பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படக்குழு முதல் நாள் முதல் காட்சியை மதுரையில் ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்துள்ளது. பின்பு செய்தியாளர்களை சந்தித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளது. அப்போது ராதிகா பேசுகையில், “எனக்கு எல்லா கதாபாத்திரமுமே ஒரு சவால் தான். ஆனால் மண் சார்ந்த கதாபாத்திரங்கள் பண்ண வேண்டும் என்பது பாரதிராஜா சாரிடம் வந்தது. அவருடைய தாயார் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தான் பசும்பொன், கிழக்கு சீமையிலே படத்தில் வரும் கதாபாத்திரத்தை உருவாக்கினோம். இந்த தாய் கிழவி கதாபாத்திரத்தை என்னால் மறக்க முடியாது. பெண்களுக்காக ஒரு முக்கியமான கருத்தை பேசி இருக்கிறோம்.
சிவகார்த்திகேயன் இன்றைக்கு ஒரு பெரிய ஹீரோ. அவர் நினைத்தால் அவரை வைத்தே படம் எடுக்கலாம், இல்லையெறால் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இது போன்ற ஒரு கதை மக்களிடம் சேர்க்க வேண்டும் என இப்பாத்தை எடுத்திருக்கிறார். அதற்கு என் பாராட்டுக்கள்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், இதே போல் கமல் சார் அவர் சம்பாதித்த எல்லா பணத்தையும் சினிமாவில் தான் போட்டார் என்றார். உடனே அருகில் இருந்த சிவகார்த்திகேயனை பார்த்து எல்லா பணத்தையும் போட்டுறாதீங்க, பிளான் பண்ணி பண்ணுங்க என கலகலப்பாக பேசினார்.
Follow Us