விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால் விஜர் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். ஆனால் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பொங்கலை முன்னிட்டு கடந்த 15ஆம் தேதி தெறி படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார். 

Advertisment

அட்லீ இயக்கத்தில் உருவான படம் தெறி. இப்படத்தில் விஜய்யோடு சமந்தா, எமிஜாக்ஸன், மகேந்திரன், ராஜேந்திரன், ராதிகா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதோடு, நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படமும் தள்ளிப்போவதாக திடீரென தாணு தெரிவித்திருந்தார். இதற்கு காரணமாக புதிய படங்களின் தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, படத்தின் மறுவெளியீடு தள்ளி வைப்பதாக விளக்கமளித்திருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

Advertisment

இதனைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி தெறி படம் ரீ ரிலீஸாகும் என மீண்டும் தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார். பின்பு அதற்கான ட்ரெய்லரையும் வெளியிட்டிருந்தார். இதையடுத்து அதே ஜன.23ஆம் தேதி வெளியாகவுள்ள திரௌபதி 2 படத்தின் இயக்குநர் மோகன் ஜி ஒரு வேண்டுகோளை தாணுவுக்கு வைத்திருந்தார். அதாவது, அவரைப் போன்ற வளர்ந்து வரும் குழுக்களுக்கு ஆதரவளித்து, தெறி படத்தின் வெளியீடை ஒத்திவைக்குமாறும் புதிய தயாரிப்பாளர்களுக்கும் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கும் நிறைய நன்மைகளைச் செய்துள்ள தாணு திரௌபதி 2 பட வெளியீடை பிரம்மாண்டமாக வெளியிட உதவுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.  

இதனை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர் தாணு, “புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே எங்கள்  நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு தெறி திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு அறிவிக்கப்படும்”  எனக் குறிப்பிட்டிருந்தார். பின்பு அந்த முடிவை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திரௌபதி 2 மற்றும் ஹாட் ஸ்பாட் 2  திரைப்படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, வளரும் இயக்குநர்கள், புதிய தயாரிப்பாளர்களிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தெறி திரைப்பட  வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார். இதையடுத்து மோகன் ஜி தாணுவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். 

Advertisment