இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமௌலி இயக்கத்தில் ‘வாரணாசி’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் படப்பிடிப்பிற்கு மட்டுமல்லாமல் எந்த இடத்திற்குச் சென்றாலும் பவுன்சர்கள் பாதுகாப்புடன் செல்கிறார். இது திரையுலகில் பேசுபொருளாக மாறியது. இது குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு, பதிலளித்த அவர், “அன்புடன் என்னை அணுகும் ரசிகர்கள் மற்றும் என் அனுமதியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ரசிகர்கள் குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், என் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதில் விருப்பம் இல்லை. இதற்கு முன்பு, நான் ஒரு நாள் எனது மகளுடன் ஒரு பூங்காவில் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில், அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது. இது போன்ற செயல்களால், என் தனிப்பட்ட பாதுகாப்பு என்பது கேள்விக்குள்ளாகிறது. அதனால், தான் பவுன்சர்கள் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக உடன் இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
இந்த காலத்தில், ரசிகர்களால் திரை பிரபலங்கள் உட்படப் பலரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். ரசிகர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்துவதாக எண்ணி, அவர்கள் செய்யும் செயல்கள் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் அஜித்குமார் கூட அநாகரிகமாக நடந்து கொண்ட ரசிகர்களைக் கடிந்துகொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் ரசிகர்கள் தன் நிலை உணர்ந்து கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.
Follow Us