பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் - உபாசனா தம்பதி கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த 2023ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனை குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடனும் கொண்டாட்டத்துடனும் வரவேற்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த தம்பதிக்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அதாவது ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த செய்தியை ராம்சரனின் தந்தையும் பிரபல தெலுங்கு நடிகரரான சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டிருந்தார். மேலும் சிறிய உயிர்களை நம் குடும்பத்தில் வரவேற்பது தூய்மையான மகிழ்ச்சியும் தெய்வீக ஆசிர்வாதமும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் ராம்சரண் - உபாசனா தம்பதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மேலும் ராம் சரண் ரசிகர்கள் உபாசனா பெற்றெடுத்த குழந்தைகள் இருக்கும் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் சூழ்ந்தனர். அங்கு பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதனிடையே ராம்சரண் தனது இரண்டு வயது குழந்தையுடன் மனைவியை பார்க்க மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்தனர். இதனால் கையில் குழந்தையுடன் உள்ளே சென்ற ராம்சரண் ரசிகர்களை பார்த்து சற்று கோபமாகி முறைத்து விட்டு பின்பு உள்ளே சென்றார்.
இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் நிதி அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கியது பலராலும் கேள்விக்குட்படுத்தப்பட்டது. அதாவது கட்டுப்பாடு தன்மை இல்லாமல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ராம்சரணையும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு மீண்டும் அது போல் நடந்து கொண்டதால் அது தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
Follow Us