Skip to main content

காலை வாரியதா? கல்லா கட்டியதா? - லத்தி விமர்சனம்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

Laththi Movie Review

 

இரும்புத்திரை படத்திற்கு பிறகு தொடர் தோல்வி படங்களாகவே கொடுத்து கொண்டிருக்கும் விஷால் வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரிலீஸ் செய்துள்ள லத்தி திரைப்படம் காலை வாரியதா? அல்லது கல்லா கட்டியதா?

 

போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருக்கும் விஷால் ஒரு பாலியல் கொடுமை கேசில் தப்பான நபரை தண்டித்ததற்காக வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். பின்பு சுனைனா உதவியோடு போலீஸ் டிஎஸ்பி பிரபுவின் ரெகமெண்டேஷனில் விஷாலுக்கு மீண்டும் வேலை கிடைக்கிறது. இதையடுத்து பணியில் இருந்து ஓய்வு பெறப் போகும் பிரபு வில்லன் ரமணாவை ஒரு கேசில் தண்டிப்பதற்காக விஷாலிடம் உதவி கேட்கிறார். லத்தி ஸ்பெஷலிஸ்ட் ஆன விஷால் பிரபுவின் ஆணைக்கிணங்க வில்லன் ரமணாவை லாடம் கட்டுகிறார். இதன்பின் பிரபு வெளிநாடு சென்றுவிட, வில்லன் குரூப் விஷாலை தண்டிக்க அவரை வலை வீசி தேடுகின்றனர். ஒரு கட்டத்தில் வில்லன் குரூப்பிடம் விஷாலும் அவரது மகனும் மாட்டிக் கொள்கின்றனர். இதை அடுத்து விஷால் அவர்களிடம் இருந்து தன் மகனைக் காப்பாற்றி தானும் தப்பித்தாரா, இல்லையா? என்பதை படத்தின் மீதி கதை.

 

நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அரதப்பழசான ஒரு கதையை கொஞ்சம் ஆங்காங்கே பட்டி டிங்கரிங் பார்த்து வேறு ஒரு வடிவத்தில் தற்போது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும்படி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் வினோத்குமார். முதல் பாதி குடும்பம், சென்டிமென்ட், திரில்லர், ஆக்‌ஷன் காட்சி என படம் சற்று சுவாரசியமாகவே நகர்கிறது. இடைவெளிக்குப் பிறகு ஒரே இடத்தில் படம் மாட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியே வர முயற்சி செய்து முடியாமல் அங்கேயே முடிந்து விடுகிறது. 

 

முதல் பாதி முழுவதும் சரியான கலவையில் சுவாரசியமான எலிமென்ட்ஸ்களை தொகுத்து கொடுத்த இயக்குநர் இரண்டாம் பாதியில் ஒரே ஒரு கட்டடத்திற்கு உள்ளேயே படம் முழுவதும் நடக்கும் படி செய்து அதில் சுவாரசியத்தை கொடுக்கத் தவறி இருக்கிறார். படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகளே அதிகமாக இருந்தது ஓரளவுக்கு மேல் நமக்கு சலிப்பு தட்டுகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் முழுவதும் வெறும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு நடுவில் வைத்துள்ள சென்டிமென்ட் காட்சிகள் ஏனோ அழுத்தம் இல்லாமல் நம்மை வந்தடைய மறுத்துள்ளது. 

 

அப்பா, மகன் சென்டிமென்ட் காட்சிகள் என்னதான் பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாக இருந்தாலும் அது நமக்கு மனதளவில் நெகிழ்ச்சியை கொடுக்காதது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. அதேபோல் சலிப்பை கொடுக்கும் அதீத ஆக்‌ஷன் காட்சிகளும், மனதில் ஒட்டாத சென்டிமென்ட் காட்சிகளும் படத்திற்கு பாதகமாக அமைந்து அயற்சியை கொடுத்துள்ளது. ஒரு கான்ஸ்டபிள் எப்படி வில்லன்களை எதிர்கொள்கிறார் என்ற ஓரளவு புதுமையான கதையை எடுத்துக் கொண்ட இயக்குநர், அதை அதேபோல் ஓரளவு புதுமையான திரைக்கதை மூலம் கொடுத்திருந்தால் இந்த படம் கரை சேர்ந்திருக்கும்.

 

ஆக்‌ஷன் காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள் என தனக்கு கொடுத்த ஸ்பேஸில் புகுந்து விளையாடி இருக்கிறார் நடிகர் விஷால். ஆனால் கதை தேடல்களில் இன்னமும் கவனமாக இருந்திருக்கலாம். தான் மட்டுமே நன்றாக நடித்து நன்றாக ஆக்‌ஷன் காட்சிகளில் பர்ஃபாமன்ஸ் செய்தால் படம் ஓடிவிடும் என்று தப்பு கணக்கு போட்டு இருப்பது அவருக்கு இன்னொரு தோல்வியை கொடுத்திருக்கிறது. அவர் என்னதான் விழுந்து விழுந்து நடித்திருந்தாலும் ஒரு படமாக பார்க்கும் பொழுது அவை நம் மனதில் ஒட்ட மறுத்து இருப்பது படத்திற்கு பாதகமாக அமைந்திருக்கிறது. 

 

வழக்கமான கதாநாயகியாக வந்து சென்று இருக்கிறார் சுனைனா. படத்தில் இவருக்கான ஸ்பேஸ் மிகவும் குறைவு. தனக்கு கொடுத்த இடத்தை எந்த அளவு நிரப்ப முடியுமோ அதை செய்து விட்டு சென்றிருக்கிறார். விஷாலின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் சிறப்பான நடிப்பை மிக இயல்பாக வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் கிளைமாக்ஸ் காட்சிகளில் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் முனீஸ்காந்த், ஏ. வெங்கடேஷ், பிரபு, தலைவாசல் விஜய், ஆகியோர் அவரவருக்கான வேலையை செய்துள்ளனர். வில்லனாக மிரட்டி இருக்கும் ரமணா முகபாவனைகளிலேயே நம்மை மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். இவருக்கு அதிக வசனங்கள் இல்லை என்றாலும் நடை உடை பாவனைகள் மூலம் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். அதேபோல் அவரது அப்பாவாக நடித்திருக்கும் நடிகரும் வழக்கமான வில்லனாக வந்து மிரட்டி இருக்கிறார்.

 

பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவில் இரண்டாம் பாதியில் வரும் கட்டடம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஆக்‌ஷன் காட்சிகளும் ஓரளவு தரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசை நன்று. இப்படத்தை ஓரளவு ரசிக்க முடிவது என்றால் அது யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையால் மட்டுமே. வழக்கம்போல் எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு இசை தேவையோ அதை தரமாக கொடுத்து படத்தை கரை சேர்க்க முயற்சி செய்து உள்ளார்.

 

தொடர் தோல்வி படங்களை கொடுத்து வரும் விஷால் ஓரளவு பழைய கதையை தேர்ந்தெடுத்து அதில் கொஞ்சம் புதுமையான விஷயங்களை பட்டி டிங்கரிங் பார்த்து அதை புதிய வடிவத்தில் கொடுக்க முயற்சி செய்து ரிலீஸ் செய்துள்ள லத்தி திரைப்படமும் முந்தைய படங்களைப் போல் அவருக்கு காலை வாரி இருக்கிறது. கதை தேர்வில்  விஷாலுக்கு இன்னமும் கவனம் தேவை.

 

லத்தி - பவர் குறைவு!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்” - விஷால் பகிரங்க குற்றச்சாட்டு 

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vishal allegation about theatre owners for not allocating theatres for rathnam movie

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வந்தனர். மேலும் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்குகளில் ரத்னம் படம் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஷால் குற்றச்சாட்டு குறித்து பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், “சங்கத்தின் தலைவர் மீனாட்சி மற்றும் செயலாளர் சிதம்பரம் என்னுடைய ஃபோனை எடுக்க மறுக்கிறார்கள். என் நண்பர் சீனு சார், ரத்னம் படத்தை வடக்கு மற்றும் தெற்கு பதிகளில் வாங்கியிருக்கிறார். ஒரு திரைப்படம் வெளியாவதே பெரிய விஷயம். இந்த காலகட்டத்தில் இப்படி நீங்க பண்ணும் போது இதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து.   

இதில் முதலமைச்சர் திருச்சி கலெக்டர், எஸ்.பி, காவல் துறையினர் என அனைவருக்கும் நான் சொல்ல விருப்பப்படுவது, அவர்கள் செய்வது கட்டப்பஞ்சாயத்தை தவிர்த்து வேற எதுவும் கிடையாது. விஷாலுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு ஒரு புதுமுக நடிகருக்கு என்ன நடக்கும். நீங்க ஃபோன் எடுக்காமல் இருப்பது, தியேட்டர் ஒதுக்கப்படாமல் இருப்பது, அது உங்களுடைய அலட்சியம். ஆனால் அந்த அலட்சியத்தைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்” என கூறுகிறார். 

Next Story

“சாதியைத் தூக்கிப் பிடித்து எந்தக் காலத்திலும் படம் வந்தது கிடையாது” - ஹரி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
hari about caste related cinema in rathnam movir promotion

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். பின்பு திரையரங்கு ஒன்றில், ரசிகர்களைச் சந்தித்து பேசிய அவர், “ஒரு படம் நல்லாயிருக்கு என்றால் எந்த காலத்தில் ரிலீஸ் செய்தாலும் வருவோம் என வந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றியும் வாழ்த்துகளும். உங்களை மாதிரி ஆடியன்ஸ் இருக்கும் போது எங்களுக்கு நல்ல சினிமா எடுக்க வேண்டும் என தோன்றும். அந்த வகையில் என்னுடைய ரத்னம் படம் ரிலீஸாகிறது. முதல் முறையாக யோகி பாபு ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். ரோட்ல ஒரு பொண்ணுக்கு பிரச்சனை என்றால் விடக்கூடாது. இந்தக் காலத்தில் போலிஸுக்கு பயந்து கொண்டு எதுவுமே பண்ணுவதில்லை. ஆனால் பிரச்சனை என்றால் தட்டி கேக்கணும். அந்த மாதிரி தட்டி கேட்கும் வேலையை தான் விஷால் படத்தில் பண்ணியிருக்கார்” என்றார்.     

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரத்னம் படம் ஆக்‌ஷம் படம் என்றாலும் எமோஷனலும் இருக்கும். அதனால் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். நாட்டில் எவ்வளவோ அநியாயம் நடந்துட்டு இருக்கு. நிறைய பேரு கெட்டவனா மாறிட்டான். சூழ்நிலை மாற வைக்கிறது. போதை பொருள்களும் புழக்கத்தில் சுத்திட்டு இருக்கு. இதனிடையே நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவங்கிட்ட இருந்து நல்லவங்கள காப்பாத்தனும். மனிதனுக்கு மனிதன் தான் எதிரி” என்றார்.  

அவரிடம் சாதி வைத்து படமெடுப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சாதியை மையமாக வைத்து எடுப்பது என்பதை, அவரவர்களுக்கு தெரிந்ததை வைத்து படமாக்குகிறார்கள் என்று தான் நல்ல நோக்கத்தோடு பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட ஊரை வைத்து படமெடுத்தாலே அங்கிருக்கிற சாதி, இயல்பாகவே கதைக்குள் வந்துவிடும். யாருமே வேணும் என்று சாதி வைத்து படமெடுப்பேன், என் சாதிக்காரன் மட்டும் பார்த்தால் போதும் என நினைப்பதில்லை. எல்லாருமே படம் பார்க்கணும். பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்களும் படம் பார்க்க வேண்டும். 

சாதி உயர்ந்தது, சாதியை தூக்கிப் பிடியுங்கள் என யாருமே படமெடுக்க மாட்டார்கள். எந்தக் காலத்திலும் அப்படி வந்தது கிடையாது. படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டர் இருக்கும். அவன் அப்படித் தான் சாதி பற்றி பேசிட்டு இருப்பான். ஆனால் கடைசியில் மனம் திருந்துவது போல் தான் இருக்கும். சினிமாவைப் பொறுத்தவரை எல்லா இன மக்களும் வேலை பார்த்தால் தான் படமெடுக்க முடியும். எல்லா மக்களும் பார்த்தால் தான் ஒரு சினிமா வெற்றியடைய முடியும். அதனால் சினிமா என்பது மதம், சாதி, இனம், மொழி என எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது” என்றார்.