார். ஆனால், அந்த விறுவிறுப்பு படத்தில் குறைவே. படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஏற்படும் சவால்களும் அவர் எதிர்கொள்ளும் வில்லன்களும் பலமாக இல்லை. நிகழ்கால அரசியல் சம்பவங்களை இணைத்தது தைரியம்தான், பாராட்டலாம். ஆனால், அந்தக் காட்சிகளை காமெடியாக அமைத்தாலே போதுமென்று நினைத்தது தவறாகிவிட்டது.

சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் விக்ரம் வேதாவிற்கு பிறகு நோட்டா உட்பட இவர் இசையில் வந்த படங்களின் பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாததை அவர் சற்று சின்சியராக பரிசீலிப்பது நல்லது.  சந்தானகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்தை தரமாக உருவாக்க உதவியுள்ளது. 'அருவி' ரேமண்ட் டெரிக் க்ராஸ்டாவின் படத்தொகுப்பு ஷார்ப்பான கட்டிங்கால் படத்தை பரபரப்பாக்க முயற்சி செய்துள்ளது.     
 

நோட்டா - மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

‘காதலே காதலே...’ - ‘96’ பட ரசிகர்களுக்கு குட் நியூஸ்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vijay sethupathi trisha 96 movie re released

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் காதலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. 

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு தற்போது வரை எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் இப்படம் தற்போது ரீ ரிலீஸாகவுள்ளது. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக அளவில் இப்படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இப்பட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.