Skip to main content

மதத்தைச் சுற்றி நடக்கும் குற்றங்கள்... என்ன செய்கிறார் ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ் ஆத்ரேயா?! 

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

ஊரே சிரிக்கும் அளவுக்கு ‘நானும் டிடெக்டிவ்தான்’ ‘நானும் டிடெக்டிவ்தான்’ என்று சுற்றி வரும் ஒருவன் ஊரே வியக்கும்படி ஒரு மிகப்பெரிய வழக்கை துப்பறிந்து கண்டுபிடிப்பதுதான் ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ் ஆத்ரேயா. மிகச்சிறிய பட்ஜெட்டில் சிறிய நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டு, படத்தை பார்த்தவர்கள் கொண்டாடி ‘வேர்ட் ஆஃப் மவுத்’ மூலமாக ப்ரொமோஷன் செய்ய, ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ் ஆத்ரேயா.

 

agent sai



டிடெக்டிவ் சினிமாக்களை பார்த்து கரைத்துக் குடித்து, தன் ஆஸ்தான குரு ஷெர்லாக் ஹோம்ஸ் போல ஒரு பெரிய டிடெக்டிவ் ஆகவேண்டும் என்கிற கனவுடன் எஃப்.பி.ஐ எனும் ஃபாத்திமா இன்வஸ்டிகேடிவ் பீரோவை நடத்தி வருகிறான் ஆத்ரேயா. ஆனால் மாட்டுவது சில்லரை வழக்குகள் மட்டும். என்றாவது ஒரு பெரிய கேஸ் மாட்டும், நானும் ஊர் புகழும் டிடெக்டிவ் ஆவேன் என்ற வெறியுடன் வாழும் ஆத்ரேயா யதேச்சையாக ஒரு வழக்கை துப்பறியப் போக, அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து விஸ்வரூபமெடுத்து அவன் முன் நிற்கிறது. இத்தனை வருடங்களாக தேடிக்கொண்டிருந்த அந்த பெரிய வழக்கு இதுதான் என்று ஆத்ரேயா ஆர்வமாகும்போது, அந்த வழக்கில் ஆத்ரேயாவையே குற்றவாளி என ஜெயிலில் தள்ளுகிறது போலீஸ்.


என்ன நடந்தது என்று நிதானித்து யோசிக்கும்போதுதான், தன்னைச் சுற்றி ஒரு பெரிய சதிவலை பின்னப்பட்டிருப்பதையும் அதையறியாமல் தான் அதில் சிக்கிவிட்டதையும் உணர்கிறான். ஜாமீனில் வெளியே வந்து  நீண்டுகொண்டே போகும் அந்த புதிருக்கான விடையை கண்டுபிடித்தானா என்பதை விறுவிறு திரைக்கதையும் சொல்கிறது ASSA. படத்தின் மிகப்பெரிய பலம் சுவாரசியமான திரைக்கதையும் புத்துணர்ச்சியான எழுத்தும்தான். ஆத்ரேயா யார் என காட்டுவதில் தொடங்கி, அவனிடம் வேலைக்கு வரும் நாயகி, அவர்கள் சந்திக்கும் சின்னச் சின்ன வழக்குகள் என படத்தின் ஆரம்ப காட்சிகளின் நகைச்சுவையும் சுவாரசியமும் சட்டென்று நம்மை படத்தோடு ஒன்றவைக்கின்றன. முதல் காட்சியில் துவங்கும் நகைச்சுவை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து பார்வையாளர்களை கூலாக்கி செல்கிறது.

 

 

agent sai 2



ஆத்ரேயா யதேச்சையாக ஒரு வழக்கை தொடப்போக, அது கொஞ்சம் கொஞ்சமாக பாண்டோரா பாக்ஸ் போல விரிந்துகொண்டே போவதும், அதை மூடப்போகும் ஆத்ரேயாவே ஒருகட்டத்தில் அதில் அடைபட்டுக்கொள்வதும் சுவாரசியமான முடிச்சுகள். ஆனால் படம் ஜெட் வேகமெடுப்பது இரண்டாம் பாதியில்தான். இந்த அத்தனை முடிச்சுகளுக்கும் காரணம் என்ன என்று ஆத்ரேயா தேடத்துவங்கும் இடத்தில் பறக்க ஆரம்பிக்கும் படம் கடைசிவரை அந்த வேகம் குறையாமல் நம்மை கட்டிப் போட்டு விடுகிறது. ஆத்ரேயா தோண்டத் தோண்ட வெளியே வரும் உண்மைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அவை நிஜ சம்பவங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட காட்சிகள் என்று தெரிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும்போது அந்த அதிர்ச்சி இன்னும் கூடுகிறது. புதிருக்கான ஒரு விடை கிடைத்தாலும்  அதில் ஏதோ ஒரு புள்ளிக்கான பதில் தெளிவாகாமல் உறுத்திக் கொண்டே இருப்பதும், அதற்கான பதிலின் மூலமே அந்த முடிச்சு அடுத்த கட்டத்திற்கு போவதும் அட்டகாசமான திரைக்கதையின் வெளிப்பாடு.


பதைபதைப்பை ஏற்படுத்தும் அந்த சம்பவங்களோடு நாயகனின் வாழ்வை சாமர்த்தியமாக கோர்த்திருப்பதும், படத்தின் மையமான உணர்வலைகளை அதனையொட்டியே கட்டமைத்திருப்பதும் பார்வையார்களை படத்தோடு வெகுவாக நெருங்கச் செய்வதோடு உணர்வுப்பூர்வமான ஒரு பந்தத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.  முதல் படத்திலேயே நிறைய அடுக்குகள் உள்ள ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதை சுவாரசியமாகவும் ஜனரஞ்சகமாகவும் கொடுப்பது பெரும் சவால். அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார் ஸ்வரூப். பல வருடங்கள் காத்திருப்பிற்குப் பின் கிடைத்த ஹீரோ வாய்ப்பில் தனது இயல்பான நடிப்பான நகைச்சுவையாலும் முடிந்தவரை முத்திரை பதித்திருக்கிறார் நவீன் பாலிஷெட்டி. அசிஸ்டென்ட் டிடெக்டிவாக வரும் ஸ்ருதி, ஆத்ரேயாவிற்கு உதவும் போலீஸ், கர்னாடக டிடெக்டிவ், நாடக நடிகர், பர்கர் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கும் இன்ஸ்பெக்டர் என சுவாரசியமான பாத்திரப் படைப்பும் நடிப்பும் படத்தை மேலும் அழகாக்குகின்றன. குறிப்பாக கர்னாடக டிடெக்டிவ் பாத்திரம் சீரியஸாக செல்லும் இரண்டாம் பாதியை கலகலப்பாக்குகிறது. சின்ன பட்ஜெட் என்பது ஒளிப்பதிவில் ஆங்காங்கே தெரிகிறது. நேர்த்தியான படத்தொகுப்பும் படத்தின் தன்மைக்கேற்ப பயணிக்கும் இசையும் விறுவிறுப்பை கூட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

 

 

agent sai3



நாயகன் கண்டுபிடிக்கும் பெரும்பாலான விஷயங்கள் எதிரில் இருப்பவர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கொண்டே கண்டுபிடிப்பதுபோல் அமைத்திருப்பது சற்றே செயற்கைத்தனமாய் உள்ளது. அதேபோல, கிட்டத்தட்ட ஒரு பெரிய சிண்டிகேட் போல செயல்படும் இந்த சதிக்கூட்டத்தின் மூளையாக செயல்படுவது யார் என்று தெரிய வரும்போது, ஒரு சிறிய ஏமாற்றமும் வருகிறது. அதற்கு முந்தைய காட்சிகளில் அந்தக் கூட்டத்தை பற்றிய ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்த  விதமும், அவர்கள் செய்யும் அதிர்ச்சிகரமான, சாமர்த்தியான செயல்களும் அவர்கள் குறித்த எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் ஏற்றிவைத்திருக்க, அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக இல்லை அந்த பாத்திரங்களின் கனம். அந்த உண்மைகள் தெரியவரும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமுமே கூட கொஞ்சம் அவசரத்துடன் எடுக்கப்பட்ட உணர்வையே ஏற்படுத்தியது.

இதையெல்லாம் தாண்டி சுவாரசியமான எழுத்து, புத்திசாலித்தனமான திருப்பங்கள், முடிச்சுகள், அதன் மூலம் வெளியே வரும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள், நாயகன் நாயகிக்கு இடையேயான க்ளிஷேக்கள் இல்லாத திரைக்கதை, ஸ்டைலிஷான மேக்கிங் என ஒரு விறுவிறுப்பான சுவாரசியமான க்ரைம் த்ரில்லர் பார்த்து நிறைவைத் தருகிறது ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ் ஆத்ரேயா. மதம் ஆழமாக வேரூன்றி இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், அதைச் சுற்றி நடக்கும் குற்றசெயல்களை மையப்படுத்தி ஒரு கதையை எழுதியதையும், அதனை அடிக்கடி நாம் நாளிதழ்களில் கடந்து செல்லும் ஒரு செய்தியோடு தொடர்புபடுத்தி மிக சுவாரசியமான ஒரு திரைப்படமாக உருவாக்கியதையும் உச்சிமுகர்ந்து பாராட்டலாம்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!