Skip to main content

ஆதார் தேவையா? தேவையற்றதா? - விமர்சனம்

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

aadhaar movie review

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருணாஸ் நாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் படம் ஆதார். அதிலும் அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல், கமர்ஷியல் அம்சங்களை தவிர்த்து எதார்த்தமான உருவாக்கப்பட்டுள்ள ஒரு படம் ஆதார். நீண்ட நாட்களுக்கு பிறகு கதையின் நாயகனாக நடித்திருக்கும் கருணாஸ்க்கு வெற்றியை கொடுத்ததா இப்படம்?

 

படிப்பறிவு இல்லாத கருணாஸ் மற்றும் அவரது மனைவி ரித்விகா ஆகியோர் கட்டடம் கட்டும் தொழிலாளிகளாக தின கூலிக்கு வேலை செய்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரித்விகா குழந்தையை பெற்ற பின் காணாமல் போய்விட்டதாக கணவர் கருணாஸ் கையில் கைகுழந்தையோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இந்த கேசை விசாரிக்கும் போலீசார் கருணாஸின் மனைவி கள்ளக்காதலனோடு ஓடிவிட்டதாக கூறி கேசை க்ளோஸ் செய்து விடுகின்றனர். இதை நம்ப மறுக்கும் கருணாஸ் புகாரை மேல் முறையீடு செய்கிறார். இதையடுத்து உண்மையில் ரித்விகாவுக்கு என்ன நடந்தது? அதை கருணாஸ் கண்டுபிடித்தாரா, இல்லையா? காணாமல் போன ரித்விகா கிடைத்தாரா, இல்லையா? என்பதே பல திருப்பங்கள் நிறைந்த இப்படத்தின் அதிர்ச்சிகரமான மீதி கதை.

 

ஒரு எளிமையான கதையை எதார்த்தம் மாறாமல் அப்படியே நம் வாழ்க்கையில் நடப்பதை போன்று கண் முன் கொண்டு வந்து ரசிக்கும்படி கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ராம்நாத். ஒரு சாமானியன் காவல் நிலையத்தில் கொடுக்கும் புகாரை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்பதை மிகவும் வெளிப்படையாகவும், எதார்த்தமாகவும் அதிர்ச்சி ஏற்படும்படியும் காட்டி இருக்கிறது இந்த ஆதார் திரைப்படம். குறிப்பாக எளிய மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை அப்படியே தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ராம்நாத். கதையையும் கதாபாத்திரங்களையும் மிக அழுத்தமாக படைத்திருக்கும் இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கூட சிரத்தை எடுத்து, அதனை சுவாரசியமாக கொடுத்திருக்கலாம். மற்றபடி தேவையில்லாத பாடல் காட்சிகளோ, சண்டைக் காட்சிகளோ, கமர்சியல் காட்சிகளோ எதுவும் வைக்காமல் தைரியமாக எதார்த்த சினிமாவுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக அமைத்து பார்ப்பவர்களை படத்தோடு ஒன்றிபோக வைக்கிறார்.

 

aadhaar movie review

 

ஒரு ஏழை கட்டிட தொழிலாளியை அப்படியே கண்முன் பிரதிபலித்துள்ளார் நடிகர் கருணாஸ். கொஞ்சம் நரைத்து, கொஞ்சம் கருத்த முடியுடன், பெரிய தாடியுடன், அழுக்குலுங்கி, சட்டை போட்டுக்கொண்டு காலில் செருப்பு கூட இல்லாமல் நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் கட்டிடக் கூலி தொழிலாளியை அப்படியே தன் நடை, உடை, பாவனை மூலம் எதார்த்தமாக வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார் நடிகர் கருணாஸ். இவரது எதார்த்தமான நடிப்பு படத்திற்கு வலு சேர்த்துள்ளது. சில காட்சிகளே வந்தாலும் கவனம் பெறுகிறார் நாயகி ரித்விகா. அதேபோல் சில காட்சிகளே வந்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை இனியா மனதில் பதியும்படி நடித்துவிட்டு சென்றிருக்கிறார். போலீஸ் அதிகாரிகளாக வரும் உமாரியாஸ், பாகுபலி பிரபாகர், அருண்பாண்டியன் ஆகியோர் நாம் தினசரி பார்க்கும் போலீஸ்காரர்களை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கின்றனர். குறிப்பாக இதில் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் அருண்பாண்டியன் அளவான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் வரும் ஸ்ரீதர் மாஸ்டர், பி எல் தேனப்பன் மற்றும் நடிகர் ஆனந்த் பாபு ஆகியோர் ஒரு சில காட்சிகளுக்கு மட்டும் வந்து செல்கின்றனர்.

 

ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடல் மனதை வருடுகிறது. பின்னணி இசை பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சி ஏற்படுத்தி சில இடங்களில் கண்களை கலங்க செய்துள்ளது. அதேபோல் இரவு நேர காட்சிகள் சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

சமூகத்துக்கு தேவையான ஒரு முக்கிய கதையை மிக அழுத்தமாகவும், நெகிழ்ச்சியாகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ள ஆதார் திரைப்படம், திரைக்கதையில் மட்டும் ஏனோ சற்று மெதுவாக நகர்ந்து ஆங்காங்கே அயர்ச்சி கொடுத்துள்ளது.

 

ஆதார் - சமூகத்துக்கு அவசியம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

இரவில் கொட்டும் பனியில் ரேஷன் கடை வாசலில் காத்துக் கிடக்கும் பொதுமக்கள்!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
People waiting at the door of ration shop at night to renew Aadhaar card!

தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதன்மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். இதில் 6 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரத்து 407 நபர்கள் மட்டுமே தங்கள் ஆதார் எண்ணை தங்களது குடும்ப அட்டையோடு இணைத்துள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உணவுப் பொருள் வழங்கல் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு, ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளதாலும், கைரேகைப் பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே கைரேகையைப் பதிவு செய்துள்ளதால், மற்றவர்களும் கட்டாயம் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என தற்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கைரேகை பதிவு செய்யவில்லை என்றால் அவர்கள் பெயர் கார்டில் இருந்து நீக்கப்படும், பொருட்கள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் பதட்டமடைந்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அதாவது, நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு செய்ய யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது. விற்பனை முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை முடிக்க வேண்டும். பயனாளிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் குழப்பமின்றி பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெயர் நீக்கப்படும் என்கிற தகவலை ரேஷன் கடை ஊழியர்கள் திரும்ப திரும்ப பொதுமக்களிடம் கூறி பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் அட்டையில் உள்ள பெரியவர்கள், வயதானவர்கள் சென்று கைரேகை வைக்கின்றனர். அதோடு பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளை லீவு போடவைத்து அவர்களை அழைத்துக்கொண்டு சில பெற்றோர்கள் நியாய விலைக்கடை வாசலில் நின்று கொண்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

People waiting at the door of ration shop at night to renew Aadhaar card!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பல இடங்களில் இரவு நேரங்களில் நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் கைரேகை வைத்துவருகின்றனர். பணியிலும் வயதானவர்கள் வரிசையில் காத்திருந்து கைரேகை வைக்கிறார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். கைரேகை வைக்க இறுதி தேதி என அரசு எதுவும் அறிவிக்கவில்லை, கட்டாயம் உடனே வைக்கவேண்டும் என்றும் சொல்லவில்லை. ஆனாலும், பொருட்கள் வாங்குவதற்கு கைரேகை ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவசியம் பதிவு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

கைரேகை பதிவு செய்யாதவர்களுக்கு அரிசி வழங்கப்படாது என ஊழியர்கள் தொடர்ச்சியாக தெரிவிப்பதாக குற்றம்சாட்டி வரும் மக்கள், இதன் காரணமாக ஆதார் கார்டு கைரேகை வைப்பதற்காக தொடர்ந்து பொதுமக்கள் இரவு எட்டு மணியில் இருந்து தற்போது வரை காத்துக் கிடக்கும் அவல நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.