Skip to main content

இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கல...! நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்   

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

தமிழ் திரைப்படங்களின் கதைகளில் நெடுநாட்களாக இடம் பெறும் முக்கிய உறவு 'நட்பு'. ஆரம்பத்தில் மிகவும் புனிதப்படுத்தப்பட்டு படமாக்கப்பட்ட நட்பு, சமீப காலங்களில் அதன் நிறை குறை, துரோகம் உள்ளிட்டவற்றோடு இயல்பாகப் பேசப்படுகிறது. அந்த வரிசையில் ஒரு ஜாலியான, சில நேரம் ஒருவரை ஒருவர் காலியும் கேலியும் செய்யும் சமகால நண்பர்களின் கதை இயக்குனர் சிவா அரவிந்த்தின் 'நட்புனா என்னானு தெரியுமா?'

 

natpuna enna nu theriyuma



'ஒரே நேரத்தில் ஒரே வயிற்றில் பிறந்தால் ட்வின்ஸ், வேறு வேறு அம்மாவுக்குப் பிறந்ததால் ஃப்ரெண்ட்ஸ்' என்று பிறந்ததிலிருந்தே ஒன்றாகவே சுற்றும், ஒன்றாகவே படிக்கும் (?), ஒன்றாகவே இருக்கும் நண்பர்கள் சிவா, ராஜு, மணியாக கவின், ராஜு, அருண் ராஜா காமராஜ். பத்தாவதுடன் படிப்பை நிறுத்திவிட்டு வெட்டியாக சுற்றும் இவர்களுக்கு திடீர் ஞானம் வந்து ஒரு பிசினஸ் தொடங்குகிறார்கள். இவர்களது கலகலப்பான உழைப்பால் பிஸினஸும் பிக்-அப் ஆகிறது. அந்த நேரத்தில் நண்பர்களில் ஒருவருக்கு ரம்யா நம்பீசன் மீது காதல் வருகிறது. நட்புக்கிடையில் காதல் வந்தால் என்ன நடக்கும்? எல்லாம் நடக்கிறது. என்ன பிரச்சனைகள் வந்தன, எப்படி தீர்ந்தன என்பதை காமெடி தூக்கலாகப் போட்டு நட்பு கொஞ்சம் காதல் கொஞ்சம் சேர்த்து சொல்லியிருக்கிறது 'நட்புனா என்னானு தெரியுமா'.


நண்பனை விட்டுக்கொடுக்காமல், நண்பனுக்காக செயினை அத்துக்கொடுக்கும், நண்பனின் காதலுக்காக அடி வாங்கும், நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும் மிக நல்ல நட்புகளையே படங்களில் அதிகமாகப் பார்த்துப் பழகிய நமக்கு சின்னச் சின்ன சுயநலங்கள் சேர்ந்த, அடிக்கடி சண்டை போடும், சின்னச் சின்னதாய் ஏமாற்றிக்கொள்ளும் இயல்பான நட்பை படமாகப் பார்ப்பது ஒரு புதிய உணர்வு. அதே நேரம் நண்பன் செய்யும் ஒரு ஏமாற்று வேலையை பெரிய துரோகமாகக் கருதி அப்படியே நிரந்தரமாகப் பிரிந்து போகும் அதீத உணர்ச்சிவயப்படுதலெல்லாம் இல்லாமல், 'செஞ்சது செஞ்சுட்ட போய்த் தொல' என்று கொடுத்து வாங்கும் நட்பு இது. இந்த இயல்புத்தன்மையே படத்தை நமக்கு நெருக்கமாக்குகிறது.

  kavin ramya nambeesan



தோற்றத்திலும் செயல்பாடுகளிலும் ஸ்மார்ட்டான கவின், காதல் தேடலில் பெண்களைக் கண்டால் அசடு வடியும் ராஜு, விவரம் தெரியாத வினயமில்லாத மணி என நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். மூன்று பேருக்கும் சமமான முக்கியத்துவம் இருப்பது நன்று. படம் ஆரம்பித்து முதல் அரை மணி நேரம் மிக மெதுவாக எந்த முக்கியத்துவமும் சீரியஸ்னஸும் இல்லாமல் கொஞ்சம் அலை பாய்ந்து நகரும் கதை நண்பர்களிடையே பிரச்னை வரும் இடத்தில் நல்ல உயரம் சென்று உட்கார்கிறது. அதற்குப் பிறகு ஒவ்வொரு காட்சியுமே 'கும்தலக்கடி கலகலகல' (படத்தின் பின்னணி இசை பாணியில் சொன்னால்) தான்.


வேட்டையனாக தொலைக்காட்சி ரசிகர்களிடையே புகழ் பெற்ற கவினுக்கு நாயகனாக இது முதல் படம். குறையேதுமில்லாமல் முறையாக நடித்துள்ளார். ராஜு, நண்பராகவும் கிட்டத்தட்ட நாயகராகவும் ஒரு நல்ல அறிமுகம். சில இடங்களில் கொஞ்சம் அதிகமான எக்ஸ்ப்ரஷன்ஸ். அப்பாவி நண்பராக அருண்ராஜா, அவ்வப்போது திரையரங்கை அதிர வைக்கிறார். கிரிக்கெட் பால், ஸ்விம்மிங் பூல், மல்லிகைப் பூ  என நண்பர்களைத் திட்ட அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் அவரது குரலில், அந்த சூழலில் செம்ம சிரிப்பு... நாயகி ரம்யா நம்பீசன் ஹெல்த்தியான ஹீரோயின். காதலன் தந்தை இருவருக்கிடையில் சிக்கித் தவிக்கும்போது நன்றாக நடித்துமுள்ளார். இளவரசு, அழகம்பெருமாள் இருவருக்கும் கவனிக்கத்தக்க பாத்திரங்கள், அழகாகச் செய்திருக்கிறார்கள். மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன் இருவரும் எக்ஸ்டரா ஃபிட்டிங் போன்ற உணர்வு, பெரிதாக உதவவில்லை.

  ilavarasu



கதை தொடங்க எடுத்துக்கொள்ளும் நேரம் சற்றே சோதிக்கிறது. படத்தில் ஓரிரு காட்சிகள் 'எதுக்கு' என்று கேட்க வைக்கின்றன. உதாரணம்... அந்த ஓய்வு பெற்ற நீதிபதி மகள் திருமணத்தை நடத்த இவர்களிடம் வரும் காட்சி. காட்சிக்குள்ளேயே சில முரண்கள். இதையெல்லாம் தாண்டி படத்தின் முக்கிய கட்டம் தொடங்கும்போது கதையோடு காமெடியும் ஃபார்முக்கு வருகிறது. 'இப்படி இருக்கும்னு எதிர்பார்கல' என்று சொல்ல வைக்கிறது. தரணின் இசையில் ஜெயச்சந்திர ஹாஷ்மி, மிர்ச்சி விஜய்யின் பாடல் வரிகள் இளமை துள்ளலுடன் இருக்கின்றன. 'அந்தர் பல்டி' பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. யுவாவின் ஒளிப்பதிவு, சின்ன பட்ஜெட்டில் செட்டுகளுக்குள் எடுக்கப்பட்ட படத்தை கலர்ஃபுல்லாகக் காட்டுவதில் ஓரளவு வெற்றிபெற்றுள்ளது. நிர்மலின் படத்தொகுப்பு சீராக இருக்கிறது.

முதல் படத்தை ஜாலியான ஃப்ரெண்ட்ஷிப் படமாகக் கொடுத்து காமெடியால் கரை சேர்ந்துவிட்டார் சிவா அரவிந்த்.                             

               

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!

Next Story

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
vishnu vishal new movie with arunraja kamaraj

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஒரு படமும், கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் ஒரு படமும் தயாரித்து நடிக்கவுள்ளார். 

இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் தலைப்பு, படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.