Skip to main content

முண்டாசுப்பட்டிக்குப் பிறகு இப்படி ஒரு படமா? ராட்சசன் - விமர்சனம்  

Published on 06/10/2018 | Edited on 06/10/2018

தொடர்ந்து சிறுமிகளை கடத்திக் கொலை செய்யும் சைக்கோ. அவனை தேடியலைந்து பிடிக்கும் போலீஸ்கார நாயகன். பல படங்களில் பார்த்திருக்கும் சிறிய லைன்தான். ஆனால் அந்த பல படங்களில் இருந்து வேறுபடுகிறது ராட்சசன். எப்படி?

 

ratchasan vishnu



கதாநாயகனின் பாத்திரப் படைப்பிலிருந்து சுவாரசியம் துவங்குகிறது. இயக்குனராகும் ஆசையில் இருக்கும் ஒரு உதவி இயக்குனர். தன் முதல் படத்திற்காக பல முக்கியமான கொலை வழக்குகளை ஆராய்ந்து குறிப்பெடுத்து அதிலேயே மூழ்கியிருக்கிறான். வழக்கமான பல காரணங்களால் முதல் பட வாய்ப்பு தள்ளிப்போய்க் கொண்டே இருக்க, குடும்ப சூழ்நிலையின் காரணமாக, அப்பாவின் போலீஸ் வேலைக்கு போக சம்மதிக்கிறான். எஸ்.ஐ தேர்வு எழுதி சப் இன்ஸ்பெக்டராகி விடுகிறான். அவன் சந்திக்கும் முதல் வழக்கு அவன் கதைக்காக எடுத்து வைத்திருந்த வழக்கு ஒன்றுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.

அந்த நூலைப் பிடித்து கொலைகாரனை நோக்கிய தேடலை ஆரம்பிக்க, அது எப்படி சுற்றிச் சுழன்று, குழப்பமான முடிச்சாகி பின் மெல்ல அவிழ்கிறது என்பதுதான் ராட்சசன். முண்டாசுப்பட்டி படத்திற்குப் பிறகு முற்றிலும் வேறொரு களத்தை கையெலெடுத்திருக்கிறார் இயக்குனர் ராம்.

தொடர் கொலைகள், ஆங்காங்கே கிடைக்கும் சின்ன சின்ன க்ளூக்கள், அதைப் பிடித்து நடக்கும் தேடல்கள், திருப்பங்கள் என ஒரு பரபர த்ரில்லருக்கான அத்தனை அக்மார்க் அம்சங்களும் தவறாமல் இடம்பிடித்திருக்கிறது. படத்தின் தொழில்நுட்பத் தரமும் முக்கியமாக இசையும் த்ரில்லர் படத்திற்கான தடதடப்பை தக்கவைக்கின்றன. 

 

amala paul



இயக்குனர் கனவில் இருக்கும் சப் இன்ஸ்பெக்டராக விஷ்ணு. முந்திய படங்களைக் காட்டிலும் உடல் மொழியிலும் உணர்வுகளிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இருந்தாலும் இன்னும் ஏதோ ஒரு தடுப்புச் சுவருக்குள்ளேயே உணர்வுகளை அடக்கிக் கொண்டிருப்பது போன்றதொரு தோற்றம். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் இன்னும் கொஞ்சம் உடைபட்டிருக்கலாமே எனத் தோன்றுகிறது.

அமலாபாலுக்கு பெரிய வேலை இல்லை. முண்டாசுப்பட்டி ராமதாஸ்க்கு முக்கியமான கதாப்பாத்திரம். நிறைவாக செய்திருக்கிறார். சப் இன்ஸ்பெக்டருக்கும் இன்ஸ்பெக்டரும் இடையில் எழும் ஈகோ யுத்தம் திரைக்கதைக்கு பல இடங்களில் உதவுகிறது என்றாலும், அதற்கான காரணமும் அதன் ஆழமும் அரைகுறையாய் இருப்பது போன்ற உணர்வு எழுகிறது.

நாயகன் உதவி இயக்குனராய் இருந்து போலீஸாக ஆகிறான் என்பது சுவாரசியமான ஒரு பாத்திரப்படைப்பாக இருந்தாலும், அது திரைக்கதையில் எந்தளவு முக்கியமான பங்காற்றுகிறது, அதனால் கதைக்கு என்ன பலன் என பல கேள்விகள் எழுகிறது. நேரடியான போலீஸாக இருந்திருந்தாலும் இதுவெல்லாம் நடந்திருக்குமே, இயக்குனரின் திறமைகளை போலீஸ்காரனாக பயன்படுத்தி அந்த கேஸை முடித்திருக்கலாமே என பல கேள்விகளை எழுப்புகிறது அந்த பாத்திரப்படைப்பு.

 

ratchasan radharavi



விறுவிறுவென நகரும் திரைக்கதைதான். ஆனால் பெரும்பாலான திருப்பங்கள் எளிதில் யூகித்து விடும்படி இருப்பதும், அவை திரையில் விரிய எடுத்துக்கொள்ளும் நேரமும் படத்தை சற்றே பின்னே இழுக்கின்றன.

ஆனால் தொடர்கொலைகளை செய்யும் அந்த சைக்கோ யார் என்பதும் அந்த பின்கதையும் அதுசார்ந்த திருப்பங்களும் புதுமையாகவும் சுவாரசியமாகவும் கையாளப்பட்டுள்ளன. அதற்கு இத்தனை தூரம் யோசித்தவர்கள், மொபைல் சிக்னலை ட்ராக் செய்தே வில்லனை கண்டுபிடிக்கும் வழமையான முறைகளை தவிர்த்து அதற்கும் கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது யோசித்திருக்கலாம். திரைக்கதையின் மிகமுக்கியமான சம்பவங்கள் அனைத்தும் யதேச்சையாக நிகழ்வது மிகுந்த செயற்கைத்தனத்துடன் இருக்கின்றன. கோ இன்சிடென்ஸ் இருக்கலாம். அதுவே கதையை நகர்த்தலாமா?

ராட்சசத்தனமான த்ரில்லர் இல்லைதான். ஆனால் ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் படம் பார்த்த நிறைவை தர தவறவில்லை ராட்சசன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“நடப்பவை எல்லாம் நன்மைக்கே” - சூரி 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
soori vishnu vishal land issue solved

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரி, விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா, மீது நில மோசடி புகார் கொடுத்திருந்தார். அதாவது சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். 

இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் மாறி மாறி குற்றங்கள் சுமத்தி வந்தனர். 

soori vishnu vishal land issue solved

இந்தச் சூழலில் சூரி, விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில். பாசிட்டிவிட்டியுடன் செல்வோம் சூரி அண்ணா” என குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் புகைப்படத்தைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த சூரி, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என குறிப்பிட்டு விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.