Skip to main content

வண்ணமயமான வடசென்னை பள்ளி வாழ்க்கை? - 'ரங்கோலி' விமர்சனம்!

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

Rangoli Movie Review 

 

வடசென்னையை மையப்படுத்தி எத்தனையோ கேங்ஸ்டர் கதைகள் உலா வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் முதல்முறையாக வடசென்னையை மையமாக வைத்து பள்ளி மாணவர்கள் குறித்த விழிப்புணர்வு கதை ஒன்று தயாராகி திரையரங்குக்கு வந்திருக்கிறது. இது வட சென்னை கேங்ஸ்டர் படங்கள் பெற்ற அதே வரவேற்பைப் பெற்றுள்ளதா? இல்லையா?

 

சலவைத் தொழிலாளியான ஆடுகளம் முருகதாஸுக்கு தன் மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தனது ஏழ்மை காரணமாக கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கிறார் முருகதாஸின் மகன் ஹம்ரேஷ். எப்பொழுதும் மாணவர்களுடன் மோதல், சண்டை என அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் ஹம்ரேஷை முருகதாஸால் அடக்க முடியவில்லை. தன் மகனுக்கு சேர்க்கை சரியில்லாத காரணத்தினால் தான் அவன் இப்படி எல்லாம் அட்டகாசம் செய்கிறான் என நினைத்த ஆடுகளம் முருகதாஸ், கடன் வாங்கி தன் மகன் ஹம்ரேஷை பெரிய கான்வென்ட் பள்ளியில் சேர்க்கிறார். போன இடத்தில் இது நாள் வரை தமிழ் மீடியத்தில் படித்த ஹம்ரேஷ் அங்கு இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் தாக்குப் பிடிக்க மிகவும் சிரமப்படுகிறார். இதனால் அவர் கேலி கிண்டல்களுக்கு ஆளாகி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அதுபோக இந்த மாதிரி பெரிய பள்ளியில் படிப்பதால் தனக்கு பீஸ் கட்ட தன் குடும்பம் படும் கஷ்டத்தை எண்ணி மிகவும் வருந்துகிறார். இதற்கிடையே தன்னுடன் சக மாணவியாக படிக்கும் பிரார்த்தனா உடன் அவருக்கு காதலும் ஏற்படுகிறது. இதனால் அவரது படிப்பும் சற்று பாதிக்கப்படுகிறது. இதையடுத்து அவர் இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டாரா, இல்லையா? ஒழுங்காக படித்தாரா, இல்லையா? பிரார்த்தனா உடனான காதல் என்னவானது? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

 

அறிமுக நாயகன் ஹம்ரேஷ், கார்ப்பரேஷன் பள்ளியிலிருந்து கான்வென்ட் பள்ளிக்கு மாறும் மாணவனுடைய மனநிலை உளவியல் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை மிக எதார்த்தமாகவும் அழகாகவும் வெளிப்படுத்தி தான் ஒரு அறிமுக நடிகர் என்பதே தெரியாத அளவுக்கு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கு உறுதுணையாக இவருடன் நடித்த சக மாணவர்களும், அவருடைய காதலி பிரார்த்தனாவும் சிறப்பாக நடித்து கதைக்கும் படத்திற்கும் வலு சேர்த்து இருக்கின்றனர். பொதுவாக ஒரு கஷ்டப்படும் ஏழைக் குடும்பம் என்று ஒரு படத்தில் காட்டப்படுவது எப்படி இருக்கும் என்றால் எப்பொழுதும் சோகமாகவே இருக்கும். ஆனால் இந்தப் படத்திலோ நாயகன் ஹம்ரேஷ் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை ஆடுகளம் முருகதாஸ் தாய் சாய் ஸ்ரீ மற்றும் மூத்த மகள் அக்‌ஷயா ஹரிஹரன் ஆகியோர் எப்பொழுதும் ஸ்போர்ட்டிவாகவே எல்லா விஷயத்தையும் எடுத்துக் கொள்கின்றனர். குறிப்பாக ஆடுகளம் முருகதாஸ் மற்றும் அவரது மனைவி சாய் ஸ்ரீ உடைய கெமிஸ்ட்ரி இந்த படத்தில் மிகச் சிறப்பாக அமைந்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. இந்தப் படத்தில் இவர்கள் இருவருமே நாயகன் நாயகி போல் தோற்றமளித்து படத்தை தாங்கிப் பிடித்திருக்கின்றனர். இப்படி இவர்களது கதாபாத்திரத்தை மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் வடிவமைத்து அதன் மூலம் ஒரு கலகலப்பான அதேசமயம் மனதை வருடும்படியான மெசேஜ் உடைய திரைக்கதையை அமைத்து கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குநர் வாலி மோகன் தாஸ். 

 

Rangoli Movie Review 

 

ஒரு ஏழைக் குடும்பம் தன் பிள்ளையைப் படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதையும், அந்த மாதிரியான குடும்பத்திலிருந்து வரும் பிள்ளை ஒரே நேரத்தில் இரண்டு விதமான பள்ளிகளில் படிக்கும் பொழுது அவர் சந்திக்கும் உளவியல் ரீதியான பிரச்சனைகளையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி அதை ரசிக்கும் படியும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வாலி மோகன் தாஸ். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் நகர்ந்து இறுதிவரை கலகலப்பாகவும் அதேசமயம் கலங்கும்படியும் நகர்ந்து கடைசியில் சற்று கதைக்கு நெருக்கம் இல்லாத ஒரு கிளைமாக்ஸ் காட்சியோடு முடிந்துள்ளது. முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியில் ரிப்பீட்டான காட்சிகள் ஆங்காங்கே தென்படுவது படத்திற்கு சற்றே அயற்சியைக் கொடுத்திருக்கிறது. அதேபோல் ஒரு ஏழை மாணவன் தான் படிக்கும் கார்ப்பரேஷன் பள்ளியிலும் சிறப்பாகவே படிக்கிறான். இருந்தும் சேர்க்கை சரியில்லை என்ற ஒரு காரணத்திற்காக அவரை கான்வென்ட் பள்ளியில் சேர்த்த பிறகு அந்த மாணவன் தன் குடும்ப கஷ்டத்திற்காக மீண்டும் ஏற்கனவே படித்த பள்ளிக்கு திரும்புவது என்பது சற்றே ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லாமல் இருப்பது  கதையுடன் நம்மை ஒட்ட வைக்க மறுக்கிறது. பிராக்டிக்கலாக பார்க்கும் பட்சத்தில் இவை நடைமுறைக்கு சற்றே தள்ளி இருப்பது படத்துடன் நம்மை தள்ளி இருக்கச் செய்கிறது. மாணவன் படிப்பது 11 ஆம் வகுப்பு. அதுவும் அரையாண்டுகள் கடந்து விடுகிறது. அப்படி இருக்கும் சமயத்தில் அவர் இன்னமும் படிக்க இருப்பதோ ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே. இதுவரை தன் குடும்பம் எவ்வளவோ கஷ்டப்பட்டு அந்த மகனை படிக்க வைக்கின்றனர். அவர்களுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு என்பது அவ்வளவு பெரிய விஷயமாக இருக்க வாய்ப்பு இல்லை. இப்படியான சூழலில் ஒரு மாணவன் தன் குடும்பம் படும் கஷ்டத்தை நினைத்து தான் படிக்கும் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்படுவது என்பது அவருடைய ஸ்கூல் கேரியரை பாதிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதைப் பார்க்கும் மாணவர்கள் இதேபோல் தவறான முடிவை எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த மாதிரியான சின்ன விஷயங்களை மட்டும் தவிர்த்து விட்டு இப்படத்தை பார்க்கும் பட்சத்தில் இது ஒரு தவிர்க்க முடியாத படமாக மாறுகிறது.

 

Rangoli Movie Review 

 

கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையில் மெலடி பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக ‘எங்கெங்கும் வானம்’ பாடலில் பாடல் ஆசிரியர் வேல்முருகனின் பாடல் வரிகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அதேபோல் பின்னணி இசையும் சரியான கலவையில் அமைந்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. மருதநாயகம் ஒளிப்பதிவில் பள்ளிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

ஒரு படமாக பார்க்கும் பட்சத்தில் இப்படத்தில் பிராப்பர் திரைக்கதைக்கான எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் எதார்த்த சினிமா பாணியில் தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அப்படியே கண்முன் நிறுத்தும்படியான திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும்படி கொடுத்த இயக்குநர் வாலி மோகன் தாஸ், முடிவு காட்சிகளில் ஏனோ சற்றுத் தடுமாறி இருக்கிறார். படத்தின் முடிவாகச் சொல்ல வரும் மெசேஜ் சற்றே எதார்த்த வாழ்வுக்குத் தள்ளி இருப்பது மட்டும் சற்று மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. மற்றபடி படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல் இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

 

ரங்கோலி - கலர்ஃபுல்!


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!