Skip to main content

போதும் கௌதம், போதும்... எனை நோக்கி பாயும் தோட்டா - விமர்சனம்

Published on 04/12/2019 | Edited on 05/12/2019

ஒரு உப்பளம், ப்ரோக்கன் பிரிஜ் என்றழைக்கப்படும் உடைந்த பாலம், கடற்கரை... இவற்றை இவ்வளவு அழகாகக் காட்சிப்படுத்த இவரால்தான் முடியும், அல்லது இப்போதுள்ள இயக்குனர்களில் இவர் மட்டும்தான் இவ்வளவு அழகாகக் காட்சிப்படுத்துகிறார். இடங்களை மட்டுமல்ல, நாயகிகளை, நாயகர்களை இவரது படத்தில் பார்க்கும்போது, வேறு விதமாக, ஸ்டைலாக, அழகாகத் தெரிகிறார்கள். கவிதையான வசனங்கள், வாய்ஸ்-ஓவர் மூலம் சொல்லப்படும் கதை, மயக்கும் அழகுத்தமிழ் பாடல்கள், அசத்தும் காதல், மெக்கானிக்கல் என்ஜினியரிங் ஹீரோ, கெட்ட வார்த்தைகள், திடீரென ஒரு பயணம், அதனால் மாறும் வாழ்க்கை... என இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு, அவரே உருவாக்கிக்கொண்ட தனி அடையாளங்கள் உண்டு. 'GVM சார்' என்று அவரை கொண்டாடும் ரசிகர் கூட்டமும் உண்டு. தமிழ் சினிமா இயக்குனர்களில், தங்களுக்கென தனி திரைமொழி கொண்ட சில இயக்குனர்களில் கெளதம் ஒருவர். தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் தனுஷ் ஒருவர். இருவரும் கைகோர்த்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' ரசிகர்களுக்கு என்ன விதமான அனுபவத்தை கொடுக்கிறது?

 

dhanush



இந்த முறை ஹீரோ மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்கவில்லை, படிக்க நினைத்த அவரை கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படிக்கவைத்துவிட்டார் தந்தை. இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருக்கும் ரகுவின் (தனுஷ்) கல்லூரியில் ஒரு திரைப்பட ஷூட்டிங் நடக்கிறது. அந்தப் படத்தின் நாயகி லேகா (மேகா ஆகாஷ்). மந்திரவாதியால் கடத்தப்பட்டு கூண்டுக்குள் அடைபட்ட இளவரசி போல ஏதோ ஒரு சோகத்துடன் தோன்றும் பேரழகியான மேகாவிடம் காதல் வயப்படுகிறார் தனுஷ். மேகா, ஆதரவற்ற தன்னை வளர்த்து ஆளாக்கிய வில்லன் செந்தில் வீராசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், கட்டாயத்தில் நடிக்கிறார். அவரை பொள்ளாச்சியில் இருக்கும் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் தனுஷ். பிரச்னை தேடி வருகிறது, பிரிகிறார்கள். இன்னொரு புறம், தனுஷின் அண்ணன் சசிக்குமார் இளம் வயதிலேயே தனது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார். அவரது பிரிவின் வருத்தம் எப்போதும் தனுஷுக்கு உண்டு. தனுஷை பிரிந்து சென்ற மேகா, அண்ணன் சசிக்குமார் இருவரும் ஒரே ஊரில், ஒரே பிரச்னையில் இருப்பது திடீரென ஒரு நாள் தெரிய வர, என்ன செய்தார் தனுஷ் என்பதுதான் 'எனை நோக்கி பாயும் தோட்டா'.

 

megha akash

 

 

irutu AD



ஒரு துப்பாக்கியின் தோட்டா தன்னை நோக்கி பாய்ந்து வரும் வேளையில், தன் கடந்த கால வாழ்க்கையை அசைபோடும் தனுஷின் பார்வை, வாய்ஸ்-ஓவருடன் தொடங்கும் படம், கதை எப்படி விரியும் என்ற ஆர்வத்தை உண்டாக்குகிறது. தொடர்ந்து, அழகான காட்சிகள், நாயகி, தனுஷ், என படமாக்கப்பட்டு சில வருடங்கள் கடந்தும் ஃப்ரெஷ் ஃபீலிங் கொடுக்கின்றன காட்சிகள். தினமும் ஒரு ட்ரெண்ட் மாறும் இந்தக் காலத்தில் ஏற்கனவே வெளியாகி ஆண்டுக்கணக்கில் நின்று விளையாடிய பாடல்களும் இசையும் காட்சிகளாகவும் வசீகரிக்கின்றன. தொடக்க நேர வசனங்களில் கெளதம் மேனன் பாணியான சின்னச் சின்ன அம்சங்கள் ரசிக்க வைக்கின்றன. தனுஷ் - மேகா இடையே விறுவிறுவென வேகமெடுக்கும் காதலும் பெருக்கெடுக்கும் முத்தங்களும் நம்மை சற்று ஆச்சரியப்படுத்துகின்றன. ஆனால், நம் இந்த உணர்வுகள் தொடர்கின்றனவா?

 

enpt villan senthil



முத்தங்களிலும், அணைப்புகளிலும் மட்டும் முன்னேறும் காதல், வாய்ஸ்- ஓவரில் மட்டும் சொல்லப்படும் அண்ணன் தம்பி பாசம் ஆகியவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, அயற்சியைத்தான் உண்டாக்குகின்றன. படமெங்கும் நம்மை நோக்கி பாயும் வாய்ஸ்-ஓவர் ஒரு கட்டத்தில் அலர்ஜி ஆவது உண்மை. இத்தனை படங்களில் ரசிக்க வைத்த ஒரு அம்சம், அதீத பயன்பாட்டால் வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில், "போதும் தனுஷ், போதும் கெளதம், போதும்" என்று சொல்ல வைக்கிறது. முன், பின் என மாறி மாறி நான்-லீனியர் முறையில் தொகுக்கப்பட்டும், சென்னை- பொள்ளாச்சி-மும்பை என இடங்கள் மாறினாலும், படம் நகராமல் அதே இடத்தில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படுத்துகிறது. காரணம், பலவீனமான திரைக்கதை மற்றும் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தாத காட்சிகள், சம்பவங்கள் மற்றும் கௌதமின் மனிதர்கள்.


தனுஷ், செம்ம ஸ்டைலாக, இளமையாக இருக்கிறார். அவருக்கான உடைகள் மிக அழகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தன் பாத்திரத்தில் மிக சிறப்பாகவே நடித்துமுள்ளார். மேகா ஆகாஷ், அழகான இளவரசி. ஆனால், ஆங்காங்கே என்ன செய்வதென தெரியாமல் நிற்பது போன்ற உணர்வை வெளிப்படுத்துகிறார். வில்லனாக வரும் செந்தில் வீராசாமி சிறப்பான நடிப்பால், நம் முழு வெறுப்பையும் சம்பாதிக்கிறார். சசிக்குமார், ஒரே ஒரு சண்டைக் காட்சி தவிர மற்ற இடங்களில் புதிதாகத் தெரிகிறார். ஆனாலும், வழக்கமான சத்தமில்லாமல், ஆங்கிலம் கலந்து, நகர தொனியில் அவர் பேசும்போது, அவரை வேறு விதமாகப் பார்த்துப்பழகிய மனதுக்கு 'ஏதோ இடிக்குதே' என்று தோன்றுகிறது. சுனைனா, தனுஷின் அழகான அன்பான சீனியராக வந்து துணை நிற்கிறார். வேல ராமமூர்த்தி என்ற அனுபவம் நிறைந்த காளையை அடக்கி ஒரு அமைதியான பாத்திரத்தில் அடைந்துவிட்டார் கெளதம், பார்க்க வித்தியாசமாக இருக்கிறது.

 

 

enpt pair


 

jada AD



தர்புகா சிவாவின் பாடல்களும் இசையும் படத்தையும் நம்மையும் காப்பாற்றுகின்றன. மிகச் சிறப்பான பாடல்கள், அதற்கேற்ற, ஆனால் சற்றே சமரசம் செய்து கொள்ளப்பட்ட படமாக்கல், இரண்டும் நமக்கு பெரிய ஆசுவாசம். தாமரை, மதன் கார்க்கி ஆகியோரின் பாடல் வரிகள், அழகு. ஜோமோன் டி ஜான், மனோஜ் பரமஹம்ஸா என யார் ஒளிப்பதிவு செய்தாலும் கௌதமின் கண்களின் வழியே பார்ப்பது எல்லாவற்றையும் அழகாகக் காட்டுகிறது. 'மறுவார்த்தை' பாடல் படமாக்கப்பட்ட விதத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயங்கள் தெரிந்தாலும் இருப்பதை இத்தனை அழகாகக் காட்டியது சிறப்பு. ஆனால், இத்தனை நேர்மறை அம்சங்களையும் ஏற்படுத்திய, ஒருங்கிணைத்த கௌதம், முக்கியமான அம்சமான திரைக்கதையில் குறை வைத்துவிட்டார்.

படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் குறித்து சொல்லும் ஒரு வசனம்... "ஒரு கதை இருக்கும்னு தெரியும், ஆனா இப்படி இருக்கும்னு நினைக்கல". படம் நகர நகர நமக்கும் இப்படித்தான் தோன்றுகிறது.                  

 

Sundar Pichai


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார்.