Skip to main content

அப்படி என்ன புதிய கதைக்களம்? - ‘குட் நைட்’ விமர்சனம்!

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

Good  night movie review

 

தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத ஒரு புதிய கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது இந்த குட் நைட் திரைப்படம். அப்படி என்ன அந்த புதிய கதைக்களம்? அது ரசிகர்களை ஈர்த்ததா, இல்லையா?

 

ஐடி கம்பெனியில் வேலை செய்யும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மணிகண்டனுக்கு தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. அதுவும் உங்க வீட்டு குறட்டை, எங்க வீட்டு குறட்டை இல்லை அது ஒரு ராஜகுறட்டை. அவர் குறட்டை விட்டால் அருகில் இருப்பவர்களின் காது அவ்வளவுதான்.. அந்த அளவு சத்தமாக இருக்கும். இப்படி ஒரு வினோத பிரச்சனை இருக்கும் மணிகண்டனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இந்த நேரத்தில் மணிகண்டனுக்கும் மீதா ரகுநாத்திற்கும் காதல் மலர்கிறது. அது திருமணம் வரை செல்ல தன் குறட்டை விஷயத்தை மறைத்து மீதாவை மணிகண்டன் திருமணம் செய்து கொள்கிறார்.

 

திருமணத்திற்கு பிறகு குறட்டை விஷயம் மீதாவுக்கு தெரிய வர அங்கு ஆரம்பிக்கிறது பிரச்சனை. இதையடுத்து இருவரும் சேர்ந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்கின்றனர். இதற்கிடையே இவர்களுக்குள் விரிசல் நீண்டு கொண்டே போகிறது. இதைத் தொடர்ந்து குறட்டைக்கான தீர்வை மணிகண்டன் கண்டுபிடித்தாரா, இல்லையா? இவர்களுக்குள் இருந்த விரிசல் சரியானதா, இல்லையா? என்பதை குட் நைட் படத்தின் மீதி கதை.

 

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அவருக்கு ஈக்குவலான நண்பனாக அவரின் அக்கா கணவரையே காண்பித்துள்ளார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். இந்த மாதிரி சின்ன சின்ன புதுமையான விஷயங்கள் படம் முழுவதும் படர்ந்து இப்படத்தை ஒரு சுவாரஸ்யமான படமாக மாற்றி இருக்கிறது. தேவையில்லாத இடத்தில் வரும் திணிக்கப்பட்ட காமெடி காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள் என எதுவுமே இந்த படத்தில் இல்லாமல் போகிற போக்கில் எதார்த்தமான ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தை கொடுத்து கவனிக்கத்தக்க இயக்குநர்களின் வரிசையில் தானும் ஒருவர் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் விநாயகர் சந்திரசேகரன்.

 

குறிப்பாக முதல் பாதி முழுவதும் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்து ஒரு சிறிய வீட்டுக்குள் நடக்கும் விஷயங்கள் மூலம் அதை கொடுத்து படத்தை கரை சேர்த்துள்ளார். ஆனால் முதல் பாதியில் இருந்த ஈர்ப்பு ஏனோ இரண்டாம் பாதியில் மணிகண்டன் குறட்டை பிரச்சனைக்கான தீர்வை காணும் காட்சிகளில் சற்றே மிஸ் ஆகி ஆங்காங்கே சற்று அயர்ச்சி கொடுத்துள்ளது. மணிகண்டனுக்கும் மீத்தாவுக்கும் ஆன சென்டிமென்ட் காட்சிகள் நன்றாக இருந்தாலும் அவை படத்திற்கு சற்று வேகத்தடையாக அமைந்திருப்பதையும் மறுக்க முடியவில்லை. இருந்தும் கிளைமாக்ஸ்க்கு முந்தைய கட்சியில் ஆரம்பித்து படம் முடியும் வரை மீண்டும் அதே சுவாரசியத்தை ரசிகர்களுக்கு மீண்டும் கொடுத்து இப்படத்தை வெற்றி படமாக மாற்றி இருக்கிறார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.

 

கொஞ்சம் கூட முகத்தில் நடிப்பே தெரியாத அளவிற்கு மிகவும் யதார்த்தமான நடிப்பை மிகத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார் நாயகன் மணிகண்டன். கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் சின்ன சின்ன இடங்களில் கூட முக பாவனைகள் மூலமும் ஆன்லைன் வசனங்கள் மூலமும் ரசிகர்களை சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்து ஈர்த்திருக்கிறார். இவருக்கும் ரமேஷ் திலக்குக்குமான கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக அமைந்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. நாயகி மீதா ரகுநாத் மேக்கப் இன்றி அழகாக இருக்கிறார், அளவாக பேசுகிறார், நிறைவாக நடித்திருக்கிறார். இவரின் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து படத்தை கரை சேர்க்க உதவி புரிந்துள்ளது. எந்தெந்த இடத்தில் எவ்வளவு வசனம் தேவைப்படுகிறது அதை சுருக்கமாக பேசி அதற்குள்ளேயே பாசம், நேசம், கோபம் ஆகியவற்றை அழகாக கடத்தி தேர்ந்த நடிகையாக திகழ்ந்துள்ளார். 

 

மணிகண்டனின் மாமாவாக நடித்திருக்கும் ரமேஷ் திலக் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். இவர் மணிகண்டனோடு அடிக்கும் லூட்டிகள் சிறப்பு. ரமேஷ் திலக்கின் மனைவியாக நடித்திருக்கும் ரேய்ச்சல் இவர்களுக்கு நன்றாக ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். பல காட்சிகளில் இவரது அனுபவ நடிப்பு அழகாக வெளிப்பட்டிருக்கிறது. மணிகண்டன் குடும்பத்தில் இருக்கும் அம்மா, தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர். அதேபோல் தாத்தா, பாட்டியாக வரும் பாலாஜி சக்திவேல் தம்பதியினர் தனக்கு கொடுத்த ஸ்பேசில் மிக அழகாக நடித்திருக்கின்றனர். எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாத நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. அதேபோல் ஐடி கம்பெனியில் வரும் ஊழியர்களின் நடிப்பும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.

 

சான் ரோல்டன் இசையில் சின்ன சின்ன பாடல்களாக இருந்தாலும் அவை கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் நம் மனதை வருடும்படியான இசையை கொடுத்து கேட்பவர்கள் மனதை கவர்ந்துள்ளார். வீட்டுக்குள்ளேயே நடக்கும் கதையை மிக சுவாரசியமாக படம் பிடித்து காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன். இவரின் நேர்த்தியான படப்பிடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

 

ஒரு சிறிய ஒன்லைன் கதையை மிக சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் இரண்டரை மணி நேரம் படமாக கொடுத்து ஆங்காங்கே சில இடங்களில் அயர்ச்சி இருந்தாலும் அவற்றை கிளைமாக்ஸ் நெருக்கத்தில் சரிகட்டி ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இப்படத்தை கொடுத்து கரை சேர்ந்துள்ளார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.

 

குட் நைட் - நல்ல தூக்கம்!


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!