Skip to main content

ஈகோ கிளாஷில் யார் வென்றது? - ‘பார்க்கிங்’  விமர்சனம்!

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Parking movie review

 

எல்.ஜி.எம் கொடுத்த சிறு சறுக்கலை சரி செய்யும் முயற்சியில் பார்க்கிங் படம் மூலம் மீண்டும் களமிறங்கி இருக்கிறார் நாயகன் ஹரிஷ் கல்யாண். மலையாள சினிமாக்களைப் போல் ஒரு அழுத்தமான ஒன்லைனை வைத்துக்கொண்டு உருவாகி இருக்கும் இத்திரைப்படம் எந்த அளவு பார்ப்பவர்களை ஈர்த்தது..?

 

ஐடி கம்பெனியில் வேலை செய்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது கர்ப்பமான மனைவி இந்துஜாவுடன் ஒரு புதிய வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். அதே வீட்டின் கீழ் போர்ஷனில் எம்.எஸ்.பாஸ்கர் அவரது குடும்பத்துடன் நீண்ட காலமாக வாடகைக்கு வசித்து வருகிறார். கர்ப்ப காலத்தில் தன் மனைவியை அலுங்காமல், குலுங்காமல் வெளியே கூட்டிச் செல்ல வசதியாக இருக்க புதிய கார் ஒன்றை வாங்குகிறார் ஹரிஷ் கல்யாண். வாங்கிய காரை தான் குடியிருக்கும் வீட்டின் கீழ் போர்ஷனுக்கு அருகே பார்க் செய்கிறார். அருகில் அரசு அதிகாரியாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் இருசக்கர வாகனமும் நிறுத்தி வைக்கப்படுகிறது. தினமும் கீழ் போர்ஷன் அருகே காரை பார்க் செய்வதால் தனது இருசக்கர வாகனத்திற்கு மிகுந்த இடையூறு ஏற்படுவதால் எம்.எஸ்.பாஸ்கருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் முட்டல் மோதல் ஏற்படுகிறது. இந்த சண்டை நாளடைவில் கைகலப்பு வரை சென்று விட போட்டிக்கு எம்.எஸ்.பாஸ்கரும் ஒரு கார் வாங்குகிறார். இருவரில் யார் அந்த இடத்தில் வண்டியை பார்க் செய்வது என்ற ஈகோ சண்டை ஏற்படுகிறது. இறுதியில் இந்த ஈகோ கிளாஷில் யார் வென்றது? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

 

மலையாள சினிமா போல் ஒரு வரி கதையை வைத்துக்கொண்டு ஒரு முழு நீளப் படமாக கொடுத்து அதையும் ரசிக்கும்படி கொடுத்து இருக்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். நமது அக்கம்பக்கத்தில் நடக்கும் சமகால பார்க்கிங் பிரச்சனையை கையில் எடுத்துள்ள இயக்குநர், அதைத் திறம்படக் கையாண்டு இரண்டு பேருக்குள் பார்க்கிங்கால் ஏற்படும் ஈகோ சண்டையை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார். ஒரு கதையாக பார்க்கும் பட்சத்தில் இது சிறிய விஷயமாக பார்க்கப்பட்டாலும் உளவியல் ரீதியாக இந்த பார்க்கிங் பிரச்சனை மக்களுக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை எதார்த்தமாக காட்சிப்படுத்தி படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். முதல் பாதி முழுவதும் அடுத்தடுத்து காட்சிகள் வேகமாக நகர்ந்து இரண்டாம் பாதி சற்றே வேகம் குறைந்து இறுதியில் மறுபடி சூடுபிடித்து நிறைவாக முடிந்துள்ளது.

 

நாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். வசன உச்சரிப்புகளை காட்டிலும் முகபாவனைகளிலும், கண் அசைவுகளிலும் மிகுந்த வில்லத்தனம் காட்டி நடிப்பில் அடுத்த பரிமாணத்தை எட்டி இருக்கிறார். ஒரு பக்கம் தன் அனுபவ நடிப்பால் வில்லத்தனம் காட்டி மிரட்டிக் கொண்டிருக்கும் எம்.எஸ்.பாஸ்கருக்கு நிகராக தன் நடிப்பை சிறப்பாக கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் ஈர்த்திருக்கிறார். இதுவரை சாக்லேட் பாயாக பார்த்த ஹரிஷ் கல்யாண், இந்தப் படம் மூலம் புதிய பரிமாணத்தில் பார்க்கலாம். வழக்கம்போல் தன் அனுபவ நடிப்பால் வில்லத்தனத்திற்கு உயிரூட்டி இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவருக்கும் ஹரிஷ் கல்யாணுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இருவரும் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு நடித்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கின்றனர்.

 

இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் ஈகோ சண்டை படத்திற்கு பிளஸ் ஆக மாறி இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு எம்.எஸ். பாஸ்கர் மீண்டும் ஒருமுறை கவனம் ஈர்த்திருக்கிறார். நாயகி இந்துஜா வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார். படத்தில் அவருக்கு பெரிதாக வேலை இல்லை. ஆனால் கிடைக்கின்ற இடங்களில் ஆங்காங்கே சிறிது ஸ்கோர் செய்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரமா ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து அவரவர் கதாபாத்திரங்கள் மூலம் படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். 

 

பாடல்களைக் காட்டிலும் சாம் சி.எஸ்.  பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. பொதுவாக இரைச்சலான சத்தத்துடன் கூடிய பின்னணி இசை அமைத்து எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய சாம் சி.எஸ். இந்தப் படத்தில் சற்றே அடக்கி வாசித்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறார். ஜிஜுவின் ஒளிப்பதிவில் வீடு மற்றும் பார்க்கிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

ஒரு சிறிய பார்க்கிங் பிரச்சனையை வைத்துக்கொண்டு முழு நீளத் திரைப்படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அதை ஆங்காங்கே சில மேடு பள்ளங்களுடன் கூடிய திரைக்கதையுடன் விறுவிறுப்பாக ரசிக்கும்படி கொடுத்து பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார்.

 

பார்க்கிங் - அவசியம்!


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பார்க்கிங் மாதிரி கதை என நினைத்தேன்” - எம் எஸ் பாஸ்கர் 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ms bhaskar speech at akkaran movie press meet

அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘அக்கரன்’. குன்றம் ப்ரொடக்‌ஷன் மற்றும் சிவானி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கபாலி விஷ் வந்த், வெண்பா, ஆகாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.ஹரி இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நடந்து முடிந்துள்ளது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். எம் எஸ் பாஸ்கர் பேசுகையில், “இந்தப்படத்திற்கு என் அக்கா மகன் மது வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்க தான் லீட் கேரக்டர் செய்யனும் என்றார். சரிப்பா கதை கேட்கிறேன் என்றேன். பார்க்கிங் மாதிரி நாயகனுக்கும் எனக்குமான கதையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கதை படு வில்லங்கமாக இருந்தது. இயக்குநரிடம் வேறு ஹீரோ நடிக்கலாமே என்றேன், ஆனால் அந்த வயது, நடிப்புக்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் எனச் சொல்லிச் சம்மதிக்க வைத்தார். 

எல்லோருடைய முயற்சியால், மிக அழகாகக் கோர்த்து, இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். மகள்கள் என்றாலே நான் உருகிவிடுவேன், வெண்பாவும், பிரியதர்ஷினியும்  என் மகள்களாக அருமையாக நடித்துள்ளார்கள். ஷூட்டிங் ரொம்ப ஜாலியாக, மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மண் புழு கூட மிதித்தால் திரும்பக் கடிக்க வரும் அது போல் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை என்றார் இயக்குநர், அந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தது” என்றார். 

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!