Skip to main content

ராட்சசின்னு நினைச்சு போனோம், ஆனா... ராட்சசி - விமர்சனம்

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

தமிழ் சினிமாவில் அதிகம் தாக்கப்படாத கேட்டகிரியான ஆசிரியர்களை விமர்சித்து வந்துள்ள படம். புதூர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணியாற்ற வருகிறார் ஜோதிகா. ஒரு பள்ளி எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ அப்படியெல்லாம் உள்ளது அந்தப் பள்ளி. இதை கவனித்த ஜோதிகா அப்பள்ளியை முழுவதுமாக மாற்ற முயல்கிறார். நேர்மையற்ற ஆசிரியர்களையும், மாணவர்களையும் திருத்துகிறார். அடுத்ததாக ஒரு பெரிய அடியை எடுத்து வைக்கிறார். ஜோதிகாவின் இந்த அதிரடியான மாற்றங்களால் தன் பள்ளியில் அட்மிஷன் குறைந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாத தனியார் பள்ளி முதல்வர் ஹரிஷ் பெரடி ஜோதிகாவை பழிவாங்க அவர் மேல் வழக்கு தொடர்கிறார். போலீசார் ஜோதிகாவை கைது செய்கின்றனர். இதன் பிறகு ஜோதிகாவிற்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்ட நிலைமை என்ன என்பதே ராட்சசி படத்தின் கதை.

 

jyothika ratsasi



அரசியல் படங்கள் அதிகம் வெளிவரும் காலகட்டமாக இருக்கும் இக்காலகட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அரசு பள்ளி ஆசிரியர்களை மையப்படுத்தி வெளிவந்துள்ள படம். அரசு பள்ளி ஆசிரியர்களின் அஜாக்கிரதையால் பாதிக்கப்படும் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் நிலையை சில கமர்ஷியல் அம்சங்களோடு காட்சிப்படுத்தியுள்ளது ராட்சசி. மருந்தில் கலக்கும் தேன் போல மக்களுக்கு அவசியமான ஒரு ராவான கதையில் சில மாஸ் எலிமெண்ட்களை சேர்த்து, கூடவே நம் பள்ளிக் காலத்தை ரிலேட் செய்துகொள்ளும்படி திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் கெளதம்ராஜ். இது சில இடங்களில் சற்று மிகையாகவும் தெரிகிறது. அதுவும் ஜோதிகாவின் உடைக்கும் நடவடிக்கைக்கும் காரணமாக சொல்லப்படும் பின்னனி புத்திசாலித்தனம், கொஞ்சம் அதிபுத்திசாலித்தனம். பாரதி தம்பியின் ஷார்ப்பான வசனங்கள் படத்தின் ஆணி வேராக இருக்கின்றன. ஆங்காங்கே அட்வைஸ் தொனி. மக்களுக்கு சொல்லவேண்டிய எல்லா நல்ல விஷயங்களையும் ஒரே படத்தில் சொல்ல முயன்றுவிட்டார்களோ என்று தோன்றுகிறது. நாயகியை எதிர்க்கும் ஆசிரியர்களும் சரி, வில்லனும் சரி பலமாகவோ புத்திசாலித்தனமாகவோ இல்லாமல் இருப்பது ஜோதிகாவுக்கு நல்லதாகவும் நமக்கு சலிப்பாகவும் இருக்கிறது.

 

 

government school



படம் முழுவதும் ஜோதிகாவே நிறைந்து காணப்படுகிறார். தன் நடை, உடை, பாவனை என பாத்திரமாகவே மாறி முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பானதாகவும், அதே சமயம் தனக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து ரசிக்கவைக்கும் அவர் இதிலும் அதை சிறப்பாக செய்துள்ளார். வில்லனாக வரும் ஹரிஷ் பெரடி கொலைக்கும், பழிவாங்குதலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து வில்லத்தனம் செய்துள்ளார். உதவி தலைமையாசிரியராக வரும் கவிதா பாரதி ஆரம்பத்தில் மிரட்டி பின்னர் பணிந்துள்ளார். அரசியல்வாதி அருள்தாஸ், பி.டி.மாஸ்டர் சத்யன், அகல்யா வெங்கடேசன், முத்துராமன் ஆகியோர் அவரவர் வேலையை செய்துள்ளனர். குறிப்பாக குட்டிப்பையன் கதிர் கதாபாத்திரம் மனதை கவர்ந்துள்ளது. டீச்சராக வரும் பூர்ணிமா பாக்யராஜை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம். ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்தோடு ஒன்றவைத்துள்ளது, பாடல்கள் பெரிதாய் கவரவில்லை. கோகுல் பினோய் ஒளிப்பதிவு அரசு பள்ளியை அழகாகவும் மாணவர்கள் சூழலை பசுமையாகவும் காட்டியுள்ளது.

 

school staff



ஆங்காங்கே சாட்டை, அப்பா படங்களை நினைவுபடுத்தும் இப்படம் முழுக்க முழுக்க அரசு பள்ளி ஆசிரியர்களின் குறைகளை சில இடங்களில் மிகையாகவும், பல இடங்களில் சரியாகவும் சுட்டிக்காட்டியிருப்பதை மட்டும் தவிர்த்து அரசு பள்ளிகளில் இல்லாத அடிப்படை வசதிகள், தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் தரம், அங்கிருக்கும் கல்வி முறைகளின் அவலம், அரசு பள்ளிகளின் சத்துணவு தரம் மற்றும் கழிவறை பிரச்சனைகள், படிப்பை தவிர்த்து மாணவர்களின் இன்னல்கள் என இன்னும் கூட பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டியிருந்தால் இன்னும் அதிக மதிப்பை பெறுவாள் இந்த ராட்சசி. சில நாடகத்தனங்கள் பரவாயில்லை, நல்ல கருத்துகள் வேண்டுமென்பவர்களுக்கு ஏற்ற படம் ராட்சசி.

ராட்சசி - தேவதை, கொஞ்சம் அதிகமாக அட்வைஸ் செய்யும் தேவதை. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.