Skip to main content

காமெடி படம்தான்... அதுக்காக? ஜாக்பாட் விமர்சனம்

Published on 04/08/2019 | Edited on 04/08/2019

இரண்டாவது ரவுண்டில் தொட்டதெல்லாம் வெற்றியாக அமைந்துகொண்டிருக்கும் ஜோதிகா கேரியரில் அடுத்ததாக வந்துள்ள 'ஜாக்பாட்' படம் அவருக்கு இன்னொரு ஜாக்பாட்டாக அமையுமா? சின்ன சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வாழக்கையை நடத்திக்கொண்டிருக்கும் ஜோதிகாவும், ரேவதியும் சிறைக்கு செல்ல நேர்கிறது. அங்கு அவர்களுக்கு அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரம் புதைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்த ரகசியம் தெரிய வருகிறது. வெளியே வரும் இவர்கள் அட்சயபாத்திரம் புதைக்கப்பட்டிருக்கும் லோக்கல் தாதா ஆனந்த் ராஜ் வீட்டிற்கு சென்று அதை யாருக்கும் தெரியாமல் எடுக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களின் முயற்சி ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு முறையும் தோல்வி அடைய, கடைசியில் இவர்களுக்கு அந்த அட்சயபாத்திரம் கிடைத்ததா இல்லையா என்பதே 'ஜாக்பாட்' படத்தின் கதை.

 

jyothika



'குலேபகாவலி' படத்தின் அதே புதையல் கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, கதாபாத்திரங்களை ஆங்காங்கே சற்று மாற்றி அட்சயபாத்திரத்தில் வைத்துக் கொடுத்துள்ளார் இயக்குனர் கல்யாண். ட்ரைலர், ப்ரோமோக்களில் இருந்த அளவு  காமெடி படத்திலும் இருந்ததா என்றால் இல்லை என்றே சொல்ல வைத்துள்ளது இந்த ஜாக்பாட். ஆக்சன், காமெடி என மக்கள் பொழுதுபோக்காக ரசிக்கும் விஷயங்களை எடுத்துக்கொண்ட இப்படம் நல்ல கதைக்களம் மற்றும் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தும் அதை சரிவர பயன்படுத்தத் தவறியுள்ளது. பொதுவாக காமெடி படம் என்றால் அதிக லாஜிக் பார்க்காமல் நல்ல சிரிக்கக்கூடிய நகைச்சுவை காட்சிகள் படம் முழுவதும் படர்ந்து காணப்பட்டாலே அது வெற்றிப்படமாக அமைந்துவிடும். அப்படி பார்க்கப்போனால் கூட இந்தப் படத்தில் எல்லாம் சரிவர அமைந்தும் திரைக்கதை மற்றும் வசனங்கள் சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளன. கிட்டத்தட்ட சமகாலத்தின் அனைத்து காமெடி நடிகர்களும் இருக்கிறார்கள். ஆனால், காட்சிகளோ பழைய படங்களின் ஹிட் காட்சிகளை தழுவியும் தோற்றங்களை கிண்டல் செய்தும் ஆணுக்குப் பெண் வேடம் போட்டும் நகர்கின்றன.

 

 

jyothika revathy



படத்தின் ஆறுதலான விஷயங்களாக ஜோதிகா மற்றும் ஆனந்த் ராஜ் இருக்கிறார்கள். குறிப்பாக ஜோதிகா படம் முழுவதும் பம்பரமாகச் சுழன்றுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அனல்பறக்கவிட்டுள்ளார். நடனம், பன்ச் வசனங்கள், உடல் மொழி, முகபாவனைகள் என அத்தனையிலும் ஒரு முழு மாஸ் ஹீரோவின் அர்ப்பணிப்போடு செயல்பட்டுள்ளார். சிலம்பம் சுற்றும் காட்சி மற்றும் மழை ஃபைட் காட்சியில் ஆக்ஷன் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கிறார். அதேபோல் இவருடன் நடிப்பிலும், உடல்மொழியிலும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளார் ரேவதி. சிரமமான காட்சிகளில் ஈசியாக நடித்து அவரது வயது குறித்து வியக்கவைத்துள்ளார்.


காமெடி தாதா, பெண் போலீஸ் என இரட்டை வேடத்தில் கலக்கியுள்ளார் நடிகர் ஆனந்த்ராஜ். குறிப்பாக புற்றுக் கோவிலைத் தேடிச் செல்லும் இடத்தில் தப்புத்தப்பாக எழுதப்பட்ட பெயர்ப் பலகைகளை படித்து, விளக்கம் தரும் காட்சிகளில் சிரிப்பலையை உன்டாக்கி அயர்ச்சியை தவிர்க்க உதவி செய்துள்ளார். அதேபோல் ஆனந்தராஜின் அடியாட்களாக வரும் பழைய ஜோக் தங்கதுரை, 'கோலமாவு கோகிலா' டோனி, 'கும்கி' அஸ்வின் ஆகியோரும், ஜோதிகாவின் கையாட்களாக வரும் மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு மற்றும் இன்னொரு தாதா மன்சூர் அலிகான் ஆகியோரும் ஆங்காங்கே அவர்களுக்கேற்ப காமெடி செய்து படத்தை கரைசேர்க்க உதவி செய்துள்ளனர். சமுத்திரக்கனி, சச்சு, திவ்யதர்ஷினி, நண்டு ஜெகன் ஆகியோர் சிறிது நேரம் வந்து செல்கின்றனர். யோகி பாபு, தனது தோற்றத்தை தானே தரம் தாழ்ந்து கமெண்ட் அடித்து காமெடி செய்யும் வண்ணம் அமையும் கதைகளை இன்னும் எத்தனை நாளைக்கு தொடரப் போகிறார்?

 

 

anandraj



விஷால் சந்திரசேகர், படம் முழுவதும் வாசித்துத் தள்ளியிருக்கிறார். பின்னணி இசைக்கும் கொஞ்சம் இடைவெளி தேவைதானே? ஆர்.எஸ் ஆனந்தகுமார் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல். திலிப் சுப்புராயன் & ராக்பிரபு சண்டைப்பயிற்சி காட்சிகளுக்கு மாஸ் கூட்டியுள்ளது. காமெடி படமென்றாலும் கொஞ்சமேனும் லாஜிக்குகள், அறிவார்ந்த சிந்தனையெல்லாம் இருக்கலாம், தவறில்லை என்பதை மட்டும் இயக்குனர் கல்யாண் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஜாக்பாட் - மதிப்பு குறைவு!



 

சார்ந்த செய்திகள்

Next Story

18 வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Suriya  Jyothika to act together in movie after 18 years

சூர்யா - ஜோதிகா, கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான இவர்கள், இதுவரை 'பூவெல்லாம் கேட்டுப்பார்', உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி என 6 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

2006ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சில ஆண்டுகள் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார். பின்பு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே  பாண்டிராஜ் இயக்கத்தில் 2015ல் வெளியான பசங்க 2 படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்தது. அப்போது 36 வயதினிலே படத்திற்காக கமிட்டாகியிருந்த நிலையில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் 18 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா - ஜோதிகாவே தங்களது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயிண்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இருவரும் இணைந்து ஒர்க்கவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். ஜோதிகா,  இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!