Skip to main content

சமுத்திரக்கனிக்கு ஒரு வேண்டுகோள்! அடுத்த சாட்டை - விமர்சனம் 

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

க்ரைம் த்ரில்லர், பிளாக் காமெடி, ரொமான்டிக் காமெடி என திரைப்படங்களில் பல 'ஜான்ர'க்கள் (genre) உள்ளன. அப்படி வகைப்படுத்தி சொல்லக் கூடிய அளவுக்கு 'சமுத்திரக்கனி' ஜான்ர ஒன்று தமிழில் உருவாகியுள்ளது. ஆம், உலகின் அத்தனை நல்ல விஷயங்களையும் பேசி, கெட்ட விஷயங்களை சாடி, பின்னணி இல்லாதவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, காட்சிக்குக் காட்சி அட்வைஸ் செய்து படம் எடுப்பதுதான் சமுத்திரக்கனி 'ஜான்ர'. சமுத்திரக்கனி இயக்கிய படங்கள், நடித்த படங்கள் என தொடர்ந்த இந்த வகைமை, இன்று யார் அப்படிப்பட்ட படங்கள் எடுத்தாலும் 'என்ன சமுத்திரக்கனி படம் மாதிரி இருக்கு' என்று சொல்லக்கூடிய அளவுக்கு தன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் சமுத்திரக்கனி. சில நேரங்களில் இந்த நல்ல விஷயங்களும் அட்வைஸ்களும் சற்று அதீதமாகிப் படத்தை பாதித்தாலும் அந்தப் பாதையில் அவ்வப்போது பயணிப்பதை நிறுத்தமாட்டேன் என்று 'அடுத்த சாட்டை'யோடு வந்து சொல்கிறார் கனி.

 

samuthira kani



ஒரு அரசு பள்ளி, அதன் குறைகள், நிறைகள், ஆசிரியர்களுக்குள்ளான அரசியல், மாணவர்களுக்கிடையே நிலவும் ஒழுங்கின்மை, ஒற்றுமையின்மை, அவர்களுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமை, அங்கு புதிதாக வரும் இளம், துடிப்பு மிக்க ஆசிரியர், அவர் ஏற்படுத்தும் சீர்திருத்தங்கள், அதற்குக் கிளம்பும் எதிர்ப்புகள், நிகழும் விபரீதங்கள், மாணவர்களின் ஒற்றுமையாலும் உழைப்பாலும் பெறும் பெரிய வெற்றி, மனம் திருந்தும் மாற்றுக்கருத்துடையோர்... என தனது 'சாட்டை'யில் கதை சொல்லி இயல்பான மனிதர்களாலும் சம்பவங்களாலும் நகைச்சுவையாலும் பேசப்பட வேண்டிய பிரச்னையை பேசியதாலும் கவனம் பெற்ற இயக்குனர் அன்பழகனின் 'அடுத்த சாட்டை' இது. மேலே சொன்ன கதையில், 'அரசு பள்ளி'க்குப் பதிலாக 'கலை அறிவியல் கல்லூரி' என்று மாற்றி கொஞ்சம் சாதிப் பிரச்னையை சேர்த்துக்கொண்டால் அதுதான் 'அடுத்த சாட்டை'.

வெற்றி பெற்ற படத்தின் டெம்ப்ளேட்டில் மீண்டும் ஒரு முக்கிய பிரச்னையை பேசும், நல்ல விஷயங்களை பகிரும் இயக்குனரின் சமூக அக்கறையை கண்டிப்பாகப் பாராட்டவேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழும் 100க்கும் மேற்பட்டோர், மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆசிரியர், அந்த ஆசிரியருக்காக எதுவும் செய்யத் துணியும் மாணவர்கள் என பேச வேண்டிய நல்ல விஷயங்களை ஒரு புறமும் பொள்ளாச்சி சம்பவம், கையில் சாதிக் கயிறு கட்டும் பழக்கம், இலங்கை தமிழரை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது என விமர்சிக்கப்பட வேண்டிய விஷயங்களை ஒரு பக்கமும் என இயக்குனர் லிஸ்ட் போட்டு ஸ்க்ரிப்ட் எழுதியிருப்பார் போல... காட்சிக்குக் காட்சி திகட்டத் திகட்ட பாசிட்டிவிட்டியும் அறிவுரையும் கிடைக்கிறது. அதுவும் படத்தின் முதல் பாதியில் நாம் குறுக்கே சென்றால், நம்மையும் நிறுத்தி அட்வைஸ் செய்து விடுவாரோ என்னும் அளவுக்கு ஃபுல் பார்மில் இருக்கிறார் தயாளன் (சமுத்திரக்கனி). நல்ல விஷயங்களின் தொகுப்பை உருவாக்கிவிட்டால் ஒரு நல்ல படம் உருவாகிவிடுமா என்றால் இல்லை என்பதுதான் பதில். அந்த நல்ல விஷயங்களில் பெரும்பாலானவை நம்முடன் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடியவை என்பதும் நாள்தோறும் நாம் கண்டு வந்தவை என்பதும்தான் படத்தின் பலம்.

 

 

thambi ramaiah



தொடர் அறிவுரைகளுடன் செல்லும் படத்தில் நம்மை இணைத்துவைப்பது மாணவர்கள் தொடர்புடைய காட்சிகளில் உள்ள உணர்வுகளும் சிங்கப்பெருமாள் (தம்பி ராமையா) பாத்திரத்தின் வில்லத்தனமான காமெடியும்தான். ஒரு இடைவெளிக்குப் பிறகு தம்பி ராமையாவுக்குக் கிடைத்துள்ள சரியான வாய்ப்பு, மிக சிறப்பாக நடித்து நம்மை சிரிக்கவும் எரிச்சலடையவும் நெகிழவும்  வைத்துள்ளார். சமுத்திரக்கனி, எப்போதும் போல் நல்லவராக நம் மனதில் பதிகிறார், புதிதாக எதுவுமில்லை.இவ்வளவு அறிவுரைகளை ஒருவர் சொல்லச் சொல்ல அவரை வெறுக்காமல் இருப்பதே பெரிய விஷயம். சமுத்திரக்கனிக்கு அது வாய்த்திருக்கிறது. பேருக்கு இருக்கும் நாயகியிடம் காதல் செய்ய மிகவும் கஷ்டப்படுகிறார் சமுத்திரக்கனி. மிக அளவாகத்தான் இருந்தாலும், அவருக்கு ஒரு வேண்டுகோள்... கட்டாயத்துக்காகக் காதல் காட்சிகள் வேண்டாமே... தொண்டன் படத்திலும் இந்த சங்கடம் அவருக்கு இருந்தது. அதுல்யா ரவி, யுவன் உள்ளிட்ட மாணவர்களாக வரும் அனைவரும் அவரவர் பாத்திரத்தில் ஓகே. ஆசிரியர்களில் ஓரிருவர் மனதில் நிற்கின்றனர்.


கிட்டத்தட்ட முழு படமும் அந்தக் கல்லூரி, அதன் சுற்றுவட்டாரத்தில் மட்டுமே நகர்கிறது. கல்லூரி வாசலில் இருக்கும் டீக்கடைக்குக் கூட அது வராதது சற்று அயர்ச்சி. இறுதியில் ஒரு மாணவனுக்கு ஏற்படப்போகும் சோகம், அதற்கு முந்தைய ஒரு காட்சியில் அவன் மகிழ்ச்சியாய் பேசும் போதே தெரிந்துவிடுகிறது. இப்படி, படம் நெடுக நாம் எளிதில் அனுமானிக்கக் கூடிய காட்சிகள் அதிகம். கல்லூரியில் நிலவும் சாதிப் பிரிவினையும் சாதி உணர்வும் இயல்பாகக் காட்டப்படாததால் அதன் தீவிரம் நம்மை வந்தடையவில்லை. உதாரணம்... கல்லூரி முதல்வர் வெளிப்படையாக ஒரு மாணவனை சாதி ரீதியாகத் திட்டுகிறார். இப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளால் அடியில் இருக்கும் உண்மை நம்மை உறுத்தவில்லை. கலை அறிவியல் கல்லூரிகளில் சாதி இருக்கும், ஆனால் எப்படி பின்பற்றப்படும், எந்த வார்த்தைகளால் குறிப்பிடப்படும் என்பதையெல்லாம் இயக்குனர் சற்று உண்மைக்கு நெருக்கமாக எழுதியிருந்தால் பிரச்னையின் வீச்சு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். அதே போல் க்ளைமாக்ஸில் திடீரென வரும் ஒரு பகுதி, கூடுதலாக ஒட்டப்பட்ட உணர்வை அளிக்கிறது.

 

 

adutha satai team



ஜஸ்டின் பிரபாகரன் இசையில் 'வேகாத வெயிலில' பாடல் மட்டும் நம்மை கவனிக்க வைக்கிறது, மற்றவை அனைத்தும் கடந்து சென்றுவிடுகின்றன. ராசமாதியின் ஒளிப்பதிவு கூட, குறைய இல்லாமல் படத்திற்குத் தேவையானதை செய்திருக்கிறது. படத்தை க்ரிஸ்ப்பாகத் தொகுத்து நன்மை செய்திருக்கிறார் நிர்மல்.

'அடுத்த சாட்டை' கொடுத்த அடி 'சாட்டை' கொடுத்ததைப் போல வீச்சுடன் இல்லாவிட்டாலும் மோசமில்லை. கொஞ்சம் சிரித்து, கொஞ்சம் நெகிழ்ந்து, நிறைய அறிவுரைகள் கேட்கத் தயாராக இருப்பவர்கள் கண்டிப்பாக ரசிக்கலாம்.                                                            

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“சுழற்சியை நோக்கி நகரும் விஜய்யின் பின்னால் நான் நிற்பேன்” - சமுத்திரக்கனி திட்டவட்டம்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
samuthirakani about vijay political entry

நடிகர் சமுத்திரக்கனி ஹீரோ, வில்லன், முக்கிய கதாபாத்திரம் எனப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபு திலக் தயாரிப்பில் என்.ஏ. ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (15.03.2024) திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நக்கீரன் ஸ்டூடியோவிற்கு சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி, இசையமைப்பாளர் ரகுநந்தன் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர்.  

அப்போது விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் எப்போதும் விஜய்க்கு ஆதரவு தருவேன். ஒரு படத்துக்கு 200 கோடி சம்பாதிக்கக் கூடிய மனிதன், நடிக்கிறதை நிறுத்துறேன் என சொல்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும். தெலுங்கில் பவன் கல்யாணுடன் வேலை பார்த்திருக்கிறேன். அவரும் அரசியல் தளத்தில் தான் இருக்கிறார். அவர் கூட அப்படி சொல்லவில்லை. கையில் மூனு படம் வச்சிருக்கார். தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களும் அரசியலுக்கு வந்திருக்காங்க. வரேன்னு சொல்லியிருக்காங்க. யாருமே நடிப்பை நிறுத்தவில்லை. விஜய் முழுக்க முழுக்க மக்களுக்காக சேவை செய்கிறேன் என சொல்கிறார். இப்படி சொல்கிற தைரியம் யாருக்குமே வரவில்லை. அந்த தைரியத்திற்கே முதலில் ஒரு சல்யூட். அதன் பிறகு என்ன வேணும்னாலும் குறை சொல்லலாம்.  

படம் இல்லாமல் தோத்து போய் அவர் வரவில்லை. அவர் நிறைய சம்பாதிச்சு வச்சிருக்கார். ஏதோ ஒன்னு செய்வோம் என்றுதானே வருகிறார். அவருக்காக 100 தயாரிப்பாளர்கள் கூட காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சூழலில் அவர் வந்திருப்பது மிகப் பெரிய விஷயம். அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகள், நல்ல விதமாக அமைய வேண்டும். அதற்கு இந்த பிரபஞ்சம் ஆதரவு தர வேண்டும். எல்லாம் கூடி வந்து அவர் நினைக்கிறது இந்த மக்களுக்கு போய் சேரணும். நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான், குறிப்பிட்ட காலம் வரை இந்த சமூகத்திலிருந்து வாங்குங்க. ஒரு காலத்திற்கு பிறகு வாங்கினதை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுங்க. அதுதான் நீ சமூகத்திற்கு வந்ததற்கான ஒரு சுழற்சி. அதை நோக்கி ஒரு மனிதர் நகர்கிறார் என்பது சந்தோஷம். நல்ல தளத்தில் அவர் இயங்கினால் பின்னால் போவதில் தப்பில்லை. நான் கூட போவேன். அதற்கு தானே நாம் ஆசைப்படுகிறோம். 

எல்லா வகையிலும் தமிழக இளைஞர்கள், மக்கள் அனைவரும் பதட்டமாகத்தானே இருக்காங்க. குழப்பமா, சர்ச்சையோடே ஒரு பீதியில் தானே இருக்காங்க. அந்த பீதியை சரி செய்து மக்களை இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய நிலைக்கு யார் வந்தாலும், அவங்க பின்னாடி நிற்பேன்” என்றார். முன்னதாக விஜய் தனது கட்சி பெயர் அறிவித்தபோது, சமுத்திரக்கனி அவரது எக்ஸ் பக்கத்தில், “திரை உலகின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா ” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.