வயது மூப்பு காரணமாகவும், மூச்சுத் திணறல் காரணமாகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (101) நேற்று (25-02-26) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, கனிமொழி எம்.பி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இயக்குநர் ரஞ்சித், கவிஞர் வைரமுத்து, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நல்லகண்ணு உடலுக்கு தற்போது அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஓமந்தூரார், அண்ணா, காமராஜர், கக்கன் போன்றோரை பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் எல்லாரையும் சேர்த்து நல்லகண்ணு அவர்களிடம் பார்த்தேன். ஒரு நல்லவராக நேர்மையாக எளிமையாக இருந்தால் மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்பதற்கு நல்லகண்ணு ஒரு எடுத்துக்காட்டு. பெரிய ஆத்மா அவர். தோழர் நல்லகண்ணுவிற்க்கு என்னுடைய வீரவணக்கம்” என்றார். இவர் ஏற்கனவெே தனது எக்ஸ் பக்கம் மூலம் இரங்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us