Skip to main content

தங்கர் பச்சான் கம் பேக்  - ‘கருமேகங்கள் கலைகின்றன’ விமர்சனம்!

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

karumegangal kalaigindrana Movie Review

 

அழகி, தென்றல், ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை போன்ற தரமான படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இயக்குநர் தங்கர் பச்சான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருமேகங்கள் கலைகின்றன படம் மூலம் மீண்டும் கோதாவில் குதித்துள்ளார். எப்பொழுதும் சமரசம் இல்லாமல் தான் நினைத்ததை கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்த தங்கர் பச்சான் இந்தப் படத்தையும் அதேபோல் கொடுத்து வெற்றி கண்டாரா, இல்லையா?

 

இப்படத்தின் கதை என்று பார்த்தால், 75 வயதான நேர்மை தவறாத ரிட்டையர்ட் ஜட்ஜ் பாரதிராஜா தன் மகன் கௌதம் வாசுதேவ் மேனன் நேர்மையற்ற வக்கீலாக இருப்பதை நினைத்து வருத்தத்துடன் வாழ்கிறார். இவருக்கு தன் மகன்கள் ஒன்று கூடி அவருடைய 75 ஆவது பிறந்தநாளை கொண்டாட விழா எடுக்கும் சமயத்தில் பாரதிராஜாவுக்கு ஒரு கடிதம் வருகிறது அந்த கடிதத்தில் வரும் தகவலால் அதிர்ச்சி அடைகிற பாரதிராஜா யாரிடமும் சொல்லாமல் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். பயணத்தில் அவருக்கு கிடைத்தது என்ன?

 

மற்றொன்று ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக இருக்கும் யோகி பாபு ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆதரவு கொடுத்து தன் வீட்டில் தங்க வைக்கிறார். கர்ப்பிணிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ஒரு சமயத்தில் அந்த குழந்தையையும் தாயையும் பிரிய நேர்கிறது. அவர்கள் சேர்ந்தார்களா  என்பது மீதிக்கதை. இந்த இரண்டு கதையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. இதன் பிறகு இந்த இரண்டு கதைகளும் ஒரு கதையாக மாறி அதன் பின் என்ன நடந்தது என்பதே கிளைமேக்ஸ்.

 

இது ஒரு வழக்கமான நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட படமாக இல்லாமல் எதார்த்த மனிதர்களின் வாழ்வியலை தத்ரூபமாக காட்சிப்படுத்தி படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதையை நெகிழும்படியான திரைக் கதையுடன் கூறி பார்ப்பவர்களைக் கலங்கச் செய்து வெற்றி பெற்று கம்பேக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான். தனக்கே உரித்தான ஆழமான காட்சி அமைப்புகள், அழகான வசனங்கள், அழுத்தமான திரைக்கதை எனத் தனது ட்ரேட் மார்க் விஷயங்களை இந்த படத்திலும் கொடுத்து குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கும் படியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன காட்சிகளில் கூட உணர்ச்சிப்பூர்வமான கதையாடல்களை அமைத்து பார்ப்பவர்களை கலங்கச் செய்திருப்பது இப்படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது.

 

இந்தத் தள்ளாத வயதிலும் மிகச் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் இயக்குநர் இமயம் நடிகர் பாரதிராஜா. பிள்ளைகள் மேல் கோபம் கொள்ளும் இடத்திலும், தான் செய்த தப்பை எண்ணி வருந்தி அதற்கான மன்னிப்பு கேட்கும் இடத்திலும், தப்பு எனத் தெரிந்ததும் அதை நேர்மையுடன் தட்டிக் கேட்கும் இடத்திலும் தனது வெர்சட்டைலான நடிப்பை கன கச்சிதமாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இவருக்கு போட்டியாக மிகச் சிறப்பான குணச்சித்திர நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் யோகி பாபு. வழக்கமாக காமெடி காட்சிகளில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பார்ப்பவர்களை கலங்கச் செய்து ரசிக்க வைத்திருக்கிறார். இவருக்கும் அந்தப் பெண் குழந்தைக்குமான கெமிஸ்ட்ரி மிக நன்றாக ஒர்க் அவுட் ஆகி ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றுக் கொடுத்துள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிதி பாலன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சின்ன சின்ன இடங்களில் கூட சிறப்பான முக பாவனைகளில் ஈர்த்திருக்கிறார். பாரதிராஜாவின் மகனாக நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். தனக்கு என்ன வருமோ அதையே இப்படத்தில் நிறைவாக செய்திருக்கிறார். மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை மிகச் சிறப்பாக செய்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர்.

 

ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் வருடுகின்றன. பின்னணி இசை கலங்க வைத்துள்ளது. உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளை இவரது இசை இன்னும் மேம்படுத்தி உள்ளது. ஏகாம்பரம் ஒளிப்பதிவில் ராமேஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. தனக்கு என்ன வருமோ அதையே இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகும் மிகச் சிறப்பாக ரசிக்கும்படி கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் தங்கர் பச்சான்.

 


கருமேகங்கள் கலைகின்றன - உணர்ச்சிப் போராட்டம்!
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

'மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்; நேற்று அழுதுட்டேன்' - தங்கர் பச்சான் பேட்டி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
pmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் கடலூரில் வாக்கு சேகரிப்புக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சான் பேசுகையில், ''கடலூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நெடுஞ்சாலைகளை மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்துதான் உருவாக்குகிறார்கள். ஆனால், உள்ளூரில் இருக்கின்ற சாலைகள் எல்லாம் போய்ப் பாருங்கள். உள்ளே இருக்கக்கூடிய மக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் எவ்வளவு தரமற்ற நிலையில் சீர்குலைந்து கிடக்கிறது என்பதைப் பாருங்கள். ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆட்சியாளர்களின் மேல் பிரச்சனை இல்லை. பிரச்சனை மக்களிடம் இருக்கிறது.

இந்த மக்கள் எனக்கான வசதியை செய்து கொடுக்காமல் ஊருக்குள்ள வந்து ஓட்டு கேட்காதீர்கள் என ஏன் கேட்கவில்லை. என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள். தொடர்ந்து வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுப் போட்டு கொண்டே இருந்தீர்களா? நீங்கள் ஓட்டுப் போடணும் என்ற அவசியமே கிடையாது. எலக்சன் எதற்கு தெரியுமா வைக்கிறாங்க? உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால், பிரச்சனை இருந்தால், யார் நமக்கு வந்தால் செய்வார்கள், யார் திறமைசாலி என்று பார்த்து ஓட்டு போட வேண்டும். அப்படி பார்த்து ஓட்டு போட்டுள்ளீர்களா? பணம் கொடுக்குறவங்க 20 கார்ல அடியாள் மாதிரி ஆளுங்கள கூட்டிக்கிட்டு வர்றாங்க. இதே மாதிரி ஆளுங்களுக்கு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தா என்ன கிடைக்கும்?  நான் இந்த மண்ணிற்கான ஆளாக இருந்தாலும் சில ஊர்களை நான் பார்த்து அழுதுவிட்டேன். கேட்டால் அமைச்சர் அந்த ஊரிலேயே இருக்கிறார். அவர் பத்து வருஷமாக அமைச்சராக இருந்திருக்கிறார். ஒரு பேருந்து வசதி கிடையாது. எந்த வசதியும் கிடையாது. மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் ஓட்டு கேட்க என்ன தகுதி இருக்கிறது'' என்றார்.