தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். இவர் தமிழில்  ‘தடையறத் தாக்க’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். பின்னர், தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே போன்ற படங்களிலும் நடித்திருந்தார். தனது தொழில் ரீதியாகச் சிறப்பான முறையில் இவர் செயல்பட்டு வருகிறார். திரைத்துறையில் உள்ள பிரபலங்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளாகும்  சமயத்தில் எந்தவித சிக்கலுக்கும் ஆட்படாமல் இருந்து வருபவர் இவர். 

Advertisment

அந்த வகையில், தொழில் ரீதியாக இவர் தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பிற மொழி படங்களில் நடிகர்கள் நடிக்கும் சமயத்தில் அவர்களுக்கு வசனம் பேசுவதில் சிக்கல் ஏற்படும். அதனால், அவர்கள் வசனங்களைப் பேசாமல் 1,2,3 போன்ற ஏதேனும் எண்கள் அல்லது வேறு வார்த்தைகளைக் கூறி படப்பிடிப்பு நடத்தப்பட்டு, பின்னர் டப்பிங் மூலமாக அந்த வசனங்கள் பேசப்பட்டு, காட்சிகள் நிறைவு செய்யப்படும். இதற்கு ரகுல் ப்ரீத்தி சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  

Advertisment

இது குறித்துப் பேசிய அவர், “நம்மை அளவு கடந்த அன்புடன் வரவேற்கும் ரசிகர்களுக்கு நாம் குறைந்தபட்ச மரியாதையைத் தர வேண்டும். எனக்கு ஏமாற்றத் தெரியாது. எனக்குத் தெரியாத மொழியில் 1,2,3,4 அல்லது ஏபிசிடி என எதையாவது சொல்லி பின்பு லிப் சிங்க் மூலமாகக் காட்சிகளை முடிக்கமாட்டேன். நம்மை வாழவைக்கும் திரையுலகிற்கும், நம்மை நேசிக்கும் ரசிகர்களுக்கு நாம் தரும் குறைந்த பட்ச மரியாதையை அதுவல்ல. குறிப்பாக, வசனங்களை சரியாகப் பேச மட்டுமே மொழி அறிவு முக்கியம் என்பது அல்ல. கதாபாத்திரத்தின் உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த மொழி புரிதல் என்பது மிகவும் அவசியம்” எனத் தெரிவித்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.