Skip to main content

தமிழக அரசியலுக்கும் இந்தப் படத்துக்கும் சம்மந்தம் இருக்கு...? செக்கச் சிவந்த வானம் - விமர்சனம்  

Published on 27/09/2018 | Edited on 28/09/2018

'புத்திய மாத்தி பொழைக்கச் சொன்னா கத்திய மாத்தி காவு வாங்கியே செவந்து போச்சு நெஞ்சு'... படத்தில் ஆங்காங்கே வரும் இந்த பாடல் வரிகளைப் போல அதிகாரமென்று வரும்போது உறவு, அன்பு என்பதையெல்லாம் மறந்துவிட்டு நடத்தும் சகோதர யுத்த ரத்தத்தால் செக்கச் சிவந்த வானம் இது. தமிழ் சினிமாவின் காட்சி மொழியிலும் ஒளிப்பதிவு, ஒலி, இசை, குறியீடுகள் என பல விஷயங்களில் அடுத்த கட்டத்தைக் காட்டிய முன்னோடியான இயக்குனர் மணிரத்னத்தின் மல்டி ஸ்டாரர் படம் இந்த செக்கச் சிவந்த வானம்.

 

aravind samy



சேனாபதி, (பிரகாஷ்ராஜ்) சென்னையின் மிக பலம் பொருந்திய பெரும்புள்ளி. ரியல் எஸ்டேட், மாஃபியா என குற்ற நடவடிக்கைகள் இவரது கட்டுப்பாட்டில் இருக்கும். அவருக்கு மூன்று மகன்கள்... வரதராஜன் (அரவிந்த்சாமி), தியாகராஜன் (அருண்விஜய்), எத்திராஜ் (சிம்பு). திடீரென்று ஒரு நாள் சேனாபதி மீது நடக்கும் கொலை முயற்சியில் படுகாயமடைகிறார்.  இந்தத் துப்பாக்கிச் சூட்டை ஏற்பாடு செய்தது யார், பெரியவர் செத்தா யாருக்கு பெரிய லாபம் என்ற கேள்விக்கான விடையும் அதன் விளைவுகளுமே செக்கச் சிவந்த வானம். ட்ரைலரைப் பார்த்து  'காட்ஃபாதரா பொன்னியின் செல்வனா' என்றெல்லாம் பேச்சுக்கள் ஓட 'அவ்வளவெல்லாம் யோசிக்காதீங்க, இது ரொம்ப சிம்பிள்' என சிம்பிளான, வழக்கமான ஒரு கதையை, சரியான ட்விஸ்ட்டுடன் முடித்திருக்கிறார் மணிரத்னம். 'முதலில் பிரிக்கணும், அப்புறம் அழிக்கணும்' என்னும் அடிநாதம் தமிழக அரசியலில் நாம் காணும் காட்சிகளை நினைவு படுத்தலாம்.

 

str



படத்தின் உருவாக்கம், ஒளிப்பதிவு தரம், இசையைப் பயன்படுத்திக்கொண்ட விதம் என அனைத்திலும் மணியின் தரம் எப்பொழுதும் போல உச்சம். முதல் நொடியிலிருந்தே தொடங்கிவிடும் கதையில் காட்சிகள் சரசரவென தொகுக்கப்பட்டதில் ' போர் அடிக்கிறது' என்ற உணர்வு ஏற்பட எங்கும் இடைவெளி இல்லை. நான்கு நாயகர்களுக்கும் நல்ல பங்களிப்பு, நடிப்பைக் காட்ட ஆளுக்கு ஒரு ஸீன், ஆக்ஷனுக்கு ஒரு ஸீன் என அழகாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறது படம். முரட்டு அரவிந்த்சாமி, க்ளாஸ் அருண் விஜய், கேஷுவல் எஸ்.டி.ஆர்... இவர்களது பாத்திரங்கள் அவ்வாறே...

படத்தில் மூவர் போட்டியில், சின்ன வித்தியாசத்தில் முதலிடம் சிம்புவுக்குக் கிடைக்கிறது. ஸ்டைலான தோற்றம், அசால்ட்டான பேச்சு என ஈர்க்கிறார். ஆனால், ஆக்ஷன் காட்சிகளில் அவர் ஓட சிரமப்படுவது போல நமக்கு ஒரு உணர்வு. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளாமல் தனி ரூட்டில் மிக எளிதாக அசத்துகிறார் விஜய் சேதுபதி. அவரது வழக்கமான, இயல்பான பேச்சையும் செயல்பாடுகளையும் அழகாகப் பயன்படுத்தியுள்ளார் மணிரத்னம். "புதுசா நல்ல சட்டை போட்டிருந்தேன் மேடம், அதுல கை வச்சுட்டான், சட்டை அழுக்காயிருச்சு, அதான் டென்சன் ஆயிட்டேன்" என்று ஒருவனைத் தாக்கியதற்கு உயரதிகாரிகளிடம் விளக்கம் சொல்லும் சஸ்பெண்டான போலீசாக படத்தின் சிரிப்புப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

 

arun vijay



ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா... மூன்று நாயகிகளும் சிறப்பான தோற்றம், நடிப்பு என்றாலும் மனதில் நிற்பது ஜோதிகாவும், சேனாபதியின் மனைவியாக நடித்துள்ள ஜெயசுதாவும்தான். தன் தந்தையை கொன்று விட்ட மைத்துனனிடம் "நீங்க நல்லா இருப்பீங்களா தம்பி" என கேட்கும் இடத்தில் 'ஜோ' நிற்கிறார். "என்னடா உன்னை வீட்ல காணாம்னு தேடுறாங்க, நீ இங்க இருக்க" என அணி மாறிய அடியாளிடம் எதார்த்தமாக ஜெயசுதா கேட்பது ஆண்களின் அதிகார யுத்தத்தில் பெண்களின் நிலை குறித்து சொல்லும் ஒரு சின்ன சாம்பிள்.  பிரகாஷ் ராஜுக்கு இது பெரிய விஷயமே இல்லை. படம் விளக்கத் தவறிய 'சேனாபதி'யின் கெத்தை தன் நடிப்பால் விளக்கியிருக்கிறார். தியாகராஜன், சிவா அனந்த் நடிப்பும் சிறப்பு.

வன்மம், வன்முறை, மாற்றி மாற்றி தாக்குவது, வியூகம் என பரபரப்பாகச் சென்றாலும் சகோதரர்களுக்குள் இத்தனை வன்மத்துக்கான அடிப்படை காரணமோ தர்க்கமோ பலமாக இல்லாதது பெரிய குறை. (நிஜத்திலும் சகோதர யுத்தங்களை பார்க்கிறோம் என்றாலும்) 'பாத்திரங்களின் பின்புலம் ஆழமாக இல்லை' என்பது பொதுவாக மணிரத்னம் படங்களின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு... அது உண்மையும் கூட. ஆனால் அவரோ நடக்கும் சம்பவங்களின் முன்-பின் பகுதிகளை ரசிகர்களின் கற்பனைக்கே பெரும்பாலும் விட்டுவிடுகிறார். 'இது இயக்குனர் கோடார்ட் பாணி' என அவரே முன்பு கூறியிருக்கிறார். ஆனாலும்...? "நம்ம வீட்ல எல்லோரும் சுயநலவாதிகள். பெரியவர் அப்படி வளர்த்துட்டார்", "அங்க நான் முப்பது பேத்துல ஒருத்தன், இங்க நான்தான் ராஜா" என மணிரத்னம் - சிவா அனந்தின் சின்னச் சின்ன வசனங்கள் மட்டுமே பாத்திரங்களின் தன்மையை விளக்குகின்றன. வசனங்கள்தான் படத்தை நகர்த்தி ரசிக்க வைத்து பலமாகவும் இருக்கின்றன.  இதையெல்லாம் தாண்டி நான்கு வலிமையான ஈர்ப்புள்ள நாயகர்களின்  'ப்ரெசன்ஸு'ம், இறுதியில் வரும் அந்த ட்விஸ்ட்டும் குறைகளை மறக்கச் செய்வதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றன. இப்படி ஒரு கூட்டணியை சாத்தியப்படுத்தியது மணிரத்னம் ஃபேக்டர்.

 

jothika



ஏ.ஆர்.ரஹ்மான் இசை மணிரத்னம் படத்தில் எப்படி வேலை செய்யும் என்பது நாம் அறிந்ததே. செக்கச் சிவந்த வானத்தில் இன்னும் அதிகமாக வேலை செய்திருக்கிறது. எவ்வளவு நவீன இசை வந்தாலும், 'இது அதுக்கும் மேல' என்பது போல் தன் படங்களில் உணர வைக்கிறார் ரஹ்மான். முழு பாடல்களையெல்லாம் போய் யூ-ட்யூபில் கேளுங்க, இங்க அதுக்கெல்லாம் நேரமில்லை என்பது போல பாடல்கள் வெட்டப்பட்டு படத்திற்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அது பெரும் பலமாக இருக்கிறது. எத்தனையோ ட்ரோன் கேமரா ஷாட்டுகளைப் பார்த்துவிட்டாலும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் அவை புதிதாக இருக்கின்றன. மணிரத்னத்தின் ஸ்பெஷலான நுண் அர்த்தம் கொண்ட கோணங்கள், ஃப்ரேம்கள் இதில் அதிகமில்லை என்றாலும் படம் கேட்ட பரபரப்பை ஒளிப்பதிவு தந்திருக்கிறது. இதற்கு கிளைமாக்ஸ் காட்சி ஒரு சாம்பிள். ஸ்ரீகர் பிரசாத் கூர்மையாகவும் வேகமாகவும் காட்சிகளை தொகுத்துள்ளார்.

'கடல்', 'காற்று வெளியிடை' மணிரத்னத்தை மட்டும் பார்த்த 2000 கிட்ஸ்சுக்கு இது 'அக்னிநட்சத்திரம்' ஸ்டைல் மணிரத்னம்... நாயகன், தளபதி பார்த்தவர்கள் எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். மொத்தத்தில் இது மணிரத்னம் மசாலா...  

 

                

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!