Skip to main content

எங்கோ நடக்கும் சம்பவத்துக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? - 'கசட தபற' விமர்சனம் 

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

bfxnfdbndf

 

கவசம், சதியாடல், தப்பாட்டம், பந்தயம், அறம்பற்ற, அக்கற என்ற ஆறு கதைகளை உள்ளடக்கிய ஆந்தாலஜி படமாக வெளியாகியுள்ளது 'கசட தபற' திரைப்படம். என்னதான் இது ஆந்தாலஜி வகை படமாக இருந்தாலும் அதில் ஒரு சிறிய மாற்றம் செய்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படி என்ன மாற்றம் அது..?

 

brshsrghd

 

'கவசம்' கதையில், ஒரு மருந்து கம்பெனியில் வேலைசெய்யும் பிரேம்ஜியும் ரெஜினாவும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலை ரெஜினாவின் தந்தை சதி செய்து பிரிக்க நினைக்கிறார். அவருக்கு 'சதியாடல்' கதையில் வரும் ரவுடி சம்பத் உதவுகிறார். இவரது மகன் சாந்தனு, நீதிபதியின் மகள் சாந்தினியை காதலிக்கிறார். இந்தக் காதலை சேர்த்து வைக்க நினைக்கும் ரவுடி சம்பத்தை 'தப்பாட்டம்' கதையில் வரும் என்கவுண்டர் போலீஸ் சந்தீப் கிஷன் போட்டுத் தள்ளுகிறார். இதையடுத்து சம்பத்தின் தாதா அந்தஸ்தை சாந்தனு கைப்பற்றுகிறார். இவருக்கு உதவிசெய்து 'பந்தயம்' கதையில் வரும் ஹரிஷ் கல்யாண் நண்பராகிறார். ஹரிஷ் கல்யாணின் நண்பர் அரவிந்த் ஆகாஷ் பணத்தை விலையுயர்ந்த வைரங்களாக மாற்ற சாந்தனு உதவி செய்கிறார். அப்போது சந்தீப் கிஷனின் என்கவுண்டரில் இருந்து இருவரும் தப்பிக்கிறார்கள். இதையடுத்து நண்பர் அரவிந்த் ஆகாஷ் இறந்துவிட அவரது குடும்பத்தில் தத்துப்பிள்ளையாக மாறுகிறார் ஹரிஷ் கல்யாண். 

 

bhfdhdh


அவர் ஊரோரம் ஒரு இடம் வாங்கச் சென்ற இடத்தில் 'அறம்பற்ற' கதையில் வரும் சத்துணவு ஆயாவாக இருக்கும் விஜயலட்சுமியை சந்திக்கிறார். அப்போது விஷம் கலந்த ஜூஸை ஹரிஷ் கல்யாணும், விஜயலட்சுமியின் மகனும், அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களும் அருந்துகின்றனர். இதையடுத்து விஜயலட்சுமியின் மகன் உடல்நிலை மோசமாகிறது. அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சிறுவனுக்கு பிரேம்ஜி, வெங்கட் பிரபு வேலைசெய்யும் மருந்து கம்பெனியிலிருந்து மருந்து வாங்கி கொடுக்கிறார் விஜயலட்சுமி. அது போலி மருந்து என்பதால் அதை உட்கொண்ட விஜயலட்சுமி மகனும், சிறுவர்களும் மேலும் பாதிக்கப்பட்டு சில சிறுவர்கள் உயிரிழக்கின்றனர். இதன் காரணமான 'அக்கற' கதையில் வரும் வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டு, அவருக்குத் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இதையடுத்து அவர் தூக்கு தண்டனையிலிருந்து தப்பித்தாரா, இல்லையா? ஹரிஷ் கல்யாண் உடல்நிலை என்னவானது? பிரேம்ஜி ரெஜினா காதல் ஒன்று சேர்ந்ததா இல்லையா? விஜயலட்சுமி மகன் பிழைத்தாரா இல்லையா? ஷாந்தனு நிலை என்னவானது? சந்தீப் கிஷன் என்கவுண்டரில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.  

 

bgfdxfb


இப்படியான ஒரு குழப்பமான கதையைத் தெளிவான திரைக்கதை மூலம் புரிய வைத்ததற்கே இயக்குநர் சிம்புதேவனை பாராட்டலாம். இந்தக் கதைகளுக்கு ரசிக்கும்படியான திரைக்கதை அமைய இவர் போட்டிருக்கும் கடுமையான உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஒவ்வொரு கதைக்குள்ளும் மற்றொரு கதையை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நாசூக்காக நுழைத்து ரசிக்கவைத்துள்ளார். பொதுவாக ஆந்தாலஜி வகை படங்களில் விதவிதமான கதைகளை வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருப்பார்கள். அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அமைந்து ரசிக்கவைக்கும். ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் பெரும்பாலும் எந்த தொடர்பும் இருக்காது. ஆனால் இந்தப் படத்திலோ ஆறு கதைகள் தனித்தனியாக சொல்லப்பட்டாலும், இறுதியில் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைவதுபோல் திரைக்கதையில் சிறிய மாற்றம் செய்து ரசிக்கவைத்துள்ளார் இயக்குநர் சிம்புதேவன். இதை ஒரு முழுநீள தரமான படமாக எடுக்க வாய்ப்பு இருந்தும், அதே கதையை வேறுவிதமாக சிந்தித்து ஆறு பகுதிகளாக மாற்றி நம் மூளைக்கும் வேலைகொடுப்பதுபோல் திரைக்கதை அமைத்து சிந்திக்கவும், ரசிக்கவும் வைத்துள்ளார் சிம்பு தேவன். இருந்தும் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

 

bgfdfds


பிரேம்ஜி, ரெஜினா, யூகி சேது, சம்பத், ஷாந்தனு, சாந்தினி, சென்றாயன், சந்தீப் கிஷன், சுப்பு பஞ்சு, பிரியா பவானி ஷங்கர், ஹரிஷ் கல்யாண், அரவிந்த் ஆகாஷ், எடிட்டர் ஆண்டனி, பிரிதிவி ராஜன், வெங்கட் பிரபு, விஜயலட்சுமி என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருந்தாலும் ஒவ்வொருவரும் மனதில் பதியும்படி நடித்து படத்துக்கு வலு சேர்த்துள்ளனர். இதில் வித்தியாசமாக ஹரிஷ் கல்யாண் ஒரு நெகட்டிவ் கலந்த கதாபாத்திரத்திலும், விஜயலட்சுமி அவலமான தாய் கதாபாத்திரத்திலும், வெங்கட் பிரபு அப்பாவி கைதி கதாபாத்திரத்திலும், பிரேம்ஜி வெகுளி லவ்வர் பாய் கதாபாத்திரத்திலும் நடித்து படத்துக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மற்ற அனைத்து நட்சத்திரங்களும் அவரவருக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளனர். 

 

bfhfsbhdf

 

படத்தில் ஆறு கதைகள் இருப்பதால், இதில் நிறைய டெக்னீஷியன்களும் வேலை செய்துள்ளனர். இதில் இசையமைப்பாளர்களாக யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, ஷான் ரோல்டன் ஆகியோர் பின்னணி இசையில் கலக்கியுள்ளனர். மேலும், யுவனின் டூயட் பாடல் ஈர்த்துள்ளது. அதேபோல் விஜய் மில்டன், எம்.எஸ். பிரபு, பாலசுப்ரமணியம், எஸ்.ஆர். கதிர், ஆர்.டி. ராஜசேகர், சக்தி சரவணன் ஆகியோரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு கதையும் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

 

hrhdhd

 

ஒரு சம்பவத்தின் இரு வேறு கோணங்களையும் துல்லியமாக காட்சிப்படுத்தி, அதனால் ஏற்படும் விளைவுகள் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் நம்மை எப்படி அதில் சம்பந்தப்படுத்துகிறது என்கிற விஞ்ஞான விளக்கத்தை ரசிக்கும்படியும், தெளிவாகவும், எளிமையாகவும் புரியும்படி அமைந்துள்ளது இந்த 'கசட தபற' திரைப்படம்.

 

கசட தபற - தெளிவான விஞ்ஞான விளக்கம்! 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!