Skip to main content

கொஞ்சம் விழிப்புணர்வு, கொஞ்சம் விறுவிறுப்பு - ஜோதி விமர்சனம்

Published on 30/07/2022 | Edited on 30/07/2022

 

A little awareness, a little vivacity - Jyoti Review

 

இந்தியாவில் பல ஆண்டு காலமாகவே நடந்து கொண்டிருக்கும் பிஞ்சு குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ஜோதி. அதுவும் கர்ப்பிணி பெண் வயிற்றை கிழித்து குழந்தையை கடத்திய அதிர்ச்சிகரமான சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம் ரசிகர்களை ஈர்த்ததா..?

 

ராட்சசன் வில்லன் சரவணன், டூலெட் புகழ் ஷீலா தம்பதியினர் ஒரு தனி வீட்டில் வசிக்கின்றனர். டாக்டராக இருக்கும் சரவணன் ஒரு அவசர சர்ஜரிக்காக இரவு வெளியூர் செல்கிறார். சரவணன் சென்றவுடன் அவர் வீட்டுக்குள் நுழையும் ஒரு மர்ம நபர் ஷீலாவின் வயிற்றை கிழித்து பிஞ்சு குழந்தையை எடுத்து சென்றுவிடுகிறார். இந்த விஷயம் போலீசான நாயகன் வெற்றிக்கு தெரியவர அவர் குற்றவாளி யார் என்பதை துப்பு துலக்க களத்தில் குதிக்கிறார். இறுதியில் குழந்தையை கடத்தி சென்ற குற்றவாளியை வெற்றி கண்டுபிடித்து தண்டித்தாரா, இல்லையா? என்பதே ஜோதி படத்தின் மீதி கதை.

 

சமூகத்துக்கு தேவையான மிக முக்கியமான ஒரு கருத்தை கதைக் கருவாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ள இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா அதை இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் பாணியில் உருவாக்கி ரசிக்க வைத்துள்ளார். கதை சிறியதாகவே இருந்தாலும் அதற்கான காரண காரணிகள், பின்புலம், அதன் வரலாற்று பின்னணி என நன்றாக கிரவுண்ட் ஒர்க் செய்து காட்சிகளை அதன்மூலம் நன்றாக மெருகேற்றி அழுத்தமான விழிப்புணர்வை இப்படம் மூலம் கொடுத்துள்ளார் இயக்குனர். பல்வேறு அரசு மருத்துவமனையில் கிடக்கும் சாமானிய மக்களின் குழந்தைகளை எப்படி இந்த மெடிக்கல் மாபியாக்கள் குறிவைத்து கடத்துகிறார்கள் என்பதை தெளிவான விளக்கங்களுடன் காட்டி பார்ப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்படியான திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்துள்ளார். படம் ஆரம்பித்து சற்று மெதுவாக நகர்ந்து, போகப்போக வேகம் எடுக்கிறது. அடுத்தடுத்து நடக்கக்கூடிய சம்பவங்களை திருப்பம் நிறைந்ததாக அமைத்து ஒரு டீசன்ட் திரில்லர் படத்தை பார்த்த உணர்வை கொடுத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா. இருந்தும் காட்சிகளை படமாக்கியதில் இன்னும் கூட சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். சில இடங்களில் நடிகர்களும், கதை நகரும் சூழலும் சற்று சீரியல் பார்த்த உணர்வை தந்துள்ளது.

 

நாயகன் வெற்றி ஜிவி படத்திற்கு பிறகு ஒரு நல்ல பிராமிசிங் ரோலில் இந்த படத்தில் நடித்துள்ளார். இவர் இன்வெஸ்டிகேஷன் செய்யும் காட்சிகளில் பதற்றம் இல்லாத ஒரு போலீஸ் அதிகாரியின் மிடுக்கான தோற்றத்துடன் கூடிய முகபாவனைகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஷீலா தனக்கு கொடுத்த வேடத்திற்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியுமோ அந்த அளவு நியாயம் செய்து அனுதாபத்தையும், கைதட்டல்களையும் பெற்றுள்ளார். குறிப்பாக இவர் கிளைமாக்ஸ் காட்சியில் தியேட்டரில் கைதட்டல்கள் பெறுகிறார்.

 

வெற்றியின் மனைவியாக வரும் கிரிஷா குரூப் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார். வெற்றியுடன் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் குமரவேல் காட்சிகளுக்கு உயிரூட்டியுள்ளார். குறிப்பாக இன்வெஸ்டிகேட்டிவ் காட்சிகளில் இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி மீண்டும் ஒரு முறை கவனம் பெற்றுள்ளார். ராட்சசன் வில்லன் சரவணன் ஆரம்பத்தில் அனுதாபம் கூட்டி பிற்பகுதியில் அமைதியான வில்லத்தனம் காட்டி சென்றுள்ளார்.

 

செசி ஜெயா ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையில் பாடல்கள் ஒகே. பின்னணி இசை படத்திற்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது. குறிப்பாக இன்வெஸ்டிகேஷன் காட்சிகளில் அளவாக இசையை கொடுத்து அசத்தியுள்ளார்.

 

இச்சமூகத்தில் பல ஆண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரிய குற்றத்தை மிக இயல்பாகவும் அதே சமயம் விழிப்புணர்வு ஏற்படும்படியாகவும் இப்படத்தை உருவாக்கியதற்கே ஜோதியை தரிசிக்கலாம்.

 

ஜோதி - புரட்சிகரமானவள்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“30 வருசமாச்சு, இன்னும் குறைந்த பாடில்லை” - நக்கீரன் ஆசிரியர்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
nakkheeran editor speech in karpu bhoomi audio launch

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. இப்படத்தின் கதை சில வருடங்களுக்கு முன் நடந்த பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, காங்கிரஸின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் படத்தின் தலைப்பிற்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை என்பதால் படத்தின் பாடலை வெளியிட முடியாத சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு படத்தின் காட்சிகளை தான் வெளியிட கூடாது என்றனர். கேசட்டுகளை வெளியிடலாம் என்று கூறி படத்தின் பாடலை வெளியிட்டார். 

இந்த நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர் கலந்து கொண்டு பேசுகையில், “இயக்குநர் நேசமுரளி பேசியதைப் பார்த்தால் இனி படம் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று நினைக்கிறேன். போகிற போக்கில் ராமாயணம் கட்டுக்கதை என சொல்லிவிட்டார். இதையே இனி விடமாட்டார்கள். சீதை என சிங்கத்துக்கு பெயர் வைத்தாலே இப்போது அடிக்கிறார்கள். இந்த சூழலில் நடிகை கவுதமியை பற்றி பேசுகிறார். பாரத தேசமா பாலியல் தேசமா என்கிறார். இதையெல்லாம் கவனித்து கொண்டிருப்பார்கள். ஆனால் இது தான் எதார்த்தம். இதற்குள் தான் வாழ்கிறோம். அதில் ஜெயிக்கிறோம். அவர் பேசின மணல்மேடு, பொள்ளாச்சி நாங்கள் கொண்டு வந்தது தான். மணிப்பூர் சம்பவத்தை நாங்களும் பேசி இருக்கிறோம். இங்கு சென்சாரை நம்பித்தான் படமே எடுக்க வேண்டியிருக்கிறது. நாங்களும் கூச முனுசாமி வீரப்பன்னு ஒரு டாக்குமெண்டரி சீரிஸ் பண்ணோம். அதைப் பார்த்துவிட்டு சிலர் கேட்டார்கள்… ஏன் இதை படமாகச் செய்யவில்லை என்று. வேறு வினையே வேண்டாம். சென்சாரிடம் இருந்து ஒரு ரீலும் தப்பாது. ஏன் தேவையின்றி அவர்களிடம் போய் கெஞ்ச வேண்டும் என்று கூறினேன். 

இந்த பொள்ளாச்சி விஷயத்தில் மொத்தம் 1100 வீடியோக்கள், எங்களிடமிருந்தது வெறும் 3 மட்டும் தான். மற்ற வீடியோக்களை வெளியிடக் கூடாது என்று அதிகாரிகளும் ஒரு அரசியல் பிரமுகரும் மிரட்டினார்கள். சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து சாட்சி விசாரணை செய்ய வேண்டும் என்று அழைப்பு வருகிறது. அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி யாரைக் கேட்டு வீடியோவை வெளியிட்டீர்கள். யாரைக் கேட்டு வெளியிட வேண்டும் என்று கேட்டேன். வெளியிட்டிருக்கவே கூடாது என்றார்கள். நான் அப்படி சட்டம் எதுவும் இருக்கிறதா என்றேன். சட்டம் இல்லை ஆனால் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். குற்றவாளி தப்பாமல் இருக்கவும், இது போன்று இனி நடக்காமல் இருக்கவும் தான் நாங்கள் செயலாற்றி இதை செய்தி ஆக்குகிறோம் என்று கூறினேன். பத்திரிக்கையில் போட்டதற்கே இந்த விசாரணை. ஆனால் நேச முரளி சினிமா எடுத்திருக்கிறார். சும்மா விடுவாங்களா.  

இயக்குநர் நேசமுரளியின் கோபமும் வேகமும் புரிகிறது. எங்களுக்கும் அந்த கோபம் இருக்கிறது. ஆனால் யதார்த்தம் வேறுமாதிரி இருக்கிறது. உங்களை நம்பி தொழில்நுட்ப கலைஞர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். இது போன்று படமெடுத்தால் 109 கட் பண்ணுவோம் என்பதற்கு நேசமுரளி உதாரணமாகிவிட்டார். சென்சார் போர்டை ஆட்கொண்டுவிட்டனர். அதை மீறித் தான் அவர் ஜெயித்தாக வேண்டும். அடுத்ததாக மணிப்பூர் விவகாரத்தை படமெடுக்க வேண்டும் என சொன்னார். மணிப்பூர் என்ற தலைப்பை எப்படி விடுவார்கள். இந்தியாவே பார்த்து கொண்டிருக்கிற பாலியல் பிரச்சனை. ஆனால் எதுவுமே பண்ணவில்லை, என சொல்லி மறுபடியும் அந்த பூமியில் அது போன்ற சம்பவங்கள் நடக்கிறதாக சொல்கிறார்கள். இதை எப்படி சென்சார் அனுமதிக்கும் என நம்புகிறீர்கள். 

மணல்மேடு விஷயத்தை 1994லயே நான் அட்டைப்படமா எடுத்தேன். ஒரு பிள்ளைய வீடு தேடி வந்து சிதைச்சிட்டாங்க. பால்டாயில் குடிச்சி குடும்பமே இறந்துட்டாங்க. 30 வருசமாச்சு. இன்னும் இதுமாதிரி சம்பவம் குறைந்த பாடில்லை, கூடத் தான் செய்கிறது. இப்படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்று யோசித்து செயல்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அதற்கான வழியை தேர்ந்தெடுப்பது நல்லது. அதற்கு நக்கீரனும் துணை நிற்கும்” என்றார். 

Next Story

ஜி2 படத்தில் பனிதா சந்து நாயகியாகிறார்!

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

 Panitha Sandhu is the female lead in G2

 

அதிவி சேஷ் கதையின் நாயகனாக நடிக்கும். 'G2 '( குடாச்சாரி 2) படத்தில் நடிகை பனிதா சந்து நாயகியாக நடிக்கிறார்.

 

நடிகர் அதிதி சேஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'G2'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்கும் நாயகி யார்? என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. 'குடாச்சாரி 2' எனும் இந்த படத்தில் நாயகன் அதிவி ஷேஷுக்கு ஜோடியாக நடிகை பனிதா சந்து நடிக்கிறார் என்ற செய்தியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.‌இந்தத் திரைப்படத்தை மக்கள் மீடியா ஃபேக்டரி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஏ கே என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வினய் குமார் சிரிகிடினி இயக்குகிறார்.‌

 

'மேஜர்', 'காஷ்மீர் ஃபைல்ஸ்' மற்றும் 'கார்த்திகேயா 2' போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் உருவாகும் ஆக்ஷன் கலந்த ஸ்பை திரில்லர் திரைப்படம் தான் 'ஜி2'.  இது போன்ற திறமையான நடிகர்களுடனும் இணைவதால் படம் பிரம்மாண்டமாகவும், தரமுடனும் இருக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.‌ 'அக்டோபர்', 'சர்தார் உத்தம்' போன்ற படங்களில் நடித்து, பாலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நடிகையாக வலம் வருகிறார் நடிகை பனிதா சந்து. இது மட்டுமின்றி அவர் தற்போது இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் தயாராகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரை இந்த திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காண்பதற்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் தயாராக இருக்கிறார்கள்.

 

இது தொடர்பாக நடிகை பனிதா சந்து பேசுகையில், '' இது என்னுடைய முதல் பான் இந்திய திரைப்படமாகும். இதுபோன்ற நம்ப முடியாத தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன். நான் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பார்வையாளர்கள் என்னை முற்றிலும் புதிய அவதாரத்தில் திரையில் பார்க்கவிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றுவது எனக்கு ஒரு ஆக்கபூர்வமான மகிழ்ச்சியுடன் கூடிய அனுபவமாக இருக்கும். '' என்றார்.