பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள வரும் படம் ‘தி ராஜா சாப்’. இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். விஷ்வ பிரசாத் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், இயக்குநர் மாருதி என படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குநர் மாருதி, பிரபாஸ் குறித்து பேசுகையில், “தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றபோது ஒருவரிடம் நான் இயக்குநர் என்று கூறினேன். அவர் அப்படியா என கேட்டு மேலேயும் கீழேயும் பார்த்தார். பின்பு என் படத்தின் கதாநாயகன் யார் எனத் தெரியுமா என கேட்டேன். அதற்கு யார் என அவர் கேட்டபோது பிரபாஸ் என்று பதில் சொன்னேன். உடனே அவர் பாகுபலி ஹீரோவா என்று ஆச்சரியப்பட்டார். இதனால் பிரபாஸின் புகழ் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு பழங்குடியின மக்கள் வரை சென்று விட்டது” என்று பேசினார்.
பின்பு அதிரடியாக ஒரு சவால் விட்டார். அதாவது, “பிரபாஸின் ரசிகர்கள் இந்தப் படத்தால் 1% கூட ஏமாற்றம் அடைந்தால் நீங்கள் என் வீட்டிற்கு வந்து கேள்வி கேட்கலாம். வீட்டின் எண் 17 கொல்லா லக்ஸூரியா, கொண்டாப்பூர்” என்றார். இவரது சவால் தென்னிந்திய திரை உலகில் சற்று பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Follow Us