Skip to main content

விஷால் கொடுத்த வாக்கை உடைத்தாரா வரலக்ஷ்மி? - சண்டக்கோழி 2 விமர்சனம் 

Published on 19/10/2018 | Edited on 19/10/2018

2005இல் வெளிவந்த 'சண்டக்கோழி' திரைப்படம் பலருக்கும் பல விதங்களில் முக்கியமானது. விஷாலை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகம் செய்தது 'சண்டக்கோழி'. 'ஜி' தோல்விக்குப் பிறகு லிங்குசாமியை மீண்டும் வெற்றி இயக்குநராக்கியது 'சண்டக்கோழி' திரைப்படம்தான். ராஜ்கிரண், அதற்கு முன்பே 'கம்-பேக்' கொடுத்திருந்தாலும் தன் பழைய பாணி கெத்துடன் வளம் வந்தது இந்தப் படத்தில்தான். யுவனுக்குத் தேவைப்பட்ட மாஸ் வெற்றி உள்பட பல விதங்களில் இந்தப் படம் முக்கியமான படமாக இருந்தது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக சண்டக்கோழி 2 வெளிவரும்போது இயல்பாக எதிர்பார்ப்பு உருவாகிறது. தனது இரண்டாம் படமான சண்டக்கோழியில் சிலிர்த்துக்கொண்டு சண்டைக்குப் போகும் சேவலாக விஷால் கலக்கியிருந்தார். இப்போது, சண்டக்கோழி-2, விஷாலுக்கு 25ஆவது படம். விஷாலுக்கு வாழ்த்துகள்... படம் எப்படியிருக்கிறது?

 

sandakozhi 2



ஏழு வருடங்களுக்கு முன், வேட்டைக்கருப்பு கோவில் திருவிழாவில், பந்தி பரிமாறும்போது ஏற்படும் ஒரு சண்டையைத் தொடர்ந்து நடக்கும் கொலைகளால் திருவிழா தடைபடுகிறது. அதனால், சுற்றியுள்ள ஊர்களில் தண்ணீர் பிரச்சனையிலிருந்து பல பிரச்சனைகள் ஏற்படுவதாக மக்கள் நம்புகின்றனர். தன் முயற்சியால் கோவில் திருவிழாவை நடத்துகிறார் அந்தப் பகுதிக்கே பெரியவரான துரை அய்யா (ராஜ்கிரண்). திருவிழாவை முன்னிட்டு ஏழு வருடங்களாக வெளிநாட்டிலிருந்த பாலு (விஷால்) ஊருக்கு வருகிறார். அந்த பழைய பிரச்சனையில் இழப்பை சந்தித்த வரலக்ஷ்மி, அதே திருவிழாவிலேயே பழிக்குப் பழிவாங்கவேண்டுமென வன்மத்துடன் காத்திருக்கிறார். அதைத் தடுப்போம், திருவிழாவை சுமூகமாக நடத்துவோம் என்று வாக்குத் தந்திருக்கும் துரை அய்யாவும் பாலுவும் வென்றார்களா என்பதுதான் 'சண்டக்கோழி-2'.

 

sandakozhi vishal



படத்தின் அடிப்படை களம் திருவிழா என்பதால், கோவில், திருவிழா, அதைச் சுற்றிய ஊர் என வண்ணமயமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. 'பருத்திவீரன்', 'வெயில்' போல வெயில் தகிக்கும் கிராமங்கள் அல்ல லிங்குசாமியின் கிராமங்கள். 'அய்யா சொல்வதுதான் கடைசி சொல்' என்று ஊர் மக்கள் மதிக்கும் துரை அய்யா, அமைதி அதிரடி கலந்த நாயகன் பாலு, கலகல துறுதுறு நாயகி, அழுத்தமான சண்டைக்காட்சிகள், உணர்வுபூர்வமான உறவுகள் என சண்டக்கோழியின் பாசிட்டிவ் விஷயங்களை இதிலும் பயன்படுத்தியிருக்கிறார் லிங்குசாமி. அது நன்றாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. ஆனால், மிக முக்கிய பாசிட்டிவ் விஷயங்களான நாயகனுக்கும் வில்லனுக்குமான அந்த வலுவான பிரச்சனை, நாயகனின் பின்னணி தந்த சர்ப்ரைஸ் என இந்த இரண்டு முக்கியமான விஷயங்களையும் மிஸ் பண்ணிவிட்டார். முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் இணைத்த விதமும் இடங்களும் புத்திசாலித்தனம். மீரா ஜாஸ்மின் இல்லாத காரணத்தை லாவகமாகக் கூறிவிட்டார் இயக்குனர். முதல் பாகத்தில் வரவேற்பை பெற்ற வசனங்களை ஆங்காங்கே அதே பாணியில் பயன்படுத்தியிருப்பது ரசிக்கத்தக்கது.

 

sandakozhi varalakshmi



தொடக்கத்தில் காட்டப்படும் படத்தின் முக்கிய பிரச்சனை, பலவீனமாக இருப்பது மிகப்பெரிய குறையாக இருந்து படம் முழுவதும் நம்மை தொந்தரவு செய்கிறது. லிங்குசாமியும் எஸ்.ராமகிருஷ்ணனும் எழுதியிருக்கும் கதை இன்னும் 'சண்டக்கோழி' என்ற பிம்பத்துக்கு இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்திருக்கலாம். எஸ்.ராமகிருஷ்ணன், பிருந்தா சாரதி வசனங்கள் ஊர்ப்பாசம், மரியாதை, விசுவாசம் என அனைத்தையும் அழகாகப் பேசுகின்றன. ஆனால், முக்கிய உணர்வான ஆவேசம், கோபத்தை மட்டும் சற்றே சுமாராகப் பேசுகின்றன. 'திருவிழாவுல புலி வேஷம் போடலாம், புலிக்கு முன்னாடியே வேஷம் போடக்கூடாது', 'இது ஆடுபுலியாட்டமில்ல, ஆடும் புலியும் சேர்ந்து ஆடுற ஆட்டம்' என்று அழுத்தமாக இருக்க வேண்டிய பன்ச் வசனங்கள் பெரும்பாலும் எதுகை மோனையாக மட்டுமே இருக்கின்றன. வரலக்ஷ்மியின் பாத்திரம் ரசிக்கவைத்தாலும் இன்னும் கொஞ்சம் நுணுக்கங்கள் இருந்திருக்கலாம். வில்லன் பக்கம் கொஞ்சம் வீக்காக இருப்பதும் படத்துக்குப் பின்னடைவு. வட்டார வழக்கு, சொலவடைகள் போன்ற விஷயங்களில் தமிழ் படங்கள் உண்மைக்கு நெருக்கமாக வந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் இப்படம் காட்டும் தேனி வட்டாரவழக்கில் 'நேட்டிவிட்டி' கம்மியாக இருக்கிறது.

விஷால், பக்குவமாக இருக்கிறார், சண்டை வரும்போது பொறிபறக்க வைக்கிறார். முதல் பாகத்தின் குறும்பு இல்லை, அதற்கு காரணமும் இருக்கிறது. கீர்த்தி சுரேஷ், படத்தின் மிகப்பெரிய ஆசுவாசம். தப்புத்தப்பாக தேனி பாஷை பேசினாலும் குறும்பால் கவர்கிறார். ராஜ்கிரண், அதே கம்பீரம், அதே நடிப்பு. அவர் இந்தப் பாகத்திற்கும் பெரும் பலமாக இருக்கிறார். கஞ்சா கருப்பு, முனீஸ்காந்த் ராமதாஸ் காமெடி பெரிதாக வேலை செய்யவில்லை. சண்முகராஜனுக்கும் 'கை' தென்னவனுக்கும் சில காட்சிகள், வசனங்கள் இருக்க ஜோ மல்லூரி, கஜராஜ், பிறைசூடன், உள்ளிட்ட பல நடிக்கக்கூடிய நடிகர்கள் வெறும் 'பேக்டிராப்'பாக நிற்கிறார்கள். யுவன் இசை பலவீனமான பல காட்சிகளில் தனியாகப் போராடுகிறது. பின்னணி இசையில் உற்சாகமூட்டிய யுவன், பாடல்களில் ஏமாற்றிவிட்டார். சக்தியின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாக பிரம்மாண்டமாகக் காட்டியிருக்கிறது.           
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்னம் பட ப்ரமோஷன்; வீதி வீதியாக சென்று ஆதரவு கோரும் இயக்குநர் ஹரி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதயொட்டி அப்படத்தின் இயக்குநர் ஹரி இன்று வேலூர் விருதம்பட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார் அப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் எனக்கு சென்டிமென்ட்டான ஊர் இங்கிருந்து தான் திரைக்கதைகளை எழுதுவேன். எனக்கும் வேலூருக்குமான நெருக்கம் அதிகமாக உள்ளது. ரத்தினம் என்னுடைய 17 வது படம் நடிகர் விஷாலை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும் இப்படம் வெற்றி பெறும். வழக்கமாக எனது படம் பல மாவட்டங்களை சார்ந்திருக்கும். வட மாவட்டங்களை மையகப்படுத்தி படம் ஒன்று இயக்க திட்டமிட்டேன்.

அதன்படி ஆந்திரா - தமிழக மாவட்ட எல்லையான வேலூர் மாவட்டத்தில் இப்படத்தை இயக்கி உள்ளேன். மாநில எல்லைகளின் பிரச்சினை இந்த படத்தில் காட்டி இருப்பேன். இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் குடும்பப் பாங்காகவும் அமைந்துள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய படத்திற்கு ஆதரவு அளிக்கும் போது எங்களை மென்மேலும் ஊக்குவிக்கிறது. மீண்டும் நாங்கள் தரமான படங்கள் இயக்குவதற்காக எங்களை பணி செய்ய வைக்கிறீர்கள்” என்றார்.

Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

ரத்னம் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை இடம் பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, “படத்துக்கு தேவை என்பதால் மட்டுமே சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இது படத்தின் தேவையை கருதியே பயன்படுத்துகிறோம். மேலும் பொது மக்களுக்கு மிக நெருக்கமாக ரியாலிட்டியுடன் எடுக்க வேண்டும் என்பதால் இத்தகைய போக்கை கடைபிடிக்கிறோம். எனது கடந்த படமான யானை படத்துக்கு இங்கு வந்திருந்தேன். படம் வெற்றி பெற்றது இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். ரத்தினம் படம் தமிழகத்தில் 750 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக நடிகர்கள் சினிமாக்கு வருவது சந்தோசம் தான்.

என்னுடைய படங்களில் குடும்ப செண்டிமெண்ட் கட்டாயமாக இருக்கும். இதுவே நமது கலாச்சாரமாக எண்ணி அனைத்து படத்திலும் அதை வலுவாக வைத்துள்ளேன். கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதை பார்க்கும்போது எனக்கும் ஆசையாக உள்ளது எனது படத்தையும் ரீலீஸ் செய்ய வேண்டும் என்று இதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் போலீஸ் கதையாம்சம் கொண்ட படத்தை இயக்க திட்டம் வைத்துள்ளேன்” என்றார்.

லோகேஷ் யுனிவர்ஸ் போன்று ஹரி யுனிவர்ஸ் வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, “அது அவருடைய ஸ்டைல். எனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை” என்று பதிலளித்தார்.

வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து பிரமோஷன் தேடுவது குறித்து கேட்டதற்கு, “தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களை சந்திக்கிறார்களே அதுபோலத்தான் நாங்களும் ஒரு படைப்பை உருவாக்கி அதனை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல இது போன்ற பிரமோஷனை நாடுகிறோம்” என்றார்.

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.