விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் விழாவை முன்னிட்டு நாளை(09.01.2026) வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது. இதையடுத்து தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் படம் தள்ளிபோவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் புது ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தது.
இதனிடையே சான்றிதழ் வழங்காதது தொடர்பாக அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் வட்டாரத்தில் மத்திய பா.ஜ.க அரசு தான் தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு காரணம் என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ளனர். சினிமா வட்டாரத்தில் திரைத்துறை கஷ்டமாப்ன காலத்தில் இருப்பதாக விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டுகின்றனர். அந்த வகையில் இயக்குநர்கள் அஜய் ஞானமுத்து, ரத்ன குமார், நடிகர் சிபி சத்யராஜ் உள்ளிட்ட பலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ரவி மோகன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மனம் நொறுங்கிவிட்டது. விஜய் அண்ணா... உங்களுக்குப் பக்கபலமாக நிற்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் நானும் ஒருவன். உங்களுக்கு வெளியீட்டு தேதி தேவையில்லை.. நீங்கள்தான் தொடக்கம். வெளியீட்டு தேதி எப்போது வருகிறதோ, அப்போதுதான் பொங்கல் தொடங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவர் நடிப்பில் நாளை பராசக்தி படம் வெளியாகிறது. அதற்கும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
Follow Us