தெலுங்கு மற்றும் தமிழில் கவனம் செலுத்தி வந்த நிதி அகர்வால், கடந்த சில ஆண்டுகளாக லைம் லைட்டில் இல்லாமல் இருந்தார். 2022க்கு பிறகு அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகாத நிலையில் இந்தாண்டு வெளியான பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீரமல்லு’ படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். இப்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘தி ராஜாசாப்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Advertisment

இப்படத்தின் ‘சஹானா சஹானா’ பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் தனியார் வணிக வளாகத்தில் நடந்தது. இதில் நிதி அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்று கொண்டிருந்த நிதி அகர்வால் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கினார். அப்போது சில ரசிகர்கள் அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். இதனால் அசௌகரியத்தை உணர்ந்த நிதி அகர்வால் பவுன்சர்களின் பாதுகாப்புடன் காரில் ஏறி சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரல் ஆகின. முறையற்ற பாதுகாப்பு குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பலரும் விமர்சித்து வந்தனர். 

Advertisment

இந்த நிலையில் சம்பவம் குறித்து குகட்பள்ளி ஹவுசிங் போர்டு போலீசார் தாமாக முன்வந்து வணிக வளாக நிர்வாகத்தினர் மீதும் நிகழ்ச்சி ஏற்பாடளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.