Skip to main content

ஜி.வி.பிரகாஷ் திருந்திவிட்டாரென்று நினைத்தோம்... ஆனால்?

Published on 27/05/2018 | Edited on 27/05/2018

செம - திரைவிமர்சனம் 

பெண் பார்க்கும் படலத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் விபரீதங்களையும் காமெடியாக சொல்ல முயன்றிருக்கும் படம் இயக்குனர் வள்ளிகாந்த்தின் 'செம'. 

 

gvp sema



ஜி.வி.பிரகாஷும் அவருடைய நண்பர் யோகி பாபுவும் திருச்சியில் காய்கறி, பழங்கள், மீன் மற்றும் கருவாடு ஆகியவற்றை லோடு வண்டியில் வைத்து விற்று வருகிறார்கள். ஒரு ஜோதிடர் சொல்லும் விஷயத்தால் கலக்கம் அடைந்த ஜி.வி.பிரகாஷின் அம்மா சுஜாதா சிவகுமார் அவருக்குப் பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பிக்கிறார். மன்சூர் அலிகான், கோவை சரளாவின் மகள் அர்த்தனாவை பெண் பார்க்க சென்ற இடத்தில் முதலில் சுமூகமாகவும் பின்னர் மன்சூர் முடிவை மாற்றுவதால் பிரச்சனையாகவும் செல்கிறது. கோபமடைந்த ஜி.வி.பிரகாஷ் மன்சூர் அலிகானிடம் 'உன் பெண்ணை திருமணம் செய்து காட்டுவேன்' என்று சவால் விடுகிறார். சவாலில் ஜெயித்தாரா இல்லையா என்பதை அப்படி இப்படி, கொஞ்சம் சிரிக்க வைத்து, கொஞ்சம் கிறுகிறுக்க வைத்து சொல்லியிருக்கிறது 'செம'.

 

sema



'நாச்சியாரு'க்குப் பிறகு ஜி.வி.பிரகாஷின் பாதை வேறு மாதிரி இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, கொஞ்சம் ஏமாற்றம் கொடுத்து தன் வழக்கமான களத்துக்குத் திரும்பியிருக்கிறார். இந்த முறை பெண்களைத் திட்டும் 'வெர்ஜின் பையன்' ரக வசனங்கள் இல்லை என்பது ஆறுதல். கிராமத்துப்  பையனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், கச்சிதமாக இருக்கிறார். நடிப்பு, வழக்கம் போல இருக்கிறது. நாயகி அர்த்தனாவிற்குக் கலையான முகம். படம் கேட்கும் நடிப்பைத் தந்துள்ளார். யோகி பாபு, கோவை சரளா இருவரும் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார்கள். முழுநீள காமெடிப் படம் என்பதால் இருவருக்கும் நல்ல ஸ்பேஸ் கிடைத்துள்ளது. முடிந்த அளவு சிரிக்க வைக்கிறார்கள். மன்சூர் அலிகான், சுஜாதா இருவரும் தங்கள் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் பார்த்து உங்களுக்கு சிரிப்பு வரவில்லையென்றால், வில்லனாக வரும் ஜனாவைப் பார்த்தவுடன் வந்துவிடுகிறது. அப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது அவரது பாத்திரம்.

 

sema arthana



'மிகப் புதிய கதையெல்லாம் இல்லை, காமெடியில் ஈடுகட்டிக்கொள்ளலாமெ'ன்று இயக்குனர் வள்ளிகாந்த் களத்தில் இறங்கியிருக்கிறார் போல. காமெடியும் ஓரளவுதான் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஒரு பாத்திரம் எத்தகையது என்ற சஸ்பென்ஸை ஆரம்பத்தில் வைக்கலாம், அல்லது படம் முழுவதும் ஒரு தன்மையில் காட்டி, இறுதியில் உண்மை வேறு என்று ட்விஸ்ட் வைக்கலாம். இரண்டுமில்லாமல் குழப்பத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன சில பாத்திரங்கள். இயக்குனர்  பாண்டிராஜின் வசனங்கள் அவருக்கேயுரிய பாணியில் ஆங்காங்கே சுவாரசியம் சேர்ந்திருக்கின்றன. ஆனால், தோற்றத்தின் அடிப்படையில் கிண்டல்கள் இனியும் தேவைதானா? ஜி.வி.பிரகாஷ் முன்பு நடித்த 'ப்ரூஸ்லீ' படத்தை இயக்கியது பாண்டிராஜின் உதவி இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜ். வள்ளிகாந்த்தும் அவரது சீடராம். என்ன கோபமோ ஜி.வி.பிரகாஷ் மேல்? ஜி.வி.பிரகாஷின் இசையில் 'சண்டாளி' பாடல் கேட்கும் ரகம். ஒளிப்பதிவாளர் விவேகானந்தன், கிராமத்தையும் கலர்ஃபுல்லாகவே காட்டியுள்ளார். படத்தில் யதார்த்தமென்று பெரிதாக எதுவுமில்லாததால் ஒளிப்பதிவிலும் அப்படியெதையும் முயற்சிக்கவில்லை போல.

 

 


இதற்கு முன்பு வந்த படங்கள் பற்றியெல்லாம் தெரியாது. லாஜிக், தரம் எதுவும் கவலையில்லை. அந்த நொடியை சிரித்துக் கொண்டாடுவோம் என்பவர்களுக்கு 'செம' ஒரு சிரிப்புப் படம். வின்னர், சக்ஸஸ், வேகம் போன்ற டைட்டில்களுடன் சில படங்கள் வந்தன. 'செம' என்ற டைட்டிலும் அவற்றை நினைவுபடுத்துகிறது.    




சார்ந்த செய்திகள்

Next Story

"நான் மேடையில் அழுததன் காரணம்..." - நடிகை அர்த்தனா விளக்கம்

Published on 24/05/2018 | Edited on 24/05/2018
arthana

 

 


சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவான 'தொண்டன்' படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அர்த்தனா பினு. இவர் தற்போது செம, கடை குட்டி சிங்கம், வெண்ணிலா கபடி குழு 2 படத்தில் நடித்து வருகிறார். இதை இவர் நடித்த செம படம் வரும் 25ஆம் தேதி (நாளை) வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் நாயகி அர்த்தனா மேடையில் அழுதார். பின்னர் இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து அழுததற்கான காரணம் குறித்து நடிகை அர்த்தனா பேசியபோது.... "படப்பிடிப்பில் இயக்குனரோ, தயாரிப்பாளரோ எனக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. நான் அழுததற்கு காரணம் வேறு. எளிதில் நான் உணர்ச்சிவசப்படுவேன். படப்பிடிப்பில் இயக்குனரும், நடிகர்களும் கஷ்டப்பட்டதை பார்த்தேன். எல்லோருடைய வாழ்க்கையும் இந்த படத்தில் உள்ளது. அதை நினைத்து படம் நன்றாக ஓட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அழுகை வந்தது. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக வருகிறேன். அடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறேன்" என்று விளக்கமளித்தார்.