Skip to main content

இந்த ஹாரர் காமெடி ஆடியன்ஸுக்கு ஹாரரா? காமெடியா? - 'அனபெல் சேதுபதி' விமர்சனம் 

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

trjuru

 

இந்த மாதத்திலேயே விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மூன்றாவது திரைப்படம். விஜய்சேதுபதி நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் பேய் படம் என்ற எதிர்பார்ப்புடன் ஓடிடியில் வெளியாகியுள்ள 'அனபெல் சேதுபதி' திரைப்படம், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா..?

 

அந்தக் காலத்து ராஜாவான விஜய்சேதுபதிக்கு வெள்ளைக்கார பெண்ணான டாப்ஸி மீது காதல் மலர்கிறது. விஜய்சேதுபதி, டாப்ஸிக்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் நிறைந்த ஒரு பிரம்மாண்ட அரண்மனையைக் காதல் பரிசாக கட்டித் தருகிறார். இருவருக்கும் திருமணம் நடந்து அதில் குடியேறுகிறார்கள். இந்த அரண்மனை மேல் அந்த ஊர் சிற்றரசு ஜெகபதிபாபு ஆசைப்படுகிறார். அரண்மனையை எப்படியாவது அடைய வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் ஜெகபதிபாபு, விஜய்சேதுபதியையும், டாப்ஸியையும் விஷம் வைத்துக் கொன்றுவிட்டு அரண்மனையை எடுத்துக்கொள்கிறார். விஜய்சேதுபதியை ஏமாற்றிய ஜெகபதிபாபுவை பழிவாங்க ஜெகபதிபாபுவையும் சேர்த்து அவரது மொத்த குடும்பத்துக்கே விஷம் வைத்துக் கொன்றுவிடுகிறார் விஜய்சேதுபதியின் விசுவாச சமையல்காரரான யோகிபாபு. இவர்கள் அனைவரின் ஆவியும் அந்த அரண்மனைக்குள்ளேயே பல ஆண்டுகாலமாக சுற்றிச் சுற்றி வருகிறது. நிகழ்காலத்தில் மீண்டும் பிறந்த டாப்ஸி அந்த அரண்மனைக்குள் தன் குடும்பத்தாருடன் செல்கிறார். அங்கே இருக்கும் பேய்களிடமிருந்து டாப்ஸி குடும்பம் தப்பித்ததா, பேய்களுக்கு மோட்சம் கிடைத்ததா? என்பதே 'அனபெல் சேதுபதி' படத்தின் மீதி கதை.

 

ffbfdndfndf

 

‘அனபெல் சேதுபதி’ படத்தை ஒரு கோட்டைக்குள் நடக்கும் ஹாரர் காமெடி படமாக எடுக்க முயற்சித்த இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன், அந்த முயற்சியில் வெற்றியைக் கோட்டைவிட்டுள்ளார். பேய் படம் என்றால் அதில் திகில் நிறைந்த காட்சிகள் அமைந்து பயமுறுத்த வேண்டும். அதுவே காமெடி படம் என்றால், நமக்கு சிரிப்புமூட்ட வேண்டும். ஆனால் இந்தப் படத்திலோ பயமும் இல்லை, காமெடியும் இல்லை! படத்தில் மிகப்பெரும் காமெடி நட்சத்திர பட்டாளங்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்த தவறியுள்ளார் இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன். அதேபோல் இதை ஒரு பேன் இந்தியப் படமாக எடுக்க நினைத்த இயக்குநர், வெளிமாநில நடிகர்களான ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர், சுரேகா வாணி ஆகியோரை இதில் நடிக்கவைத்துள்ளார். ஆனாலும், அவர்களின் லிப் சிங்க் முதல் முகபாவம் வரை பலவும் பல இடங்களில் அந்நியப்பட்டே நிற்கின்றன.  அதனாலேயே அவர்கள் செய்யும் காமெடிகள் சிரிக்கவைக்க மறுக்கின்றன.

 

fdgswgs

 

அதேபோல் தமிழ் நடிகர்களான ராதிகா, யோகிபாபு, சேத்தன், தேவதர்ஷினி, ஜார்ஜ், மதுமிதா, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு ஆகியோர் இருந்தும், அவர்களின் காமெடி கட்சிகளில் கிச்சுகிச்சு உணர்வுகள் மிஸ் ஆகின்றன. காமெடி என்ற பெயரில் இவர்கள் அனைவரும் அரண்மனைக்குள்ளேயே சண்டையிடுவதும், ஓடி பிடித்துக்கொள்வதும், அங்கு இருக்கும் பொருட்களைத் தூக்கி எரிந்துகொண்டு விளையாடுவது என பொறுமையை சோதிக்கும் காட்சிகள் ஏராளம். பேய் பயத்தைக் காட்டிலும் நகைச்சுவை காட்சிகளுக்கே அதிகம் முக்கியத்துவம் அளித்துள்ள இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன், இவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார். இருப்பினும், பிளாஷ்பேக்கில் வரும் விஜய்சேதுபதி, டாப்ஸி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குநர். விஜய்சேதுபதிக்கும் டாப்ஸிக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்து காட்சிகளை அழுத்தமாகவும், நெகிழ்ச்சியாகவும் மாற்றியுள்ளது. 

 

விஜய்சேதுபதி சமீபகாலமாக தான் தேர்ந்தெடுக்கும் படங்களின் ஸ்க்ரிப்டுகளை முழுவதுமாக கேட்கிறாரா, இல்லையா? என்ற எண்ணம் ஒருபக்கம் எழுந்தாலும், இப்படத்தில் அவர் எப்போதும்போல் தனது இயல்பான நடிப்பையே வெளிப்படுத்தியுள்ளார். இவரது மிடுக்கான தோற்றமும், அலட்டலில்லாத வசன உச்சரிப்பும் பிளாஷ்பேக் காட்சிக்கு உயிர் கொடுத்துள்ளது. இருந்தும் இவர் இப்படி ஒரே நேரத்தில் பல படங்களில் தொடர்ந்து ஒரே மாதிரியாக நடிப்பது சற்று சலிப்பை ஏற்படுத்துவதுபோல் தோன்றுகிறது. 

 

bfbfdsb

 

ஃபாரின் பெண்ணாக வரும் டாப்ஸியின் தங்க நிறமும், அவரது வசன உச்சரிப்பும் அப்படியே வெள்ளைக்கார பெண்மணியை கண்முன் நிறுத்தியுள்ளது. இவருக்கும் விஜய்சேதுபதிக்குமான காதல் காட்சியில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல், நிகழ்கால டாப்ஸி கதாபாத்திரத்தில் துடுக்கான பெண்ணாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார். அவரது இரண்டு கதாபாத்திரங்களிலும் அவரது லுக் சிறப்பாகவும், அழகாகவும் அமைந்துள்ளது.

 

கெளதம் ஜார்ஜ் ஒளிப்பதிவில் அரண்மனை மிகவும் ரிச்சாக தெரிகிறது. அரண்மனையின் இன்டிரியர் காட்சிகளைப் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளார். கிருஷ்ணா கிஷோர் இசையில் பிளாஷ்பேக் பகுதியில் ஒலிக்கும் பாடல் கேட்கும் ரகம். அவரது பின்னணி இசை படத்துக்கு வேகம் கூட்ட முயற்சி செய்துள்ளது.

 

hfhfdhd

 

பிளாஷ்பேக் காட்சிக்கு அளித்திருந்த முக்கியத்துவத்தை நிகழ்கால காட்சிக்கும் கொடுத்திருந்தால் நிச்சயமாக இது ஒரு ரசிக்கும்படியான படமாக அமைந்திருக்க நிறைய வாய்ப்புள்ளது.

 

‘அனபெல் சேதுபதி’ - சூடு ஓகே! சுகர் கம்மி!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!