Skip to main content

பாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? கென்னடி கிளப் - விமர்சனம் 

Published on 25/08/2019 | Edited on 25/08/2019

தமிழ் சினிமாவில் இது பெண்கள் காலம். ஒரு பக்கம் நயன்தாரா, ஜோதிகா, திரிஷா, அமலாபால் என நாயகிகள் தொடர்ந்து தங்களுக்கு முக்கியத்துவமுள்ள பாத்திரங்களில் நடித்து படங்களும் வெற்றி பெற்று வர, இன்னொரு பக்கம் திரைக்குள்ளும் 'கனா', 'நேர்கொண்ட பார்வை' என பெண்களை மையப்படுத்திய கதைகள் அதிகம் வரத்தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இணையும் 'கென்னடி கிளப்' அந்தப் படங்கள் பெற்ற வெற்றியை பெறுமா?

 

sasikumar and kabadi team



'கில்லி'யில் அதிரடி கபடியைப் பார்த்துப் பழகியிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 'வெண்ணிலா கபடிக் குழு'வில் இயல்பான உண்மையான கபடியையும் கிராமத்துக் கபடி வீரர்களின் பின்னணி, காதல் உள்ளிட்ட வாழ்வியல் விசயங்களையும் மிக நேர்த்தியாகவும் இயல்பாகவும் கூறி முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார் சுசீந்திரன். தொடர்ந்து பல வெற்றிகளையும் சில தோல்விகளையும் தந்த அவர் மீண்டும் தனது மண்ணுக்குத் திரும்பிச் சென்று கபடி விளையாடியுள்ளார், இந்த முறை பெண்கள் டீமை வைத்து.

ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சவரிமுத்து (பாரதிராஜா), அந்தப் பகுதியின் எளிய மாணவிகளுக்காக நடத்தும் கபடி பயிற்சி நிலையம் மற்றும் குழுதான் 'கென்னடி கிளப்'. அவர்களது வறுமையை விளையாட்டில் பெறும் வெற்றி, அதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மூலம் துடைக்கலாம் என்னும் லட்சியத்தோடு செயல்படுகிறார். அந்தப் பயணத்தில் எதிர்கொள்ளும் இடர்கள், அரசியல், அதை எப்படி கடக்கிறார்கள், அதற்கு முருகானந்தம் (சசிக்குமார்) எப்படி உதவுகிறார் என்பதே 'கென்னடி கிளப்'.

 

 

kennedy club



வறுமையைத் தாண்டி முன்னேற விளையாட்டு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நடத்தும் கிளப், கிண்டலடிக்கும் ஆண்களை கபடியில் மிரட்டும் பெண்கள் என நேர்மறையான பல விஷயங்களைக் கொண்டு தொடங்கும் படம், பின்னர் அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள், அரசியல் என மிக வழக்கமான பாதையில் பயணிக்கிறது. கபடி டீமில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் உண்மையான கபடி வீராங்கனைகள் போல... நிஜமான கபடி போல மிரட்டுகிறார்கள். க்ரூப்புல டூப்பு போல ஓரிருவரும் இருக்கிறார்கள். டீமில் 'முருகா' என சசிகுமாரை அழைக்கும் அந்த 'துரு துரு' பெண்ணும், காதலனை மிரட்டும் அந்தப் பெண்ணும், இரட்டையர்களாக வரும் வீராங்கனைகளும் கவனம் ஈர்க்கிறார்கள். மற்ற யாருக்கும் அழுத்தமான பின்னணியோ, தனிப்பட்ட பாத்திரப்படைப்போ இல்லாதது குறை. வெளியிலும் சரி, களத்திலும் சரி கென்னடி கிளப் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பெரும்பாலும் நாம் ஏற்கனவே பார்த்துப் பழக்கப்பட்ட பிரச்சனைகளாக இருக்கின்றன.

கபடி ஆட்டங்கள், ஆண்டனியின் படத்தொகுப்பால் சுவாரசியமாக உருவாக்கப்பட முயற்சி செய்யப்பட்டிருக்கின்றன. இமானின் இசையில் 'கபடி கபடி' பாடல் அதிரடிக்கிறது. பின்னணி இசை கொஞ்சம் ஓவர்டோஸாகப் போகிறது. இமான் கொஞ்சம் கவனிக்கவேண்டும்.

 

 

kennedy club girl



சசிக்குமார், அமைதியாக, பக்குவமாக நடித்துள்ளார். பாரதிராஜா, உணர்ச்சிப் பிழம்பாகப் பொங்கியுள்ளார், ஆங்காங்கே தேவைக்கு அதிகமாகவும். கபடி வீராங்கனைகள் சிலர் மட்டும் கபடி தவிர்த்த பிற காட்சிகளில் சற்று செயற்கையாகத் தெரிகிறார்கள். படத்தில் நகைச்சுவைக்கான முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்திருக்கின்றன. கபடி வீராங்கனையை திருமணம் செய்யும் அந்த கிராமத்து இளைஞன் சொல்லும் காதல் கவிதைகள் மட்டும் சிரிக்கவைக்கின்றன. சூரியின் 'பரோடா', 'புரோட்டா' காமெடி சற்றும் சிரிக்கவைக்கவில்லை.

இயக்குனர் சுசீந்திரன் உருவாக்கும் படங்களில் நேர்மறையான நல்ல செய்திகள் இருக்கின்றன. ஆனால், முழுமையான சுவாரசியமான திரைப்படங்களாக இருக்கின்றனவா? புதிய விஷயங்களை பேசுகின்றனவா என்றால் அது கேள்விக்குறியாக இருக்கின்றன. மீண்டும் புத்துணர்ச்சியுடன் அவர் வர வேண்டும்.

கென்னடி கிளப் - பழகிய களம், சுமாரான ஆட்டம், ஆனாலும் பார்க்கலாம்.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
cancer children fly in airplane with help of mime gopi

மெட்ராஸ், கபாலி, பைரவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் மைம் கோபி. இவர் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அதன் மூலம் பெற்ற பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடுவதாகச் சொல்லியிருந்தார். அதனடிப்படையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சென்னை அண்ணா நகரில் உள்ள தேன் மொழி நினைவு அறக்கட்டளை உதவியுடன் ‘வான் உலா’ எனப் பெயரிட்டு சென்னையில் இருந்து பெங்களூர் வரை அழைத்துச் சென்றுள்ளார். இதற்காக அக்குழந்தைகளுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர்களை நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் வழியனுப்பி வைத்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மைம் கோபி, “இங்க இருக்கிற எல்லா மக்களும் என்னுடைய மக்கள். அதனால் இது உதவி கிடையாது. கடமை. எனக்கு விமானத்தில் போக 30 வருஷம் மேல் ஆனது. இந்த வாய்ப்பு இந்த குழந்தைகளுக்கு எப்போது கிடைக்கும். அதை ஏன் கொடுக்கக்கூடாது. இன்னொருத்தரை சந்தோசப்படுத்தி பார்ப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. சந்தோஷம் எந்தளவிற்கு கூடுதோ ஆயுள் கூடும் என்பார்கள். ஆயுள் கூடுவதற்கு நன்றாக சிரிக்கணும். இந்த குழந்தைகள் நன்றாக சிரித்தாலே நோய் விட்டுப் போய்விடும்.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டு தான் இந்த உலா. விமானத்தில் முதல் தடவை பறக்கும் போது, நம்மை அறியாமல் பட்டாம்பூச்சி பறக்கும். இது வெறும் துவக்கம் தான். இன்னும் 3 மாதம் கழித்து இன்னொரு சூப்பரான விஷயத்தை பண்ணப் போகிறோம். பிறவியிலே பார்வையில்லாத, வாய் பேசாத, காது கேட்க முடியாத பிள்ளைகளை கூட்டிப் போக திட்டமிட்டிருக்கிறோம். அதையும் தாண்டி குழந்தைகளுக்கான நூலகம் ஆரம்பிக்கிறோம்” என்றோம்.

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!