Skip to main content

டி20 யா? டெஸ்ட் மேட்சா? - எல்.ஜி.எம் விமர்சனம்

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

dhoni in lets get married movie review

 

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ். தோனி முதன்முதலாகத் தமிழில் தயாரித்துள்ள திரைப்படம் எல் ஜி எம். இதுவரை விளையாட்டுகளில் நம்பர் ஒன்னாக இருந்து வரும் எம்.எஸ். தோனி தற்பொழுது எல்ஜிஎம் படம் மூலம் சினிமாவிலும் தயாரிப்பாளராகக் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்தப் படம் சினிமாவிலும் அவரை நம்பர் ஒன் அரியணையில் கொண்டு செல்ல, நல்ல ஆரம்பமாக இருந்ததா, இல்லையா? 

 

ad

 

நாயகன் ஹரிஷ் கல்யாண் நாயகி இவானா ஆகியோர் ஒரே ஐடி கம்பெனியில் வேலை பார்க்கின்றனர். இருவருக்கும் இடையே இரண்டு வருட நட்புக்குப் பிறகு காதல் மலர்கிறது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர். ஹரிஷ் கல்யாணின் அம்மா நதியா பெண் பார்க்க இவானா வீட்டிற்கு குடும்பத்துடன் செல்கிறார். போன இடத்தில் மாமியார் நதியாவிடம் நன்றாகப் பேசிப் பழகியபின்தான் திருமணம் செய்து கொள்வேன் என இவானா ஹரிஷிடம் கூறுகிறார். 

 

dhoni in lets get married movie review

 

இதையடுத்து ஹரிஷும், இவானாவும் ஒரு டூர் ஏற்பாடு செய்கின்றனர். அந்த டூருக்கு குடும்பத்துடன் சென்றாலாவது இவானாவிற்கும், நதியாவிற்கும் ஒரு பழக்கம் ஏற்படும் என நினைத்து இரு வீட்டார் குடும்பத்துடனும், நண்பர்களும் மொத்தமாக டூருக்கு செல்கின்றனர். போன இடத்தில் நதியாவுக்கு இந்தப் பிளான் தெரிய வர பிரச்சனை வெடிக்கிறது. இதையடுத்து டூருக்கு வந்த அனைவரையும் கழட்டிவிட்டு நதியாவும், இவானாவும் தனியாக கோவாவிற்கு டூர் செல்கின்றனர். போன இடத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனதா, இல்லையா? இருவருக்குள்ளும் ஒரு ஒற்றுமை ஏற்பட்டு ஹரிஷ், இவானா திருமணம் நடந்ததா, இல்லையா? என்பதே எல் ஜி எம் படத்தின் மீதிக் கதை.

 

dhoni in lets get married movie review

 


ஒரு வித்தியாசமாக கதைக் கருவைத் தேர்வு செய்து அதைப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி. கதைக் கருவை மட்டும் வித்தியாசமாகத் தேர்வு செய்த இயக்குநர் திரைக்கதையில் ஏனோ சற்றுத் தடுமாறி இருக்கிறார். படம் ஆரம்பித்த முதல் பாதி முழுவதும் ஒரு சிறிய கதையை நல்ல காட்சி அமைப்புகளோடு ஸ்லோ அன் ஸ்டெடியாக நகர்த்தி ரசிக்கும்படி கொடுத்த இயக்குநர், இரண்டாம் பாதியில் ஏனோ பாதை மாறி பல திசைகளில் கதையைப் பயணிக்கச் செய்து கடைசியில் சுபம் போட்டு முடித்திருக்கிறார். மகனுக்கும் அம்மாவுக்குமான கெமிஸ்ட்ரியை மிகச் சிறப்பாக ரசிக்கும்படி காட்சிப்படுத்தி இருக்கிறது இப்படம். அதேபோல் நாயகன் ஹரிஷ் கல்யாணுக்கும் நண்பர் மிர்ச்சி விஜய்க்குமான கெமிஸ்ட்ரியும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. அதுவே படத்திற்கு பிளஸ் ஆகவும் மாறி இருக்கிறது. 

 

dhoni in lets get married movie review

 

உறவுகளுக்கு இடையே இருக்கும் புரிதல்களை மிக அழகாக வெளிப்படுத்தும்படியான காட்சி அமைப்புகள் மூலம் நேர்த்தியாகத் திரைக்கதை அமைத்த இயக்குநர், அதைச் சற்று மெதுவாக நகர்த்தி இருக்கிறார். அவை ரசிக்கும்படி இருந்தாலும் காட்சிகள் ஒரே திசையில் பயணிக்காமல் பாதை மாறி திக்கு தெரியாமல் ஆங்காங்கே பயணித்து ஒரு வழியாக கடைசியில் ஆரம்பித்த இடத்திற்கு வந்து சுபமாக முடிகிறது. குறிப்பாக இரண்டாம் பாதி படத்தை இன்னும் கூட சிறப்பாக கையாண்டிருக்கலாம். மற்றபடி, கதைத் தேர்வும் அதில் நடித்த நடிகர்களின் பங்களிப்பும் மிகச் சிறப்பாக அமைந்து இப்படத்தை கரை சேர்க்க முயற்சி செய்திருக்கிறது.

 

இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் கதாபாத்திரத் தேர்வு. கதாபாத்திர தேர்வு அனைத்துமே மிக பிரஷ்ஷாக அமைந்திருக்கிறது. நாயகன் ஹரிஷ் கல்யாண் எப்போதும்போல் தனது சார்மிங்கான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி இவானாவும் தனது பங்குக்கு சின்னச் சின்ன முகபாவனைகளில் கூட சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு முத்தாய்ப்பாக இவரது வசன உச்சரிப்பும் அழகாக அமைந்திருக்கிறது. படத்தின் இன்னொரு நாயகி என்று சொல்லலாம் அந்த அளவுக்கு அழகாக நடித்திருக்கிறார் நடிகை நதியா. வசன உச்சரிப்பு, முக பாவனைகளில் அப்படியே எண்பதுகளின் நதியாவைக் கண்முன் நிறுத்துகிறார். 

 

dhoni in lets get married movie review

 

நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் மிர்ச்சி விஜய் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறார். இவரது டைமிங் வசனங்கள், ரைமிங் பஞ்ச்சுகள் பல இடங்களில் நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறது. படம் முழுவதும் நாயகனுடன் பயணிக்கும்படியான இவரது கதாபாத்திரமும் சிறப்பாக அமைந்திருக்கிறது. வழக்கம்போல் இந்தப் படத்திலும் யோகிபாபு இருக்கிறார். பல இடங்களில் சிரிப்பு மூட்ட முயற்சி செய்து இருக்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரங்களில் வரும் ஸ்ரீநாத், வினோதினி, விக்கல் டீம், வெங்கட் பிரபு, விடிவி கணேஷ், தீபா சங்கர், ஆனந்த் வைத்யா, சாண்டி உள்ளிட்ட பலர் அவரவர் வேலையைச் சிறப்பாகச் செய்து கவனம் பெற்று இருக்கின்றனர்.

 

டைரக்‌ஷன் மட்டுமல்லாது இப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணியே இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை நன்று. விஷ்வஜித் ஒளிப்பதிவில் டூர் சம்பந்தப்பட்ட காட்சிகளும், அலுவலகம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு குடும்பத்துடன் சென்று பார்க்கும் பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கும் இப்படம் இன்னமும் கூட வேகத்துடனும், விவேகத்துடனும் அமைந்திருக்கலாம்.

 

எல் ஜி எம் - மினிமம் கியாரண்டி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!