Skip to main content

விக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா? கடாரம் கொண்டான் - விமர்சனம்  

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

ஒரு காலகட்டத்தில் தமிழ் திரைப்பட ரசிகர்களால் சிவாஜி, கமல் என்ற வரிசையில் வைத்துப் பார்த்து ரசிக்கப்பட்டவர் விக்ரம். சேது, காசி, பிதாமகன், அந்நியன், ஐ... என இவரது நடிப்பை, தோற்ற மாற்றங்களை ரசிக்கவைத்த படங்கள் பல. தற்போது இவரது படங்கள் சில, வணிக ரீதியாக பின்னடைவை சந்தித்திருந்தாலும் விக்ரமின் நடிப்பிலோ விக்ரம் மீதான ரசிகர்களின் அபிமானத்திலோ எந்தக் குறையும் ஏற்படவில்லை. மீண்டும் அவரது முழு எழுச்சியுடன் ஒரு படம் வரவேண்டுமென்ற ஆவலில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் வந்திருக்கின்றது கமல்ஹாசன் தயாரித்து இயக்குனர் ராஜேஷ்.எம்.செல்வா இயக்கியுள்ள 'கடாரம் கொண்டான்'. விக்ரமுக்குத் தேவையான அந்த ஹிட் கிடைத்ததா?

 

chiyan vikram



காதல் திருமணம் செய்துகொண்டு பெற்றோரின் துணையில்லாமல் மலேசியாவில் குடியேறும் இளம் தம்பதி வாசு - ஆதிரா. ஆதிரா, அவர்களது குழந்தையை சுமந்துகொண்டிருக்கிறார். அவர் மீது அலாதியான காதல் கொண்டிருக்கும் வாசு ஒரு மருத்துவர். வாசு பணிபுரியும் மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆகிறார் விபத்தில் காயமுற்ற கே.கே. முதலில் அடையாளம் தெரியாதவராக இருக்கும் அவரின் பின்னனி, மருத்துவமனையில் வைத்து அவரை கொலை செய்ய முயற்சி நடக்கும்போது தெரிய வருகிறது. அந்த கொலைமுயற்சியில் அவரை காப்பாற்றும் வாசு, மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார். வாசுவின் காதல் மனைவி ஆதிராவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. கே.கே. யார், அவரை யார், ஏன் கொல்ல முயற்சிக்கிறார்கள், வாசுவுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன, ஆதிராவின் முடிவு என்ன என்பதே 'கடாரம் கொண்டான்'.


படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் என ஒவ்வொரு அப்டேட்டாக வர வர அனைவரையும் கவர்ந்தது விக்ரமின் ஸ்டைலான தோற்றம்தான். சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி, ஸ்டைலான தாடி, செம்ம ஃபிட்டான உடல், உடலெங்கும் டாட்டூ என கே.கேவாக கெத்து காட்டுகிறார் விக்ரம். 'பேஸ்' வாய்ஸில் அவர் பேசும் ஸ்டைலும் ஈர்க்கிறது. ஆனால், அவருக்கு பத்து ட்வீட்ஸ் அளவுதான் வசனங்கள். கதையின் மையமாக, முடிவாக இருக்கும் வாசு - ஆதிரா பாத்திரங்களில் அபி ஹாசன் - அக்ஷரா ஹாசன். அக்ஷரா ஹாசன், மிகக் குறைவான நேரம் தோன்றினாலும் இளம் தாயாக மனதை கவர்கிறார். படத்தில் அதிக நேரம் தோன்றும் முக்கியமான பாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கும் அபி ஹாசன், நடிகர் நாசரின் மகன். நடை, பாவனை, புன்னகை ஆகியவற்றில் விக்ரம் பிரபுவை நினைவுபடுத்துகிறார். பயம், பதைபதைப்பு, தைரியம் மூன்றையும் கலந்து நடிக்கவேண்டிய இடங்கள் நிறைய இருக்க, அனைத்திலும் நன்றாகத் தேறுகிறார். சில இடங்களில் உணர்வு கம்மியாக இருப்பதுபோலத் தோன்றினாலும் ஒரு நல்ல அறிமுகமாகப் பதிகிறார். மலேசிய காவல்துறை அதிகாரிகளாக வரும் நடிகை லேனா, விகாஸ் உள்ளிட்ட அனைவரும் அந்த பாத்திரங்களுக்கு சிறப்பாகப் பொருந்தி நடித்துள்ளனர். ராஜ்கமல் நிறுவனத்தின் படங்களில் நடிகர்களின் தேர்வும் பங்களிப்பும் சிறப்பாகவே இருக்கும். இந்தப் படத்திலும் அது தொடர்கிறது.

 

 

abi haasan akshara haasan



ட்வின் டவர்ஸின் ஒரு மாடியில் இருந்து குதித்துத் தப்பிக்கும் விக்ரம்... விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்... அங்கு அவரை கொலை செய்ய முயற்சி... அவரை காப்பாற்றும் மருத்துவரின் மனைவியை கடத்திவைத்துக்கொண்டு விக்ரமை கேட்கிறார்கள்... ஒரு பக்கம் போலீஸ், மறுபக்கம் வில்லன் கும்பல், நடுவில் விக்ரமும் அபியும்... இப்படி முதல் பாதி முழுவதும் படத்தின் தளத்தை அமைப்பதில் செலவிடப்பட்டுள்ளது. பொறுமையாக சென்றாலும், அந்த பில்ட்-அப் நன்றாகவே அமைகிறது. அபி - அக்ஷரா காதலை பேசும் 'தாரமே தாரமே' பாடல் சித் ஸ்ரீராமின் குரலில் தொடங்கும்போது அரங்கமே குதூகலம் அடைகிறது. நல்ல பாடல், நல்ல இசை, நல்ல குரல். அவர்களின் காதலை அழகாக சொல்லிவிட்டு அவர்களுக்கு ஏற்படும் ஆபத்தையும் கூட நம் மனதில் நன்றாகப் பதியவைக்கிறார்கள். விக்ரம் யார், அவரது பின்னணி என்ன என கேள்விகளும் சரியாகவே உருவாக்கப்படுகின்றன. இவை அத்தனைக்கும் அதிரடியாக, சுவாரசியமாக, விறுவிறுப்பாக பதில் கொடுப்பார் என்று எதிர்பார்க்கும்போதுதான் நமக்கு ஏமாற்றத்தை தருகிறார் ராஜேஷ்.


படம் எந்த இடத்திலும் வேகமெடுக்காமல் பொறுமையாகவே நகர்கிறது. கதாபாத்திரங்களின் மீது திடீர் திடீரென நடக்கும் தாக்குதல்கள் மட்டுமே பெரிய ட்விஸ்டாக இருக்கின்றன. படத்தில் இருக்கும் பிற ட்விஸ்டுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகக் காரணம் எந்த பாத்திரமும் முழுமையாக நமக்கு விளக்கப்படவில்லை என்பதே. நாயகன் விக்ரம், ஒரு பயிற்சி பெற்ற, பலராலும் தேடப்படுகிற, கிரிமினல் உலகில் மதிக்கப்படுகிற நபர் என்பது ஒரே ஒரு வசனத்திலும் சிறிய மாண்டேஜிலும் மட்டுமே காட்டப்படுகிறது. மற்றபடி கேகேவின் குணாதசியங்களோ, கதையோ முழுமையாக நமக்குக் கடத்தப்படவில்லை. போலீஸ் பாத்திரங்களும் அப்படியே. சரி, அனைவரது பின்னணியும் அவசியமில்லை, படம் நடக்கும் காலகட்டம் மட்டுமே முக்கியம் என்ற அணுகுமுறையை கையில் எடுப்பதாக இருந்தால், பாத்திரங்களின் பின்னணியை ரசிகர்கள் எண்ணாத அளவுக்கு விறுவிறுப்பான துரத்தல், சண்டை, திருப்பங்கள் இருந்திருக்க வேண்டும். அவையும் குறைவாக இருப்பது படத்தின் குறை. போலீசால் தேடப்படும் விக்ரம், போலீஸின் முக்கிய அலுவலகத்தில் அவ்வளவு ஃப்ரீயாக உலவ முடியுமா உள்பட ஒரு சில கேள்விகள் மனதில் எழுவதையும் தவிர்க்கமுடியவில்லை.

 

 

vikram



படத்தின் உருவாக்கம் மிகத் தரமாக, சிறப்பாக இருக்கிறது. சேசிங் காட்சிகளும் ஆக்‌ஷன் காட்சிகளும் தரமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஸ்ரீனிவாஸ் ஆர் குத்தாவின் ஒளிப்பதிவில் பல படங்களில் பார்த்த மலேசியா, இன்னும் பிரம்மாண்டமாக, அழகாகவே தெரிகிறது. இருட்டு, நீல வெளிச்சம் என ஒரு ஆக்ஷன் த்ரில்லருக்கான அமைப்பை சிறப்பாக செட் செய்திருக்கிறார் ஸ்ரீனிவாஸ். ஜிப்ரானின் இசையில் தாரமே பாடல் மனதில் தொடர்ந்து ஒலிக்கிறது. படத்திலும் அது பெரும் பலமாக அமைந்துள்ளது. தீம் ம்யூசிக், பின்னணி இசை என ஒரு ஸ்டைலிஷ் படத்துக்கு சூப்பர் ஸ்டைலிஷ் இசையை கொடுத்துள்ளார் ஜிப்ரான். பிரவீன்.கே.எல். தனது படத்தொகுப்பில் படத்தை க்ரிஸ்ப்பாக்கியுள்ளார்.

பெரும் பரபரப்பு, விறுவிறுப்பு இல்லை, ஆனால் ஸ்டைலான, டீசண்டான ஆக்ஷன் படம் இந்த கடாரம் கொண்டான்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!

Next Story

விக்ரம் படத்தில் எஸ்.ஜே சூர்யா

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
sj suryah in in vikram chiyaan 62

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் அதுவும் தற்போது தள்ளி போகவுள்ளதாக கூறப்படுகிறது.  இதனிடையே விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் நீண்ட இழுபறிக்கு பின் இம்மாதம் வெளியாகும் என கெளதம் மேனன் தெரிவித்திருந்தார். அதன் பிறகு எந்த அப்டேட்டும் படக்குழு வெளியிடவில்லை. 

இதனை தொடர்ந்து தனது 62வது படத்திற்காக சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் தற்போது புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. எஸ்.ஜே சூர்யா தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர், ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.