பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு பெரிய படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஒன்று ஜனநாயகன் மற்றொன்று பராசக்தி. இதில் ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்ற அடையாளத்தோடு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருந்தது. இப்படத்தை வினோத் இயக்கியிருக்க கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இப்படம் மாஸ் மசாலா கமர்ஷியல் ஜானரில் அரசியல் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படத்திற்கு தணிக்கை சான்று இன்னும் கிடைக்கவில்லை. மத உணர்வுகள் புண்படுத்தும் காட்சி இருப்பதாகவும் பாதுகாப்பு படைகளின் நிபுனர்கள் ஆலோசனை இல்லாமல் அதன் சின்னம் இருப்பதாகவும் தணிக்கை வாரியம் காரணம் சொல்கிறது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அதன் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுக்கிறது. இதனால் படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
மறுபக்கம் பராசக்தி படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருக்க டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் 1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரிக்க இதற்கும் தணிக்கை சான்று இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் படக்குழு மற்றும் விநியோக நிறுவனங்கள் 10ஆம் தேதி வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளனர். இதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜன நாயகன் படம் தள்ளிப்போனதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதற்கு பின்னால் பிஜேபி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. அதே போல் சினிமா வட்டாரத்திலும் சினிமா கஷ்டமான காலத்தில் இருப்பதாக பல்வேறு திரை பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவு குரல் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. இந்த சூழலில் பராசக்தி படத்திற்கும் இன்னும் தணிக்கை கிடைக்காத சூழலில் இப்படமும் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இதனை வலுப்படுத்தும் வகையில் நெதர்லாந்தில் படத்தை வாங்கிய லினஸ் மீடியா, படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஒரு முக்கியமான அறிவிப்பு. நெதர்லாந்தில் பராசக்தி படம் ரத்து செய்யப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் அனைத்து காட்சிகளையும் ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் ஏற்கனவே டிக்கெட்டு வாங்கியவர்களுக்கு, 10 வேலை நாட்களுக்குள் பணத்தைத் திரும்ப கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
Follow Us