Skip to main content

எப்படி இருக்கிறது அமலா பாலின் கடாவர்..? - விமர்சனம்

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

cadaver movie review

 

அமலா பால் முதன்முதலில் தயாரித்து நடித்துள்ள படம். பொதுவாக போலீஸ் படங்கள் என்றாலே அடிதடி, துப்பாக்கி, வன்முறை நிறைந்த மசாலா கமர்சியல் படங்கள் ஆகவே பெரும்பாலும் வரும். ஆனால் இந்தப் படத்திலோ தடாலடி வன்முறைகள் எல்லாம் விட்டுவிட்டு பிணவறையில் போஸ்ட்மார்ட்டம் செய்யும் போலீஸ் சர்ஜன் ஆக அமலா பால் நடித்திருக்கிறார். புதுமையாக ஏதோ ஒன்று செய்யவேண்டும் என்று முயற்சித்துள்ள அமலா பாலின் கடாவர் படம் வரவேற்பைப் பெற்றதா?

 

நகரத்தில் அடுத்தடுத்துக் கொடூரமான முறையில் கொலைகள் அரங்கேறி வருகின்றன. அந்தப் பிணங்களை இன்வெஸ்டிகேட் செய்து போஸ்ட்மார்ட்டம் செய்யும் போலீஸ் சர்ஜனாக வருகிறார் அமலா பால். இதற்கிடையே ஜெயிலில் இருக்கும் அருண் ஆதி அடுத்தடுத்து தான் யாரை கொலை செய்யப்போவதாக முன் கூட்டியே சுவற்றில் வரைந்து காட்டுகிறார். இவர் உள்ளே இருக்கும் பொழுது எப்படி வெளியே  இருக்கும் ஆட்கள் கொலை செய்யப்படுகிறார்கள்? இந்த கொலைகளுக்கு பின்னணியில் இருக்கும் நபர் யார்? அவருக்கும் இந்த கொலைகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதே கடாவர் படத்தின் மீதி கதை.

 

மருத்துவ மாணவர்கள் போஸ்ட்மார்ட்டம் செய்து ஆராய்ந்து தெரிந்து கொள்ள பயன்படுத்தப்படும் உடலுக்கு பெயர்தான் கடாவர். அப்படி இறந்து போன ஒருவரின் உடலில் இருந்து கிடைக்கும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் இறந்ததற்கான காரணத்தை கண்டுபிடித்து அதன் மூலம் குற்றவாளிகளை எப்படி ஒரு போலீஸ் சர்ஜன் கண்டுபிடிக்கிறார் என்பதை ஒரு த்ரில்லர் படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் அனூப் எஸ் பணிக்கர். படத்தின் கதையும், காட்சிகளும் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய டெம்ப்ளேட்டில் இருந்தாலும் திரைக்கதையும், காட்சியமைப்புகளும் கிரிப்பிங்க் ஆக அமைந்து கடைசிவரை நம்மை பார்க்க வைக்கிறது.

 

நாயகி அமலா பால், தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை மீண்டும் ஒருமுறை இப்படம் மூலம் நிரூபித்துள்ளார். கதை தேர்ந்தெடுப்பதிலும் சரி, அதில் பர்பாமன்ஸ் செய்வதிலும் சரி மிக புத்திசாலித்தனமான, ஆர்ப்பாட்டமில்லாத நேர்த்தியான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளார். அவர் சொந்த குரலில் டப்பிங் செய்து இருப்பது கூடுதல் பிளஸ் ஆக அமைந்து உள்ளது. நாயகனாக நடித்திருக்கும் இனிது இனிது புகழ் அருண் ஆதி தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்திற்கு நன்றாக நியாயம் செய்துள்ளார். காதல் காட்சிகளில் இன்னும் கூட சிறப்பாக செய்திருக்கலாம்.

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதுல்யா ரவி தனக்கு என்ன வருமோ அதை சிறப்பாக செய்து கவனம் பெற்றுள்ளார். எப்போதும் நெகட்டிவ் கேரக்டரில் வரும் ஹரிஷ் உத்தமன் இப்படத்தில் நல்ல போலீஸாக நடித்திருக்கிறார். அவரே பல காட்சிகளிலும் நாயகனாகவும் தெரிகிறார்.  இன்வெஸ்ட்டிகேட் செய்யும் காட்சிகளில் நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ரித்விகா, முனிஸ்காந்த், ராட்சசன் வினோத் ஆகியோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளனர். 

 

அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் பிணவறை சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் அருண் ஆதி சம்பந்தப்பட்ட ஆக்ஸிடென்ட் காட்சியும் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ரஞ்சன் ராஜ் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை பெட்டர். குறிப்பாக அமலாபால் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சிறப்பான பின்னணி இசை மூலம் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளார்.

 

சில பல லாஜிக் ஓட்டைகள், நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய அரதப்பழசான கதை களம் என அயர்ச்சி ஏற்படக்கூடிய வகையில் பல விஷயங்கள் படத்தில் இருந்தாலும் நேர்த்தியான திரைக்கதைக்காகவும் ட்விஸ்ட்டுகளுக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.


கடாவர் - டீசண்ட்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

பிரம்மண்டமாக நடந்த அமலா பால் வீட்டு நிகழ்வு

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
amala paul baby showering photos

அமலா பால் தற்போது மலையாளத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பிரித்திவிராஜ் நடிப்பில் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை படம் பெற்று வருகிறது. இப்படத்தை தவிர்த்து தற்போது இரண்டு மலையாள படங்கள் கைவசம் வைத்துள்ளார். 

இதனிடையே கடந்த 2014ஆம்  ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். பின்பு 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த பாடகர் பவ்நிந்தர் சிங்குடன், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தகவல் வெளியானது. மேலும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையதளத்தில் வைரலானது. ஆனால் இதை அமலா பால் அந்த புகைப்படங்கள் வெறும் ஃபோட்டோஷூட் தான் என மறுத்துவிட்டார். 

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி அவரது பிறந்தநாளன்று அவரின் நண்பர் ஜகத் தேசாய் ப்ரபோசலுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்துகொண்டார். 

திருமணமான நான்கே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால். அப்படி இருக்கும் நிலையில் கூட ஆடுஜீவிதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து கர்ப்பமானதை கணவருடன் பார்டி வைத்து கொண்டாடினார். அப்போது கணவருடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் அமலா பாலுக்கு வளைகாப்பு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் நடந்த இந்த விழாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)