Skip to main content

விஜய் ரசிகருக்கும் மிருதங்கத்துக்கும் ஒரு சம்மந்தம்... சர்வம் தாள மயம் - விமர்சனம்

Published on 02/02/2019 | Edited on 03/02/2019

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள படம் 'சர்வம் தாள மயம்'.

 

g.v.prakash with kumaravel



'இசை கொத்துற கல்லுல இருக்கும், கத்துற குழந்தை கிட்ட இருக்கும், குத்துற கொலைகாரன் கிட்ட இருக்கும், இதோ இவருகிட்ட இருக்கும், அவருகிட்ட இருக்கும், நம்ம நண்பர்கிட்ட இருக்கும், அவ்வளவு ஏன் உங்க கிட்ட கூட இசை இருக்கு' என்று வடிவேல் காமெடியில் வரும் காமெடியான வசனத்தில் ஒரு சீரியஸான ஆழமான உட்கருத்து உள்ளது. 'சர்வமும் தாள மயம்... இப்படியிருக்க இசை இவருக்குத்தான் வரும் அவருக்குத்தான் வரும் என்பது பொய்' என்று கர்நாடக சங்கீதத்தில் நெடுங்காலமாக நிலவி வரும் சாதி அடிப்படையிலான இறுக்கத்தை இடித்துப் பார்க்கும் இன்னொரு கல்லாக வந்துள்ளது 'சர்வம் தாள மயம்'. நிஜத்தில் டி.எம்.கிருஷ்ணா, பா.ரஞ்சித்தின் 'நீலம்' அமைப்பு உள்ளிட்ட பலரும் செய்து வரும் வேலையை திரையில் செய்ய முயன்றிருக்கிறார் ராஜீவ் மேனன். எல்லா ஏற்றத்தாழ்வுக்கும் இதுதான் காரணம் என யார் மீதும் பொதுவாக குற்றம் சாட்டாமல் பிரச்சனையின் அடுக்குகளை அணுக முயன்றிருக்கிறார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பீட்டர் ஜான்சன் என்கின்ற (ஜி.வி.பிரகாஷ்) ஒரு தீவிர விஜய் ரசிகராக வருகிறார். விஜய் படங்கள் வெளியாகும் நாட்களில் இருக்கின்ற முக்கிய வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு தியேட்டர்களில் டிரம்ஸ் அடித்து அலப்பறை செய்கிறார். அப்போது ஒரு பிரச்சனையில் இவருக்கு தலையில் அடிபட்டு நர்சாக வரும் அபர்ணா பாலமுரளியிடம் சிகிச்சை எடுக்கிறார். அந்த சமயம் இவருக்கு அபர்ணா மீது காதல் வர வெட்டியாக சுற்றும் ஜி.வி.பிரகாஷின் காதலை ஏற்க மறுத்து ஒழுங்காக ஒரு வேலை செய்து உருப்பட சொல்கிறார் அபர்ணா முரளி. ஜி.வி.பிரகாஷின் தந்தை குமரவேல் மிருதங்கம் செய்யும் தொழிலாளி. இவர் செய்த மிருதங்கத்தை மாபெரும் மிருதங்க வித்வானாக வரும் நெடுமுடி வேணுவிடம் டெலிவரி செய்ய ஜி.வி.பிரகாஷ் அவரது கச்சேரி நடக்கும் சபாவிற்கு செல்கிறார். அங்கு நெடுமுடி வேணுவின் இசை கச்சேரி பார்க்கும் ஜி.வி.பிரகாஷுக்கு தானும் ஒரு மிருதங்க வித்வானாக ஆகவேண்டும் என்ற எண்ணம் உதிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் நெடுமுடி வேணுவிடம் சிஷ்யனாக சேர முயற்சி எடுக்கிறார். இவர் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றாரா, பெரிய மிருதங்க வித்வானாக உருவானரா, காதலில் ஜெயித்தாரா? பதில்தான் 'சர்வம் தாள மயம்'. இந்தக் கேள்விகளுக்கு விடை மட்டுமல்லாமல் மேலும் பல கேள்விகளையும் கொண்டிருக்கிறது படம்.

 

nedumudi venu



ஒரு நல்ல கதை, அந்தக் கதையை காட்சிப்படுத்திய விதமும் அருமை. குறிப்பாக படத்தின் இசை மற்றும் சப்தம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் மிக நுட்பமாகக் கையாண்டுள்ளார் இயக்குனர் ராஜீவ் மேனன். பெரும்பாலும் கர்நாடக இசைக் கலைஞர்கள் எல்லோரும் முன்னேறிய சமூகத்திலிருந்து வந்தவர்களாகவே இருக்க, ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து தனக்குக் கொஞ்சமும் பரிட்சயம் இல்லாத இசை துறையில் நுழைந்து அதில் இருக்கும் சவால்களை ஜி.வி.பிரகாஷ் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ராஜீவ் மேனன்.

குறிப்பாக பத்ம பூஷன் விருது வாங்கிய மிகப்பெரும் மிருதங்க வித்வானாக நெடுமுடி வேணு மற்றும் அந்த மிருதங்கத்தை செய்யும் தொழிலாளியாக குமரவேல், இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து அசத்தி படத்தை தாங்கிப்  பிடித்துள்ளனர். இவர்களின் இயல்பான நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. அதுவும் நடிப்பில் நெடுமுடி வேணுவின் அனுபவமும் கைதேர்ந்த அணுகுமுறையும் அயர்ச்சி ஏற்படும் இடங்களை எல்லாம் சரி செய்து ரசிக்கவும் நெகிழவும் வைக்கிறது. 'செத்துப்போன மாட்டுக்கும், பட்டுப்போன மரத்திற்கும் உயிர் கொடுக்கிறது தனி கலை', 'நீ ஜெயிச்ச ஒரு வித்துவான பார்த்துட்டு பேசுற நான் தோத்த 100 தொழிலாளியை பார்த்துட்டு பேசுறேன்', 'எதுக்குடா ஓடற ஓடிப் போய் ரயிலையா பிடிக்கப் போற' போன்ற ராஜீவ் மேனனின் எளிமையானதும் அதே சமயம் அழுத்தமானதுமான வசனங்களை இவர்கள் இருவரும் பேசி, காட்சிகளுக்குப் புத்துயிரூட்டி உள்ளனர். அந்த அளவிற்கு படத்திற்கு வசனம் பெரும் பலமாக அமைந்துள்ளது.

துருதுரு நாயகனாக வரும் ஜி.வி.பிரகாஷுக்கும் அபர்ணா முரளிக்கும் உண்டான காதல் காட்சிகளை இன்னும் கூட கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கலாம். குறைவான காட்சிகளால் காதல் அழுத்தமில்லாமல் போகிறது. ஜி.வி.பிரகாஷ் எதார்த்த நாயகனாக நடித்துள்ளார். பல இடங்களில் எதார்த்தமாக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்துள்ளார். அதற்கு சில இடங்களில் கொஞ்சம் பலனும் கிடைத்துள்ளது. அபர்னா முரளிக்கு அதிக வாய்ப்பில்லையென்றாலும் வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்துள்ள வினித், டிடி என்கின்ற திவ்யதர்ஷினி இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்துள்ளனர். என்றாலும் இவர்கள் பாத்திரங்கள் மனதிலிருந்து தள்ளியே நிற்கின்றன.

 

aparna balamurali



என்னதான் படத்தில் இத்தனை விஷயங்கள் நன்றாக இருந்தாலும் படம் பார்ப்பவர்கள் மனதில் பேசப்படும் விஷயம் வீரியமாகப் பதியவில்லை. படத்தின் கதையில் இருந்த அழுத்தம் காட்சிப்படுத்துதலில் இல்லாதது படத்திற்கு மைனஸ். கர்நாடக இசை, மிருதங்கம், அதை பயிலும் ஆசை என சாமானிய ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயம் இல்லாத விஷயங்களை பேசும்போது இன்னும் நெருங்கி வந்து கதை சொல்லவேண்டும். பல காட்சிகள் செயற்கையாக இருப்பது போன்ற உணர்வு. இரண்டாம் பாதியில் ஜி.வி.பிரகாஷின் பயணம், இசையாக நமக்கு நல்ல அனுபவம், ஆனால் படமாக சற்றே நீளம்.

ராஜீவ் மேனன் - ஏ. ஆர்.ரஹ்மான் கூட்டணியில் இதற்கு முன் வெளியான படங்களின் பாடல்கள் மற்றும் இசை நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவே இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பை உண்டாக்கியது. அதிலும் குறிப்பாக இந்தப் படம் இசை சம்பந்தப்பட்ட படம் வேறு. அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்துள்ளார் இசைப்புயல். இசையும் ஒலியும் இந்தப் படத்தின் இன்னொரு நாயகன். படத்தில் பிரதானமாக வரும் மிருதங்கக் காட்சிகளும், வாத்தியங்களின் ஒலியும், இசையும், மெல்லிய ஒலிகளும் ஹாலிவுட் தரத்தில் பிரமிப்பூட்டுகின்றன. ஆனாலும் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வந்த பாடல்களை ஒப்பிட்டால் சற்று குறைவுதான். ரவி யாதவின் ஒளிப்பதிவில் சர்வமும் வண்ணமயம்.

சர்வம் தாள மயம் - சொல்ல வந்த விஷயத்தின் தீவிரம் சொன்ன விதத்தில் இல்லை. மற்றபடி ஒரு நல்ல இசைப் படம்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!