Skip to main content

பாகுபலி படிச்ச ஸ்கூல்ல இவன் ஹெட்மாஸ்டர்! தி லயன் கிங் - விமர்சனம்

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

அரியணையை கைப்பற்ற ராஜகுடும்பத்தில் நடக்கும் சூழ்ச்சியில் அரசன் கொல்லப்படுகிறான். பட்டத்திற்கு அடுத்த வாரிசான இளவரசனைக் கொல்லவும் உத்தரவிடப்படுகிறது. இளவரசன் இறந்துவிட்டதாய் நினைத்து மன்னனாய் முடிசூடுகிறான் வில்லன். ஆனால் தப்பிப் பிழைக்கும் இளவரசன் அரண்மனையை விட்டுத் தள்ளி வேறெங்கோ வசிக்கிறான். ஒரு கட்டத்தில் தன் தந்தையின் மரணத்தைப் பற்றிய உண்மையையும், தன் நாட்டு மக்களின் நிலையையும் கேள்விப்படும் இளவரசன் மீண்டும் அரண்மனைக்குத் திரும்பி, அந்த வில்லனைக் கொன்று அரியணையை கைப்பற்றி, தர்மத்தை நிலைநாட்டுகிறான். இதுதான் 'தி லயன் கிங்' படத்தின் கதை.

 

mufasa the lion king



2K கிட்ஸ் இந்த கதையை கேட்டதும் ‘பாகுபலி கதை மாதிரி இருக்கே‘ என்று கூறக் கூடும். மார்வெல் ஃபேன்ஸ் இதை தோர் கதை எனவும் ப்ளாக் பான்த்தர் கதை எனவும் கூறக்கூடும். 1600 கிட்ஸ் இதைக் கேட்டு சிரிக்கக் கூடும். ஆமாம். இந்த அத்தனை படங்களுக்கும் மூலக்கதை, ஷேக்ஸ்பியர் எழுதிய ஹேம்லெட் எனும் நாடகம் தான். வெளியானது முதற்கொண்டு எண்ணற்ற கதைகளுக்கும் நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் அடிப்படையாக இருந்து வருகிறது ஹேம்லெட். அதைத் தழுவி 1994ஆம் வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அனிமேஷன் படம் 'தி லயன் கிங்'. அந்தப் படத்தின் ரீமேக்தான் இப்போது வெளியாகியிருக்கும் 'தி லயன் கிங்'.

மேலே குறிப்பிட்டிருக்கும் அதே ஹேம்லெட் கதைதான். காட்சிக்கு காட்சி 1994ஆம் ஆண்டு வந்த லயன் கிங்கின் மறுபதிப்புதான். ஆனால் திரையில் தோன்றுவது கம்யூட்டர் கிராஃபிக்ஸா இல்லை நிஜ மிருகங்களை இப்படி நடிக்க வைத்திருக்கிறார்களா என வாய் பிளந்து பார்க்க வைக்கும் அபாரமான சி.ஜி வேலைகள்தான் படத்தின் பெரும் பலம். அரசனான முஃபாசா சிங்கத்தின் பிடரி முடி பறப்பது முதல், இளவரசன் சிம்பா பிறந்தவுடன் கொடுக்கும் முகபாவனைகள் வரை ஒவ்வொன்றிலும் அத்தனை நுணுக்கம். சிரிப்பு, சோகம், ஆச்சர்யம், வலி, அதிர்ச்சி என பெரும்பாலான உணர்வுகள் மிருகங்களின் கண்களில் பிரதிபலிக்கின்றன. அந்தளவிற்கான நுணுக்கமான உழைப்புடன் உருவாகியிருக்கிறது இந்த லயன் கிங்.

 

the lion king simba



எத்தனை முறை, எத்தனை மொழிகளில் வந்திருந்தாலும், அதே ஆர்வத்துடன், சுவாரசியத்துடன் பார்க்க வைக்கும் ஒரு மேஜிக் இந்தக்  கதையில் இருக்கிறது. அதனால்தான் 1994ஆம் ஆண்டு வந்த லயன் கிங் திரைப்படத்தை பார்த்தவர்கள் கூட, காட்சிக்கு காட்சி அப்படியே மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்த லயன் கிங்கையும் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முஃபாசா கதாப்பாத்திரம் கம்பீரத்தின் அடையாளம் என்றால், வில்லனாக வரும் ஸ்கார் பாத்திரம் சூழ்ச்சியின் அடையாளம். அந்த சிங்கத்தின் உடல் அமைப்பும், முக அமைப்பும் அந்த குணநலன்களோடு அப்படி பொருந்திப் போயிருக்கின்றன. அட்டகாசமான வடிவமைப்பு. அதேபோல் பழைய லயன் கிங்கில் கலக்கிய பும்பா மற்றும் டிமோன் கேரக்டர்களின் மீட்டுருவாக்கமும் அட்டகாசம். இந்த வகைப் படங்களில் இளவரசனை எடுத்து வளர்க்கின்ற பாத்திரம் இவர்களுக்கு. இருவரும் தோன்றும் நிமிடத்தில் துவங்கி கடைசி வரை கலகலப்புக்கு பஞ்சமில்லை. இவர்கள் அனைவரும் வாழும் காடும், அதன் ரம்மியமும் அற்புதமாய் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றனது.

ஆங்கிலத்திலும் நிறைய பிராந்திய மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது லயன் கிங். ஆங்கிலம், தமிழ் என இரண்டு முறை படம் பார்த்த பின்பு கண்ணை மூடிக் கொண்டு தமிழ் லயன் கிங் தான் அசத்தல் என்று சொல்லிவிடலாம். காரணம் அத்தனை நேர்த்தியான டப்பிங் மற்றும் பின்னணிக் குரல் கலைஞர்கள் தேர்வு. வசன மொழிபெயர்ப்பும் அதை அந்த கலைஞர்கள் பேசும் விதமும் அட்டகாசம். குறிப்பாக ஸாஸு எனும் பறவைக்கும் பின்னணி பேசியிருக்கும் மனோபாலாவின் குரலும் பேசும் விதமும் அசத்தல். அதே போல் படம் முழுக்க லூட்டியடிக்கும் பும்பா - டிமோன் ஜோடிக்கு ரோபோ சங்கர் - சிங்கம் புலியின் குரல்கள் இன்னும் வலு சேர்க்கின்றன. பல காட்சிகளில் தியேட்டர் சிரிப்பலைகளில் மூழ்குகிறது.

 

 

the lion king scar



வில்லன் ஸ்காருக்கு அரவிந்த் சாமியின் குரல் பாந்தமாய் பொருந்துகிறது. அடிக்குரலில் பேசும் சூழ்ச்சி நிறைந்த அந்தக் குரல் கிட்டத்தட்ட தனி ஒருவனின் சித்தார்த் அபிமன்யுவை நினைவுபடுத்துகிறது. முஃபாசாவின் கம்பீரத்தை இன்னும் ஓங்கி எதிரொலிக்கிறது ரவி ஷங்கரின் குரல். சமகாலத்தில் வந்த தமிழ் டப்பிங் படங்களில் மிக நேர்த்தியான டப்பிங் என்று லயன் கிங் திரைப்படத்தை சொல்லி விடலாம்.


பாடல்கள், சில பல மாஸ் காட்சிகள், வில்லன், சூழ்ச்சி, பிரிவு, கண்ணீர், காதல், பழிவாங்குதல் என ஒரு பக்கா தமிழ் கமர்ஷியல் படத்துக்கான டெம்ப்ளேட்டுள்ள படம் தி லயன் கிங். ஆனால் வருத்தம் என்னவெனில் படத்தின் கடைசி 20 நிமிடங்கள் இங்கே நாம் பார்த்து சலித்த தமிழ் மசாலா படங்களின் டெம்ப்ளேட்டில் இருப்பதுதான். உண்மை தெரிந்த நாயகன், நேரடியா வந்து ஒரே சண்டையில் வில்லனை வீழ்த்தி ஜெயிக்கும் அதே பாணி. இதுபோன்ற கதைகளில் இதெல்லாமா பார்ப்பார்கள் என்று கேள்வி கேட்டாலும், எந்தக் கதையாய் இருந்தாலும் நாயகனுக்கு தடைகள் வருவதும் அதை உடைத்து அவன் வெல்வதும்தானே பார்வையாளர்களுக்கு சுவாரசியம் ஏற்படுத்தும் திரைக்கதை? அது இல்லாததால் சிம்பா உண்மை உணர்ந்து திரும்பி வருவதற்கு பின்னான காட்சிகள் எந்தவித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடக்கின்றன.

இன்னொரு விதமான விமர்சனத்தையும் சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. மன்னனுக்குப் பின் இளவரசன், அவனுக்குப் பின் அவன் மகன் என்று ஒருவித அரசகுல அதிகாரத்தை நிலைநாட்டும், ஜனநாயகமற்ற அதிகாரப் பகிர்வை படம் காட்டுகிறது என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது. ஆனால் பாகுபலி, தோர் போல இது ஒரு காடு, அந்த காட்டின் ராஜா என்பது குறித்த ஒரு படம். அதில் எத்தகைய நற்பண்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதையே கவனித்துப் பார்க்க வேண்டும். அந்த விதத்தில் பார்த்தால், காடு என்பது அனைத்து விலங்குகளுக்கும் பொதுவானது, யாருக்கும் இது சொந்தமில்லை, அனைவருக்கும் வாழ்வதற்கான சம உரிமை உண்டு என சமத்துவத்தைதான் போதிக்கிறான் இந்த சிங்க ராஜா.

பழகிய கதைதான், பார்த்த படம்தான். ஆனால் பிரம்மிப்பூட்டும் கிராஃபிக்ஸ் வேலைகளுக்காகவும், மேம்பட்ட தொழில்நுட்ப செறிவிற்காகவும் இந்த லயன் கிங்கை தவற விடாமல் சந்தித்து விட்டு வரலாம். நிச்சயம் ஒரு பேரனுபத்தை உறுதி. அதுவும் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், இந்த வரியை படித்து முடித்ததும் டிக்கெட் எடுக்க கிளம்பி விடுங்கள்!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!